பொன்னியின் செல்வன் 2 – கார்த்தி மறுப்பு மணிரத்னம் புதுமுடிவு
இரண்டு பாகங்களாகத் தயாரான படம் பொன்னியின்செல்வன். முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. இந்தப்படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.
முதல்பாகத்தை முடிக்கும்போதே இரண்டாம்பாகத்தையும் இறுதி செய்துவிட்டார் மணிரத்னம். அதை அப்படியே வெளியிட்டுவிடுவதுதான் திட்டம்.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் முதல்பாகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால்,ஏற்கெனவே வேண்டாமென நிறுத்தி வைத்த கார்த்தி அதாவது வந்தியத்தேவன் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை இப்போது படமாக்கத் திட்டமிட்டாராம் மணிரத்னம்.
அவரை வைத்து பத்துநாட்கள் படப்பிடிப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டதாம். ஆனால், கார்த்தி வரிசையாகப் படங்கள் வைத்திருப்பதால் மீண்டும் பொன்னியின்செல்வன் படத்துக்காக முடிவளர்ப்பது இயலாத காரியம் என்று சொல்லிவிட்டதாகத் தகவல்.
அதனால், கார்த்தியை விட்டுவிட்டு விக்ரம், ஜெயம்ரவி ஆகியோரை வைத்து புதிதாகப் படமாக்க முடியுமா? என யோசித்தார்களாம். அவர்களும் கார்த்தி போலவே கழன்று கொண்டார்களாம்.
அதனால், நடிகர்களை விட்டுவிட்டு ஐஸ்வர்யாராயை மட்டும் வைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தலாம் என்று முடிவெடுத்துவிட்டாராம் மணிரத்னம்.
மும்பை போய் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிடுவது திட்டமாம். அதற்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட குழுவினருக்குச் சொல்லப்பட்டிருக்கிறதாம்.
ஐஸ்வர்யாராய் கொடுக்கும் தேதிகளையொட்டி படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று சொல்கிறார்கள்.










