ஐந்து மொழிகளில் உருவாகும் புதியபடம் – இன்று தொடக்கம்
அறிமுக இயக்குநர் ஷரீஃப் எழுத்து மற்றும் இயக்கத்தில் தயாராகும் படம் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’.
இத்திரைப்படத்தில், கே.எஸ்.ரவிக்குமார், ரச்சிதா மகாலட்சுமி, உதயா, ஜனனி, தினேஷ், திவ்யா கிருஷ்ணன், அர்ஷத், கே பி ஒய் வினோத், ரஃபி, ‘புல்லட்’ சமி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.
கே ஜி ரத்தீஷ் ஒளிப்பதிவாளராகவும், அஜித் படத்தொகுப்பாளராகவும், டிஜிட்டல் மீடியா மூலமாக பிரபலமான அறிமுக இசையமைப்பாளர் ‘இசை பேட்டை’வசந்த் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.வேணு கலை இயக்கத்தையும், ஓம் பிரகாஷ் சண்டைப்பயிற்சியையும், ‘கலைமாமணி’ஸ்ரீதர் நடனத்தையும் கவனிக்கிறார்கள்.
ஆடை வடிவமைப்பாளராக ஈகா பிரவீனும், தயாரிப்பு நிர்வாகியாக நந்தகுமாரும் இத்திரைப்படத்தில் பணியாற்றுகின்றனர்.
ஐமேக் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்கை ஃபிரேம் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் சார்பில் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோர் தயாரிக்கின்றனர்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்களைச் சுற்றி நடைபெறும் பல்வேறு சம்பவங்களை ஹாரர் பின்னணி கொண்ட திரைப்படமாக உருவாக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். உள்ளது. இத்திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக தமிழ்,கன்னடம்,தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக உள்ளது.
இந்திய சினிமா இரசிகர்களுக்கு இத்திரைப்படத்தின் மூலம் புதுவிதமான அனுபவத்தை வழங்க படக்குழு தயாராகியுள்ளது.
இன்று, படத்தில் நடிக்கும் கே.எஸ் ரவிக்குமார் ரச்சிதா மகாலட்சுமி மற்றும் பல நட்சத்திரங்கள், படக்குழுவினர் முன்னிலையில் இத்திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது.
படத்தின் பூஜை நிறைவுற்றவுடன் முதலாவதாகப் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்,
“இந்தப்படத்தின் கதையைக் கேட்டவுடன் வித்தியாசமான ஹாரர் கதையாக இருந்தது.என்னுடைய கதாபாத்திரம் எனக்குப் பிடித்திருந்தது.மேலும் இந்தத்திரைப்படம் இளைஞர்களுக்கான திரைப்படமாக உருவாகிறது.இயக்குநர் ஷரீஃப் இந்தத்திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்,” என்றார்.
அடுத்ததாகப் பேசிய ரச்சிதா மகாலட்சுமி,
”இந்தப்படம் எனக்கு ஒரு புதிராகவே உள்ளது. கடைசி நிமிடத்தில் படத்தின் கதையைக் கூறினார்கள். கதை பிடித்திருந்ததாலும் படத்தில் நடிக்கும் சிறந்த நட்சத்திரங்களாலும் நடிக்க ஒத்துக் கொண்டேன். படத்தின் கதை ஹாரர் கதையம்சத்தை கொண்டது. உங்கள் அனைவரது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் திரைப்படமாக இருக்கும்” என்றார்.
பின்னர் பேசிய இயக்குநர் ஷரீஃப்,
யூ ஆர் நெக்ஸ்ட் திரைப்படத்தின் மூலம் நான் தமிழ்த் திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகம் ஆகின்றேன். என்னையும் என் கதையும் நம்பி இந்தப்படத்தைத் தயாரிக்க ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர்கள் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகிய இருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல இங்கு வந்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர்,நடிகைகளுக்கும் ஊடகத்துறையினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.











