சினிமா செய்திகள்

சூர்யாவின் புறநானூறு தள்ளிப்போனது ஏன்? – நீண்ட விளக்கம்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம், 2020 ஆம் ஆண்டு வெளியானது.அந்தப் படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தேசிய விருதையும் வென்றது.

அதையடுத்து இரண்டாவது முறையாக சூர்யாவும், சுதா கொங்கராவும் இணைவதாக கடந்தாண்டு அக்டோடர் மாதம் அறிவிக்கப்பட்டது.

2023 அக்டோபர் 26 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில்…

சூர்யாவின் திரையுலகப் பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில் ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் ஒன்று. இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் மிகவும் சவாலான பாத்திரங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் , விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100 ஆவது படமிது. இந்தத் திரைப்படத்தை சூர்யாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா, சூர்யா மற்றும் இராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

என்று கூறப்பட்டிருந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.கடைசியில் மார்ச் 27 அன்று சென்னையில் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில்,நேற்று முன் தினம் (மார்ச் 18) திடீரென சூர்யாவும், இயக்குநர் சுதா கொங்கராவும் இணைந்து கையொப்பமிட்டு ஒரு பதிவை வெளியிட்டனர்.

அதில்,புறநானூறு படப்பிடிப்புக்கான முன் தயாரிப்புப் பணிகளுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.இப்படத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றுவது சிறப்பு வாய்ந்தது. இந்தல் கூட்டணி இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதும் கூட.எங்களது சிறந்த படைப்பை உங்களுக்குக் கொடுப்பதற்காகப் பணியாற்றி வருகிறோம். விரைவில் அடுத்தகட்ட பணிகளும், படப்பிடிப்பும் தொடங்கும். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்தத் தகவல் வெளியானதும்,இந்தப்படத்துக்குத் தேதிகள் தருவதை சூர்யா தள்ளிப்போட்டுக் கொண்டே வந்ததால் கோபமான சுதாகொங்கரா வேறு பட வேலைகளுக்குப் போய்விட்டார் என்றும் இந்தப்படம் கைவிடப்பட்டுவிட்டது என்றும் பல்வேறு வதந்திகள் ரெக்கை கட்டிப் பறக்கத் தொடங்கிவிட்டன.

இந்த அறிவிப்பு எதனால் வந்தது? உண்மையில் என்ன நடக்கிறது? என்பதை விசாரித்த போது கிடைத்த தகவல்கள்….

இப்படத்தில்,சூர்யா கல்லூரி மாணவராக நடிப்பதால் மதுரை அமெரிக்கன் கல்லூரி உட்பட சில கல்லூரிகளில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.அதனால் கல்லூரி விடுமுறைக் காலத்தில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.இவர்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருந்த அதே நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகள் உச்சத்தில் இருக்கும். அந்நாட்களில் படப்பிடிப்பு நடத்தவியலாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஜூலையில் ஓர் இந்திப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சூர்யா தேதிகள் கொடுத்துவிட்டார்.அத்னால் அதற்கு முன் படப்பிடிப்பை முடித்தாக வேண்டும் என்கிற நிலை.ஆனால், இங்கு ஏப்ரல்,மே மாதங்களில் கல்லூரிகளில் படப்பிடிப்பு நடத்தவியலாத நிலை,ஜூன் மாதம் மட்டும்தான் கையிலிருக்கிறது.ஒரு மாதத்துக்குள் படப்பிடிப்பை முடிக்க முடியாது என்கிற நிலை ஏற்பட்டதால் படப்பிடிப்பைத் தள்ளி வைத்திருக்கிறார்கள் என்று படக்குழு தரப்பில் சொல்லப்படுகிறது.

இதுவும் ஒரு காரணம் இதைவிட முக்கியமான காரணம் இன்னொன்றும் இருக்கிறதாம்.அது என்னவெனில்…

இந்தப்படம் 1960 காலகட்டங்களில் நடப்பது போல் எழுதப்பட்டுள்ளது. கல்லூரி மாணவராக சூர்யா நடிக்கிறார்.அந்தக்கால கட்டத்தைத் திரையில் கொண்டு வரவேண்டுமானால் பெரிய பெரிய அரங்குகள் அமைத்துத்தான் படப்பிடிப்பு நடத்தியாக வேண்டும். அந்த அரங்குகள் ஒவ்வொன்றும் பல கோடி செலவு பிடிக்கக்கூடியவை.இதனால் படப்பிடிப்புச் செலவு பன்மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

இயக்குநர் சுதா கொங்கரா எப்போதும் திரைக்கதை உருவாக்கத்தில் அதிக அவகாசத்தையும், சிரத்தையும் எடுத்துக் கொள்வது வழக்கம்.முழுமையான திரைக்கதை மற்றும் வசனங்கள் தயாரான பிறகு திரைக்கதை படிப்பு, நடிப்புப் பயிற்சி, குழு உரையாடல் ஆகியனவற்றைச் செய்து நன்றாகத் தயாரான பின்பே படப்பிடிப்புக்குச் செல்லும் வழக்கம் உடையவர்.

இந்தப்படத்துக்கும் அதுபோல் பணியாற்றிவிட்டுப் பார்த்தால் படம் சுமார் மூன்றரை மணி நேரம் வருகிற மாதிரி இருந்ததாம்.ஒரு நாளைக்கு சுமார் நாற்பது இலட்சம் செலவாகும் என்கிற நிலையில் இப்போதுள்ள திரைக்கதைப் படி படப்பிடிப்பு நடத்தினால் சுமார் நாற்பதிலிருந்து ஐம்பது கோடி வரை அநியாயச் செலவாகிவிடும் என்கிற நிலை. இதனால் இரண்டரை நேரம் வருகிற மாதிரி திரைக்கதையைச் சுருக்கிப் பார்த்திருக்கிறார்காள்.அப்படிச் செய்யும்போது, திரைக்கதையோட்டத்தில் சிக்கல்,எந்தக்காட்சியைத் தூக்கினாலும் தொடர்ச்சி கெட்டுப் போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதனால் அதைச் சரி செய்ய நிறைய கால அவகாசம் தேவை. படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டும் திரைக்கதையைச் சரி செய்ய முடியாது என்கிற நிலை.

இதனால் எந்த அவசரமும் வேண்டாம்.முதலில் உள்ளடக்கம் பலவீனம் ஆகிவிடாதபடி திரைக்கதையைச் சரி செய்வோம்.அதன்பின் படப்பிடிப்பைத் திட்டமிட்டுக் கொள்ளலாம் என சூர்யா சுதாகொங்கரா ஆகிய இருவரும் பேசி முடிவு செய்துவிட்டனராம்.

இந்தக் காரணங்களால் தான் புறநானூறு படப்பிடிப்பு காலவரையறையின்றித் தள்ளிப் போயிருக்கிறது. ஆனால், நிச்சயம் படம் நடக்கும் என்கிறார்கள்.

Related Posts