என் மூன்றாவது திருப்புமுனை – விஜய் ஆண்டனி பெருமிதம்
இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தில் விஜய்ஆண்டனி,சுவாசிகா,அஜய் திஷான்,லிஜோ மோல் ஜோஸ்,கருணாஸ்,சக்தி,காவ்யா அனில்,பாலாஜி சக்திவேல்,அருள்தாஸ்,மூர்த்தி, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எஸ் பி தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை விஜய்ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பாத்திமா விஜய்ஆண்டனி தயாரிக்க,மீரா விஜய்ஆண்டனி வழங்குகிறார்.
ஜூன் 19 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நூறு சாமி’ படத்தின் வெளியீட்டிற்கு முன்னரான நிகழ்வு சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் ஜூன் 12 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் படக்குழுவினருடன் வெற்றிமாறன், பா.ரஞ்சித்,ஏ.ஆர்.முருகதாஸ்,சரண்,லிங்குசாமி, கார்த்திக்சுப்புராஜ்,மிஷ்கின்,சதீஷ்குமார்,மதன்,
மந்திரமூர்த்தி,வி.இசட்.துரை,சுப்பிரமணிய சிவா, நித்திலன் சாமிநாதன்,ராஜூமுருகன்,தயாரிப்பாளர்கள்
சி.வி.குமார்தனஞ்ஜெயன்,இசையமைப்பாளர்கள்
எஸ்.எஸ்.குமரன்,சிமோன்,சித்துகுமார் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் ‘நூறு சாமி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாலாஜி ஸ்ரீராமை இயக்குநர் சசி படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமான இசையமைப்பாளர்கள் விஜய்ஆண்டனி,எஸ் எஸ் குமரன், சிமோன்,சித்துகுமார் ஆகியோர் இணைந்து வாழ்த்து தெரிவித்து அறிமுகப்படுத்தினர்.
தயாரிப்பாளர் விஜய்ஆண்டனி வரவேற்று பேசுகையில்…..
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.நான் இதுவரை நிறைய படங்களில் நடித்திருக்கிறேன்.இந்தபடத்தை பார்த்துவிட்டு பலர்,நன்றாக நடித்திருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டார்கள்.என்னை நன்றாக நடிக்கவைத்த இயக்குநர் சசி சாருக்கு நன்றி.இந்தப்படத்தினை இரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இங்கு வருகை தந்திருக்கும் இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம் பேசுகையில்….
இந்தமேடையில் என்னை அறிமுகப்படுத்திய லெஜெண்ட்ஸ் அனைவருக்கும் நன்றி.ஒருநாள் இயக்குநர் சசி போன் செய்து..ஒரு சூழலை விவரித்து பாடலுக்கான மெட்டு வேண்டும் என கேட்டார்.அதுதான் அம்மா அம்மா..எனும் பாடல்.அந்தபாடலின் மெட்டை கேட்டதும் சசி சாருக்கு பிடித்துபோனது.உடனடியாக இந்தபடத்திற்கு நீங்கள்தான் இசையமைப்பாளர் என்று சொன்னார்.இவ்வளவு பவர்ஃபுல்லான திரைப்படத்திற்கு என்மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் சசி சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப்படத்தின் இசை சிறப்பாக அமைந்ததற்கும் இயக்குநர் சசி மற்றும் விஜய்ஆண்டனியின் வழிகாட்டுதல்தான் முதன்மையான காரணம் என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில்….
பொதுவாக இயக்குநர்கள் ஒரு படத்தை இயக்கினால் அந்தப்படத்தின் டைட்டில் அவர்களுடைய பெயருடன் சேரும்.ஆனால் இயக்குநர் சசிக்கு மட்டும்தான் அந்தந்த படத்தின் பெயர் சேரும்.ஏனெனில் எல்லாபடங்களையும் அவர் தன்னுடைய முதல்படத்தை போலவே முழுமையான அர்ப்பணிப்புடன் உழைத்து உருவாக்குகிறார்.
எங்கள் இருவருக்கும் ஒரு பொதுவான விஷயம் இருக்கிறது.நாங்கள் இருவரும் இயக்குநர் கதிரிடம் உதவியாளராக பணியாற்றி இருக்கிறோம்.
இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டேன்.இப்போதுதான் சசி சாரின் திரைப்பயணத்தை பற்றி குறிப்பிட்டார்கள். இத்தனை ஆண்டுகால அனுபவம் பெற்றவரின் படைப்பு போல் தெரியவில்லை.ஒரு புதுஇயக்குநரின் படைப்பு போல் இவ்வளவு சுவாரசியமாக இன்றைய இளம் தலைமுறை இரசிகர்களை கவரும் வகையில் சொல்லவேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருந்தது.இதுதான் அவருடைய தனித்துவம்.
பொதுவாகவே அவருடைய படங்களில் நடிகர்கள் தங்களது திறமையை நன்றாக வெளிப்படுத்துவார்கள். இந்தபடத்திலும் அனைத்து நடிகர்கள்,நடிகைகளும் தங்களது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.அனைவரையும் வாழ்த்துகிறேன்.இந்தப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.
இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில்…..
நூறு சாமி படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைவிட இயக்குநர் சசியை எனக்கு மிகவும் பிடிக்கும்.
நான் உதவிஇயக்குநராக வேண்டும் என வாய்ப்பை தேடும் தருணத்தில் என்னை முதன்முதலாக அமரவைத்து பேசி, சில விஷயங்களை பகிர்ந்துகொண்டு நம்பிக்கையை வழங்கியவர் இயக்குநர் சசி.அந்த தருணத்தில் என்னிடம் அவர் மிகவும் எளிமையான ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு என்னால் உடனடியாக பதிலளிக்க இயலவில்லை.சிறிதுநேரம் கழித்து அவரை மீண்டும் சந்தித்து அவர் கேட்ட கேள்விக்கான பதிலை அளித்தேன்.அப்போது அவர் உன்னிடம் நல்லதொரு குவாலிட்டி இருக்கிறது.தொடர்ந்து முயற்சி செய். வாய்ப்பு கிடைக்கும் என்றார்.அவரிடம் கற்றுக்கொண்ட இந்தப்பாடத்தை இன்றுவரை என் வாழ்வில் கடைப்பிடித்து வருகிறேன்.என்னை தேடி வாய்ப்பு கேட்டு வரும் உதவிஇயக்குநர்களை நேரில் சந்தித்து பேசி அவர்களுக்கு நம்பிக்கையை வழங்குகிறேன்.
நான் மிகவும் உணர்வுப்பூர்வமான நபர்தான்.சிறிய விஷயங்கள் கூட என்னை மிகவும் உணர்வுப்பூர்வமாக மாற்றிவிடும்.’நூறு சாமி’ படத்தை பார்க்கும்போது பல இடங்களில் என்னால் எளிதாக படைப்புடன் தொடர்பு கொள்ளமுடிந்தது.இந்தப்படத்தில் நடிகை சுவாசிகா அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.
படத்தில் இடம் பிடித்த நிறைய விஷயங்கள் எனக்கு பிடித்திருந்தது.படத்தில் பேசப்பட்ட விஷயங்களுக்கு இன்றைக்கும் அதற்கான வேல்யூ இருக்கிறது. அதைப்பற்றி நாம் இன்றும் விவாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது.சமூகத்தில் இதுபோன்ற மாற்றங்கள் உருவாகவேண்டும் என்ற சூழலும் இருக்கிறது. அழுத்தமாகவும்.எளிமையாகவும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் இந்தப்படம் இருக்கும் என்று நம்புகிறேன்.இரசிகர்களுக்கும் இது பிடிக்கும் என்று நம்புகிறேன்.
இந்தபடத்தில் இடம் பிடித்திருக்கும் ‘சீலிங் ஃபேன்’ காட்சியை மிகவும் இரசித்தேன்.இது என்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்துடன் என்னால் உளவியல்ரீதியாக இணைத்து பார்க்கமுடிந்தது.
சசி சார் எத்தனையோ படங்களை இதுவரை இயக்கியிருக்கிறார்.ஆனால் இந்தபடத்திற்குத்தான் எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.எனக்கு அழைப்பு விடுக்கும்போது,’இந்தபடம் உங்களுக்கு பிடிக்கும். நிச்சயம் வாருங்கள்’ என்றார்.அதேபோல் படத்தை பார்த்தேன்.மிகவும் நன்றாக இருக்கிறது.இப்படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்றார்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசுகையில்…..
