ஜெ.தீபா வழக்கு போட்டாலென்ன? தலைவி படம் தொடங்கிய ஏ.எல்.விஜய்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் தமிழிலும், ‘ஜெயா’ என்ற பெயரில் இந்தியிலும் இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்குகிறார். இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடிக்கிறார்.

Thalaivi Start
இதேபோல் கௌதம் வாசுதேவ் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதளத் தொடராகத் தயாரிக்க இருப்பதாகவும் அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய அனுமதியில்லாமல் ‘தலைவி’ படத்தையும், இணையதளத் தொடரையும் தயாரிக்கத் தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு,நவம்பர் 5 ஆம் தேதி நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் தனக்குத் தெரியும் என்றும், படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தையும் சேர்க்க வாய்ப்புள்ளதால், தன்னுடைய அனுமதி இல்லாமல் படங்கள் எடுக்க அனுமதிக்கக் கூடாது என்றும் தீபா தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், இந்தக் கதையில் தங்களது குடும்ப அந்தரங்கத்தைப் பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்படலாம் என்று அச்சம் தெரிவித்த தீபா தரப்பு, ஜெயலலிதாவின் கண்ணியத்திற்குப் பாதிப்பில்லாமல் இத்திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதைச் சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, இது தொடர்பாக நவம்பர் 14 ஆம் தேதிக்குள் பதிலளிக்க இயக்குநர்கள் விஜய் மற்றும் கௌதம் மேனன் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டார்.
இதைப் பற்றிக் கவலைப்படாமல் நவம்பர் 10 அன்று, தலைவி படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.











