சிம்பு சம்பளத்தால் சிக்கல்
மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு பேச்சு வந்தது. இப்போது அது நடைமுறைக்கு வந்திருக்கிறது என்று சொல்லப்பட்டது. சிம்புவிடம் ஒரு கதையை மிஷ்கின் சொல்லியிருக்கிறார். அது அவருக்குப் பிடித்திருக்கிறதாம். அதனால் விரைவில் அவர்கள் இணையும் படம் குறித்த அறிவிப்பு வரும் என்கிற பேச்சு வந்தது.
மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் புதியபடத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்திருக்கிறது என்றும் சொல்லப்பட்டது.
இப்படம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இப்போது ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இப்படத்துக்காக சிம்புவுக்கு பத்து கோடி சம்பளம் என்றும் மிஷ்கினுக்கு எட்டு கோடி சம்பளம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த பதினெட்டு கோடி போக மற்ற நடிக நடிகையர் சம்பளம் மற்றும் படமெடுக்கும் செலவு ஆகியனவற்றிற்காக பதினெட்டு கோடி வேண்டும் என்று மிஷ்கின் தரப்பில் கேட்டிருக்கிறார்கள்.
மொத்தம் முப்பத்தியாறு கோடி என்று சொன்னதால் படத்தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியிருக்கிறதாம்.
செலவைக் குறைத்தால் படமெடுக்கலாம் என்று நிறுவனம் சொல்லிவிட்டதாகத் தெரிகிறது.
ஆனால், சிம்புவோ மிஷ்கினோ தங்கள் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ளத் தயாராக இல்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் அந்தப்படம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.











