சர்கார் சர்ச்சை – இயக்குநர் ஏ.ஆர். முருகதாசின் அதிரடி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து நவம்பர் 6 தீபாவளியன்று வெளியான திரைப்படம் சர்கார்.
இந்தப் படத்தில் அரசின் நலத்திட்டங்களைத் தவறாகச் சித்திரித்ததாகவும், ஜெயலலிதாவின் இயற்பெயரை வரலட்சுமி கேரக்டருக்கு பயன்படுத்தியதாகவும் கூறி அ.தி.மு.க-வினர் திரையரங்குகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதன்விளைவாக படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தன்னை காவல்துறை கைது செய்யலாம் எனக் கூறி முன்பிணை கோரி இயக்குநர் முருகதாஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், முருகதாஸுக்கு முன் பிணை அளித்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நேற்று (நவம்பர் 27) மீண்டும் நடைபெற்றது. அப்போது, அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ‘சர்கார்’ படத்தில் அரசுத் திட்டங்களை விமர்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அவர் எடுக்கும் படங்களில், அரசின் திட்டங்களையும் அரசையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்க மாட்டேன் என்றும் உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.
இதுதொடர்பாக, முருகதாஸிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டுமென அவரின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்று (நவம்பர் 28) முருகதாஸ் தரப்பில் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில்,
படத்தில் காட்சிகளை வைப்பது என்பது என் கருத்துச் சுதந்திரம். ஒரு படத்துக்காக மன்னிப்பு கேட்பது என்பது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது. எனவே, அரசின் நலத்திட்டங்களை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது. இனி வரும் படங்களில் விமர்சிக்க மாட்டேன் என்ற உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று முருகதாஸ் தரப்பு பதிலளித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அரசின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் அதிரடியாகக் கருத்துத் தெரிவித்திருக்கும் இயக்குநர் முருகதாஸுக்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவுக்குரல்கள் வருகின்றன.