இந்தப்படத்தில் சிறப்பான விஷயங்கள் நிறைய இருக்கிறது.நான் பிறந்தஊரில் நடந்த நிஜகதை.ஒரு உண்மை சம்பவத்தை படமாக இயக்கியிருக்கிறார் நண்பர் சசி.இதுபோன்றதொரு கஷ்டமான கதையை தயாரித்து நடிக்க ஒப்புக்கொண்டதற்காக விஜய் ஆண்டனிக்கும் நன்றி.படத்தின் உச்சகட்டகாட்சியை பார்க்கும்போது ஏதாவது தவறு நேர்ந்துவிடுமோ..! என்ற பதைபதைப்பு எனக்குள் ஏற்பட்டது.ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு காட்சியை அமைத்து படத்தை சிறப்பாக உருவாக்கி இருக்கிறார்.உச்சகட்டகாட்சியில் ஒரு பதட்டம் இருந்தது.
விஜய்ஆண்டனியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தும்போது நானும் அவருடன் இருக்கிறேன். இதற்காக அவர் ஒரு கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டார்.இருப்பினும் ஒரு தொழில்நுட்பக் கலைஞரை அறிமுகப்படுத்துவதில் அவருக்கு இருந்த ஆர்வமும்,உறுதியும் அப்போது எனக்கு வியப்பாக இருந்தது.
இந்தப்படத்தில் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.குறிப்பாக சுவாசிகா மிக நன்றாக நடித்திருக்கிறார்.பாலு மகேந்திரா படத்தில் ஷோபா எப்படி சிறப்பாக நடித்திருப்பாரோ..!அதேபோன்று இந்த படத்தில் சுவாசிகா நன்றாக நடித்திருக்கிறார்.
பாடலில் சின்னசின்ன விஷயங்களில் கூட அற்புதமான நடித்திருப்பார்.வலி- அவமானம்- என அனைத்து துயரங்களையும் அற்புதமாக முகத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.எனக்குத் தெரிந்து இந்தஆண்டு ராதிகா மேடத்திற்கும்,சுவாசிகாவிற்கும்தான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
எனக்கு முன்னால் சசி இயக்குநராகிவிட்டார்.ஒருசமயம் அவரிடம் நான் இயக்குநராவதற்காக வாய்ப்பை தேடுகிறேன் என்று சொன்னேன்.அப்போது அவர்,’எந்த சூழலிலும் பசியுடன் இருக்காதே.ஏதேனும் நெருக்கடி என்றால்..என்னை சந்திக்கவும்’ என்று நம்பிக்கை அளித்தார்.அப்போது என் மனதில் ஒரு சந்தோஷம் உண்டானது.நாம் உதவி கேட்கிறோமோ… இல்லையோ…நான் உதவ தயார் என்று ஒருவர் சொல்லும்போது மனதில் மகிழ்ச்சியும்,நம்பிக்கையும் உருவாகும்.நாம் கூப்பிட்டால் கடவுள் வந்துவிடுவார் என்றால்…நாம் கடவுளை கூப்பிடவேண்டும் என்ற அவசியம் இல்லை.ஆனால் நான் கூப்பிட்டால் கடவுள் வருவார் என்ற மன மகிழ்ச்சி இருக்கிறதல்லவா..! நம் முதல்வரின் போன் எண் நம்மிடம் இருக்கிறது என்றால் ..ஒரு தைரியம் வரும் அல்லவா..அவருடன் நான் தொடர்பு கொள்கிறோமோ…இல்லையோ…நம்மிடம் அவருடைய தொடர்பு எண் இருக்கிறது…என்ற ஒரு மகிழ்ச்சி இருக்கிறதல்லவா.!அதுபோன்ற சந்தோஷத்தை எனக்கு கொடுத்தவர் சசி.
