சென்னைப் பெண்ணுக்கு சிக்கல் – களமிறங்கிய ஸ்ரீரெட்டி
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. நடிக்க வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னைப் பயன்படுத்திவிட்டு ஏமாற்றிய தெலுங்கு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். தமிழ் நடிகர்கள், இயக்குநர்களும் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.
ஆந்திராவில் பாதுகாப்பு இல்லை என்றும், சென்னையில் நிரந்தரமாக குடியேறப்போகிறேன் என்றும் அறிவித்த ஸ்ரீரெட்டி புதிய தமிழ்ப் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.
ஸ்ரீரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுக்கின்றனர். படத்துக்கு ‘ரெட்டி டைரி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தில் ஸ்ரீரெட்டி நடிகையாகவே வருகிறார்.
படங்களில் நடிப்பதோடு சமூக சேவைப் பணிகளில் ஈடுபடப் போவதாகவும் பாலியல் தொல்லைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கப்போவதாகவும் ஸ்ரீரெட்டி அறிவித்து உள்ளார்.
செக்ஸ் தொல்லைகளைச் சந்திக்கும் பெண்கள் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறும் கூறினார்.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண், அலுவலக மேலாளர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்றும், அந்த நிறுவனத்தின் பெயர், அவரிடம் தவறாக நடக்க முயன்றவரின் பெயர் ஆகியனவற்றைக் குறிப்பீடு ஸ்ரீரெட்டிக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
அதனை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்ரீரெட்டி, பாலியல் தொல்லை கொடுத்த அந்த மேலாளருக்கு சென்னை பெண்கள் செருப்படி கொடுக்க வேண்டும் என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.
அதை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.இச்செயல், இதுபோன்று செயல்படுகிறவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.











