என் பெயர் சூர்யா படத்துக்கு நடந்த சோகம்
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்திருக்கும் படம் என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா.
தெலுங்கில் வெளியாகும் (மே 4 ) அதேநாளில் தமிழகத்திலும் வெளியாகவிருக்கிறது.
இந்தப்படத்தில் நாயகன் மட்டும்தான் தெலுங்கு, நாயகியாக நடித்திருக்கும் அனு இமானுவேல், துப்பறிவாளன் பட நாயகி, முக்கிய வேடமொன்றில் அர்ஜூன் நடித்திருக்கிறார். அதைவிட முக்கியமாக இந்தப்படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் சரத்குமார்.
நாயகன் தவிர எல்லோரும் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர்கள் என்பதால் இந்தப்படத்தை தமிழ்லும் நேரடிப்படமாகவே எடுத்தார்களாம்.
அதாவது தமிழில் வசனங்கள் பேசி தனியாகப் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்.
ஆனால் தமிழ்த்திரையுலக வேலைநிறுத்தம் ஐம்பதுநாட்கள் நீடித்துவிட்டதால், இந்த்ப்படத்தின் தமிழ்ப்பதிப்புக்கான வேலைகளை மேற்கொள்ள முடியாமல் போய்விட்டதாம்.
அதேசமயம், தென்னிந்தியா முழுக்க ஒரேநாளில் வெளியீடு என்ற முடிவையும் மாற்ற முடியாது என்பதால், டப்பிங் படமாகவே வெளியிட முடிவு செய்துவிட்டார்கள்.
தமிழகத்தில் இந்தப்படத்தை வெளியிடும் சக்திவேலன் இதுபற்றிக் கூறும்போது, பொதுவாக டப்பிங் செய்யும் படங்களையே நேரடிப் படம் போல வெளியிடுவார்கள், இந்தப்படத்தை நேரடியாக எடுத்தும் சந்தர்ப்ப சூழ்நிலையால் டப்பிங் படமாக வெளியிட வேண்டியிருக்கிறது என்று சொல்லி வருத்தப்பட்டார்.