என்னுடைய முதல் திரைப்படமான தீனா திரைப்படத்தை இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்தியபிறகு கைவிட்டு விடலாமா..!என்ற குழப்பம் ஏற்பட்டது.அப்போது ஒருவிழாவில் இயக்குநர் சசியை சந்தித்தேன். இயக்குநராகிவிட்டதற்கு வாழ்த்து தெரிவித்த அவரிடம் ‘இந்தப்படத்தின் பணிகள் இனி நடைபெறாது’என்று அப்போது நடைபெற்ற விசயங்களையும்..என் மனதில் உள்ள குழப்பத்தையும்..அவரிடம் சொன்னேன். ‘படத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டால்..அதுவே தோல்விக்கான அர்த்தம்.போராடு.நீ நினைத்ததை நூறுசதவீதம் திரையில் வந்துவிடவேண்டும் என்று நினைக்காதே.எழுபது சதவீதம் வந்தால் போதும். மற்றவற்றை இரசிகர்கள் பார்த்துக்கொள்வார்கள்’ என்று எனக்கு நம்பிக்கை அளித்தார்.அதன்பிறகுதான் அந்தப்படத்தை இயக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன்.
சமூகநீதியை பற்றி பேசுகின்ற வெற்றிமாறன் மற்றும் பா ரஞ்சித் ஆகியோரின் படங்களை விட இந்தப்படத்தில் நிறைய விசயங்கள் பேசப்பட்டிருக்கிறது.நம் வீட்டிலேயே ஆண் -பெண் என்ற வித்தியாசம் இருக்கிறது.ஒரு ஆணுக்கு எளிதாக கிடைக்கும் பல விசயங்கள்.. பெண்களுக்கு அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. இந்தவிசயத்தை சசி அற்புதமாக சொல்லி இருக்கிறார். இந்தப்படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது.இரசிகர்களாகிய உங்களுக்கும் இந்தபடம் மனதிற்கு நெருக்கமாகி பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
இயக்குநர் மிஷ்கின் பேசுகையில்…..
நான் வாழ்க்கையில் பார்த்த நூறு சாமிகளில் ஒரு சாமி இயக்குநர் சசி.சினிமாவில் சாமிகள் கிடையாது.மிகவும் கம்மி.ஒரு பத்துபேர் தேறுவார்களா..! என்பதே சந்தேகம்.என்னுடைய 30 ஆண்டுகால சினிமா அனுபவத்தில் மாதத்திற்கு ஒருமுறை என்னுடன் தொடர்புகொண்டு.. என்னை நேரில் சந்தித்து பேசி.. கட்டிதழுவும் ஒரேசாமி இயக்குநர் சசி.
சினிமாவில் நுழைந்து என்ன செய்யப்போகிறோம் என்றால்..ஒரு தேசியவிருதை வாங்குவோம்.ஒரு பத்து ஃபிலிம்ஃபேர் விருதுகள் வாங்குவோம்.இல்லை என்றால்..ஒரு ஆஸ்கார் விருதை வாங்குவோம். ஆனால் ஒருநாள் மரணித்து விடுவோம்.ஆனால் சசி சாகவேமாட்டார்.அவர் ஒரு சாமி.
நான் சசியிடம் உதவியாளராக சேர்வதற்காக அவரை சந்தித்தேன்.அவர் பத்துநிமிடம் பேசிவிட்டு,தற்போது வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார்.மனிதர்களை உற்றுப்பார்த்து கவனித்து அவர்களுக்கு ஏதாவது பிரச்சனையா? என்பதை தாயுள்ளத்துடன் பார்க்கக்கூடிய மனுஷன் சசி.
நான் ஆண்களிடம் அதிசயமாக பார்க்கும் விசயம் என்னவெனில்…அந்த ஆண்களிடம் இருக்கும் பெண்மை தன்மை.சமூகம் ஆண்களை ஆண்களாகவே பார்க்கிறது. பெண்களை பெண்களாகவே பார்க்கிறது.
பெண்மைதன்மை யாரிடமெல்லாம் அதிகமாக இருக்கிறதோ…!அவர்கள் எல்லாம் மிகச்சிறப்பானவர்கள்.இசைஞானி இளையராஜா –
ஏஆர்ரகுமான் போன்றவர்களிடம் இதுபோன்ற பெண்மைதன்மை அதிகமாக இருக்கும்.இதனால் தான் இவர்கள் மிகச்சிறந்த படைப்பாளிகளாக இருக்கிறார்கள். அப்படியானதொரு மிகச்சிறந்த பெண்மைதன்மையுடன் மனிதநேயம் கொண்டவர்தான் சசி.
