கங்கனா ரனாவத்தின் அட்டகாசங்கள் – கலங்கி நிற்கும் தயாரிப்பாளர்
ஒரு மலையாள உதவி இயக்குநர் ஒரு திரைப்படத்துக்கான கதையை ஒரு தயாரிப்பாளரிடம் சொல்கிறார்.அந்தக் கதை அந்தத் தயாரிப்பாளருக்கு மிகவும் பிடித்துப் போகிறது.அதனால்,ஏற்கெனவே தனு வெட்ஸ் மனு படத்தில் இணைந்து நடித்திருந்த மாதவன் கங்கனா ரனாவத் ஆகியோரை நடிக்க வைத்து அந்தப் படத்தை எடுக்க தயாரிப்பாளர் விரும்புகிறார்.
மாதவன், கங்கனா ரனாவத் ஆகியோரிடம் அந்தக் கதை சொல்லப்படுகிறது.இருவருக்குமே கதை பிடித்துவிட நடிக்கச் சம்மதம் சொல்கிறார்கள்.
அதேசமயம் கங்கனா ரனாவது ஒரு நிபந்தனை விதிக்கிறார்.இந்தக் கதை நன்றாக இருக்கிறது இதை இயக்குநர் ஏல்.எல்.விஜய் இயக்கவேண்டும் என்று சொல்கிறார்.ஏனெனில் அவருடைய இயக்கத்தில் தலைவி படத்தில் நடித்திருந்தார் கங்கனா ரனாவத்.அப்படத்தில் பணியாற்றிய போது இயக்குநர் ஏல்.எல்.விஜய்யின் பழக்க வழக்கங்கள் அவருக்குப் பிடித்துப் போனதால் அவரே இந்தப்படத்தை இயக்க வேண்டும் என்கிறார்.
தயாரிப்பாளரும் அதற்கு ஒப்புக்கொண்டு கதை கொடுத்த உதவி இயக்குநரை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்து கதையை மட்டும் வாங்கிக் கொண்டு அவரை அனுப்பிவிடுகிறார்.
அடுத்து படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்படுகிறது.அப்போது, மேடத்துக்கு மும்பையில் இருந்துதான் கேரவன் வரவேண்டும் என்று கங்கனா ரனாவத் தரப்பில் கறாராகச் சொல்லப்படுகிறது.ஒன்றுக்கு மூன்று மடங்கு செலவு என்றாலும் வேறு வழியில்லை செய்துவிடுங்கள் என்கிறார் தயாரிப்பாளர்.
ஒரு சுபயோக சுப தினத்தில் படம் தொடங்குகிறது.
தொடங்கிய நாளிலேயே தயாரிப்பாளருக்குப் பெரும் அதிர்ச்சி. கங்கனா ரனாவத் படப்பிடிப்புக்கு வரும்போது அவருடம் பதினைந்து பேர் வருகிறார்கள்.அவர்கள் மட்டுமின்றி ஆயுதந்தாங்கிய அரசுப்படை வீரர்கள் ஐந்து பேர் வருகிறார்கள். எல்லோருக்குமான போக்குவரத்து, உணவு உபசரிப்பு ஆகியனவற்றிற்காக மட்டும் ஒரு நாள் செலவு ஐந்து இலட்சம் ரூபாயாம்.
தயாரிப்பாளர் திடுக்கிட்டுப் போனாலும் படம் தொடங்கியாயிற்றே வேறு வழியில்லை எனத் தொடருகிறார்.
படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறார். ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் மயங்கி விழாத குறை.இது முன்பே தெரிந்திருந்தால் இவரை நடிக்க வைத்திருக்கவே வேண்டாமே என்று புலம்புகிறார்கள்.
புலம்புவதைத் தவிர அவர்களால் வேறு ஒன்றும் செய்யமுடியாதே?
அவர் சொன்னபடி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுவிட்டார்.
சுமார் இருபத்தைந்து நாட்கள் படப்பிடிப்பு நடந்ததோடு நின்றிருக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியாக வேண்டும். வெறும் நடிகையாக இருக்கும்போதே தேதிகள் தருவதில் சிக்கல் இப்போது பாராளுமன்ற உறுப்பினராக வேறு ஆகிவிட்டார்.எப்போது தேதி தருவாரோ? அப்படியே தந்தாலும் படப்பிடிப்புக்கு வரும்போது என்னென்ன செய்வாரோ? என்கிற அச்சத்தில் இருக்கிறது படக்குழு.
ஏ.எல்.விஜய் இயக்கம் மாதவன் நாயகன் கங்கனா ரனாவத் நாயகி என்கிற கூட்டணியில் எடுக்கப்படும் படம் நமக்குப் பெருமையும் புகழும் தரும் என்று ஆசைப்பட்டு ஓர் உதவி இயக்குநரின் கனவில் மண்ணைப் போட்டு படத்தைத் தொடங்கிய அந்தத் தயாரிப்பாளர் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவி.
இப்போது படத்தை முழுமையாக முடிக்கும்போது ஆகிற செலவுக்கும் வியாபாரத்துக்கும் சம்பந்தமே இருக்காதே என்று வருந்திக் கொண்டிருக்கிறாராம்.










