ஆந்திரா மெஸ் ஆபாசப்படமா?
அறிமுக இயக்குநர் ஜெய் இயக்கியிருக்கும் படம் “ஆந்திரா மெஸ்”
ராஜ் பரத், தேஜஸ்வினி, ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா ஆகியோர் நடித்துள்ள இப்படம் குறித்து இயக்குநர் ஜெய் கூறும் போது,
இப்படத்தின் டைட்டிலில் மீசையைக் குறியீடாக வைத்திருக்கிறோம். ஏனெனில் இந்தப்படம் ஆண்களைப் பற்றிய கதையை மையமாகக் கொண்டது. கொஞ்சம் தவறினால் ஆபாசம் என்று சொல்லிவிடக்கூடிய கதை.
வரது, ரத்னா, ரிச்சி மற்றும் சேது ஆகியோர் தேவராஜ் என்கிற லோக்கல் தாதாவிடம் வேலை செய்கிறார்கள். ஒரு தருணத்தில் வரது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடும் போது, அவனது வாழ்க்கையில் ஒரு மாற்றம் நடக்கிறது. அதன் பிறகு நடக்கிற தொடர்ச்சியான சம்பவங்கள் வரதுவின் வாழ்க்கையை மாற்றியமைக்கிறது. இதனால் அவன், தேவராஜிடம் இருந்து பிரிவதற்கு முடிவெடுக்கிறான்.
சில சம்பவங்களால் வரது மற்றும் அவனது சகாக்கள் அனைவரும் ஒரு குக்கிராமத்தில் வசிக்கிற பழமைவாதியான ஜமீன்தார் மற்றும் ஜமீன்தாரின் அழகிய மனைவியிடம் தஞ்சம் அடைகிறார்கள். அங்கேயே சில நாட்கள் தற்காலிமாக தங்கி பிரச்சனைகளை எதிர்கொள்வது குறித்து யோசிக்கிறார்கள். அந்த அழகும், அமைதியும் நிறைந்த அந்த கிராமம் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வேறுவேறு பாதைய காண்பிக்கிறது.
இந்த நான்கு பேரும் பழையதை எல்லாம் மறந்து விட்டு புத்தம் புதியான வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள். ஆனாலும், இவர்களை எப்படியாவது பழிவாங்க வேண்டுமென்று தேவராஜ் தேடிக்கொண்டிருக்கிறான். வரது மற்றும் அவனது சகாக்கள் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார்களா? தேவராஜ் அவர்களை என்ன செய்தான்? என்பதே படத்தின் கதை.
‘அங்கமாலி டைரீஸ்’, ‘சகாவு’ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த பிரசாந்த் பிள்ளை இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை முகேஷ்.ஜி மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை பிரபாகர் கவனிக்கிறார். குட்டி ரேவதி, மோகன் ராஜன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.” என்றார்.
திருமணத்தை மீறிய பாலியல் உறவை நியாயப் படுத்தும் விதமாக இந்தப்படம் அமைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. எனவே படம் வெளியானால் பலத்த சர்ச்சை உண்டு என நம்பலாம்.