இந்தப்படத்தின் கதையை எழுதி நிறைவு செய்தவுடன் என்னுடைய மூன்று உதவியாளர்களுக்கு இந்தகதையை அவர் விவரித்தார்.அவரின் இத்தகைய அணுகுமுறை.. அவர் மனித வாழ்க்கையை உற்று நோக்குவதன் மூலமே கிடைக்கிறது என நினைக்கிறேன்.அதன்பிறகு நாங்கள் அனைவரும் இந்தபடத்தை பார்த்தோம்.பார்த்துவிட்டு விவாதித்தோம்.இந்தப்படத்தின் திரைக்கதை மீது எனக்கு மாறுபட்ட பார்வை இருக்கிறது.அதைப்பற்றி சசியிடம் தனியாக விவாதிப்பேன்.
இந்தப்படத்தில் ஒரு தர்மம் இருக்கிறது.இந்த சமுதாயத்தின் விதிகளை எழுதிய ஆண்கள்…இந்த சமுதாயத்தின் சட்டதிட்டங்களை எழுதிய ஆண்கள்… நாம் வாழும் வீதிகளில் இறக்காமல் புதைக்கப்பட்ட பெண்களை எப்படி பார்த்துக் கொள்ளவேண்டும்? என்பதை இந்தப்படம் சொல்கிறது என்றார்.
இயக்குநர் ராஜூமுருகன் பேசுகையில்….
இப்போதெல்லாம் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா..பெரும்பாலும் மிஷ்கினில் தொடங்கி,மிஷ்கினில் நிறைவடைகிறது.
எல்லோரையும்போல எனக்கும் சசி சாரை மிகவும் பிடிக்கும்.இத்தனை ஆண்டுகாலமாக தொடர்ந்து நல்ல படைப்புகளை வழங்கி வருவது என்பது மிகப்பெரிய விசயம்.அவருடைய எல்லாபடத்தில் இருந்தும் ஏதேனும் ஒரு விசயத்தை நாம் எடுத்துக்கொள்ள முடியும்.இந்தப்படத்தில் அவை நிறைய இருக்கிறது. இந்தப்படத்தை பார்த்துவிட்டு நான் இரண்டு நாட்கள் ‘டிஸ்டர்ப்டு’ ஆக இருந்தேன்.
சுனிதா வில்லியம்ஸ் எனும் பெண்மணி விண்வெளிக்கு சென்று 680 நாட்களுக்கு மேல் அங்கு இருந்துள்ளார். இன்றைக்கும் பெண்களை பற்றிய நம்முடைய பார்வை எப்படி இருக்கிறது என்றால்…ஒருகாலத்தில் நாடகத்தில் கட்டியங்காரன் என்பவன் மேடையில் தோன்றி பெண்களைப் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பான்.அதன்பிறகு அச்சு ஊடகம் வெளியான போது..அது கிசுகிசுவாக மாறியது.அதிலிருந்த பெண்களின் பார்வை இன்னும் மோசமானது.சமூக ஊடகங்கள் தற்போது அதிகமாக மாறி இருக்கும் போது பெண்களைப் பற்றிய பார்வை இன்னும் மோசமானதாக மாறிவிட்டது.
ஒரு கள்ளகாதல் தொடர்பான வீடியோவை பதிவேற்றம் செய்தால்…பின்னூட்டத்தில் அந்த பெண்ணைப் பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வந்துகொண்டே இருக்கிறது. அப்போது எனக்கு,’இந்த நாட்டில் கலாச்சார காவலர்கள் அதிகமாகி விட்டார்களோ..!’என்று தோன்றியது. ஆனால் கலாச்சார காவலர்கள் அதிகமாக இருக்கும் இந்ததருணத்தில்தான் பெண்களுக்கு எதிரான வன்முறை- பாலியல் வன்கொடுமை -ஆகியவை தினம்தினம் நடந்துகொண்டே இருக்கிறது.இப்படி ஒரு சூழலில் ‘நூறு சாமி’ திரைப்படம் எனக்கு மிக முக்கியமான திரைப்படமாக தோன்றுகிறது.
இந்தபடம் ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களுக்கான படம்.பெண்கள் பார்க்க வேண்டிய ஆண்களுக்கான படம்.
நீண்டநாள் கழித்து வெளியாகும் அற்புதமான படம் இது. இப்படி ஒரு கதாபாத்திரங்களை உருவாக்கி..கதையை சொல்ல சசியால் மட்டும்தான் முடியும்.
விஜய்ஆண்டனியின் முகத்தை நினைவுப்படுத்தி பார்த்தால்..திரில்லர் திரைப்படங்களுக்கான கதையை எழுதுவதுதான் முதலில் நினைவுக்கு வரும்.ஆனால் ‘நூறு சாமி’ படத்தை பார்த்தபிறகு,அவருக்காக எந்த கதையை வேண்டுமானாலும் எழுதலாம் என தோன்றும். அவ்வளவு அற்புதமாக இந்தபடத்தில் அவர் உட்பட அனைவரும் நடித்திருக்கிறார்கள்.இப்படத்தை தயாரித்து நடித்திருக்கும் விஜய்ஆண்டனிக்கு நன்றி.
ஃபேனிடம் பேசிக் கொண்டிருக்கும் மனுஷி- தகப்பன்களாக மாறக்கூடிய மகன்கள்-எங்கேயோ நடை பயணத்தின்போது நம்பிக்கையை விதைக்கும் மோட்சம்- தேசியக்கொடியை தைப்பதற்காக ஒரு பெண்ணின் வலியை பகிர்ந்து கொள்ளும் ஆசிரியர் – அன்பை தன்னுடைய அன்றாட இயல்பாக்கி கொண்ட ஏழுமலை- என ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்குவது.. சசியால் மட்டும்தான் முடியும்.இந்தப்படம் மிகச்சிறந்த படம்.வணிகரீதியாகவும் வெற்றியை பெறும். அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசுகையில்,
இப்படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து எனக்கு தெரியும்.ஏனெனில் ‘பூ’ படத்திலிருந்து தொடங்கிய சசி உடனான நட்பு இன்றும் தொடர்கிறது. இந்தபடத்திற்கு முதலில் வேறு ஒரு தயாரிப்பாளர்.வேறு ஒருநடிகர் இருந்தார்கள்.அதற்கான பேச்சுவார்த்தை நீண்டுகொண்டே இருந்தது.அந்தத்தருணத்தில் என்னுடன் ஆலோசனை நடத்தினார்.இந்தத்தருணத்தில் எங்களுக்கு ஆபத்பாண்டவனாக வந்தவர்தான் விஜய்ஆண்டனி சார்.
இதற்காக அவர் அந்த தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டிய தொகையை முழுமையாக கொடுத்தார்.அந்தவகையில் இந்தப்படத்தின் முதல் சாமி விஜய்ஆண்டனிதான்.இந்தப்படம் இப்படி திரையில் தோன்றுவதற்கு முழுமுதற்காரணம் விஜய்ஆண்டனி தான்.
இதுதொடர்பாக விஜய்ஆண்டனியிடம் பேசியபோது ‘சசி சாருக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்’ என்றார்.
இந்த ஆண்டு நடிகை சுவாசிகாவிற்கு தேசியவிருது கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இது ஒரு ஆர்ட் பிலிம் அல்ல.பக்கா கமர்ஷியல் திரைப்படம்.கிளைமாக்ஸ் 20 நிமிடங்கள் இரசிகர்களுக்கு பிடிக்கும்.அந்தவகையில் இந்தபடம் வெற்றிகரமான திரைப்படம்.அனைவரும் திரையரங்குகளில் பார்த்து கொண்டாடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
தயாரிப்பாளர் சி வி குமார் பேசுகையில்,
தமிழ்சினிமாவில் 30 வருடங்களாக திரைப்படங்களை இயக்குவது என்பது சாதாரணவிசயம் அல்ல.இதற்கு மிகப்பெரிய முயற்சி இருக்கவேண்டும்.அந்தவகையில் இந்தபடத்தை இயக்கியிருக்கும் சசிசாருக்கு என் வாழ்த்துகள்.
விஜய்ஆண்டனியின் மியூசிக் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைவிட நடிகராக எனக்கு மிகவும் பிடிக்கும் அதைவிட அவர் தயாரிப்பாளராக இருப்பது ரொம்ப பிடிக்கும். தொடர்ந்து வித்தியாசமான களங்கள்-வித்தியாசமான படங்கள்-புதுஇயக்குநர்கள் – என தொடர்ந்து வெற்றிகளை அளித்துவரும் விஜய்ஆண்டனியின் இந்தப் படமும் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்றார்.
இயக்குநர் சசி பேசுகையில்….
இந்தப்படத்தில் இரண்டாம்பாதியில் தான் விஜய்ஆண்டனி வருகிறார்.இப்படத்தின் கதையை கேட்டுவிட்டு,நான் கடைசியில் ஒரேஒரு காட்சியில் வந்தாலும் கூட பரவாயில்லை.நான் இந்தபடத்தில் நடிக்கிறேன் என்றார்.
இப்போதெல்லாம் படம் தொடங்கி 40 நிமிடத்திற்கு பிறகுதான் ஹீரோ வருகிறார்.அதனால் ஒருபடத்தின் வெற்றி பாதிக்கப்படுவதில்லை.அதேபோல் இந்தபடத்தில் கடைசி 40 நிமிடத்தில்தான் விஜய்ஆண்டனி வருகிறார். கண்டிப்பாக இந்தப்படமும் ஒரு வெற்றிகரமான படமாகதான் இருக்கும்.என்னுடைய இந்த உறுதிமொழியை ஏற்று தாராளமாக அனைவரும் ‘நூறு சாமி’ படத்தை காண திரையரங்கத்திற்கு வரலாம்.
இந்தப்படத்திற்கு எனக்கு இரண்டு பாஸ் ( Boss) ஒன்று இந்த கதையை நம்பி முதலீடு செய்து தயாரித்த தயாரிப்பாளர் விஜய்ஆண்டனி.இந்த பாஸ்-படத்தை பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்தார்.
என்னுடைய இரண்டாவது பாஸ் இரசிகர்கள்.அவர்களும் தயாரிப்பாளர் விஜய்ஆண்டனியின் பாராட்டைதான் தெரிவிப்பார்கள் என்று நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன்.
இரசிகர்களிடம் இந்த திரைப்படம் நல்ல திரைப்படம் என்று ஊடகங்களும் அறிமுகப்படுத்தும் என நம்புகிறேன்.
இந்தகதையை நான் எங்கிருந்து எடுத்தேன் என்றால்… தொலைக்காட்சியில் ஒரு ரியாலிட்டிஷோ நடைபெறுகிறது.அந்த ஷோவில் ஒரு அம்மாவும்,மகனும் கலந்து கொள்கிறார்கள்.அவர்கள் பகிர்ந்துகொண்ட விசயத்திலிருந்துதான் இப்படத்தின் கதை உருவானது.
தாயை ஒரு மகன் தெய்வமாகப் பார்த்தான்- அது பிச்சைக்காரன்.
ஒரு மகன்,தாயை மனுஷியாக பார்த்தான்-அது நூறு சாமி.
இந்தகதையின் நிஜநபரான பாஸ்கரை இப்போது மேடைக்கு அழைக்கிறேன்.அவருடைய வாழ்வில் நடைபெற்ற விசயங்கள்தான் இப்படத்தின் கதை.
இந்தபடத்தைப் பார்த்தபிறகு அனைவரும் தங்களது அம்மாவை மனுஷியாக பார்ப்பார்கள் என்றார்.
தயாரிப்பாளர் – நடிகர் விஜய்ஆண்டனி பேசுகையில்,
என்னுடைய வாழ்க்கையில் மூன்று திருப்புமுனைகள். அதில் ஒன்று ‘டிஷ்யூம்’ படத்தில் இயக்குநர் சசி எனக்கு வழங்கிய வாய்ப்பு..இரண்டாவது திருப்புமுனை ‘பிச்சைக்காரன்’.இந்தப்படம் இரசிகர்களின் மனதில் இன்றும் நிலைத்திருக்கிறது.மூன்றாவது திருப்புமுனை.. இந்தப்படத்தில் என்னை ‘லவ்வர்பாய்’ ஆக மாற்றியது. இதன்பிறகு எனக்கு லவ்வர்பாய் கேரக்டர்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் இரசிகர்களாகிய உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.பெண்களுக்கு மிகமிக அவசியமான படம். சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய படம்.உங்களது வீட்டில் அம்மா-அக்கா-தங்கை-என எல்லாருக்குமான மிகமுக்கியமான படம்.இந்தப்படம் உங்களை ஒருபோதும் ஏமாற்றாது
இவ்வாறு அவர் பேசினார்.











