சாத்தான் தி டார்க் – திரைப்பட விமர்சனம்
கடவுள் நம்பிக்கை போல் சாத்தான் நம்பிக்கையும் மக்களிடம் இருந்திருக்கிறது.அவர்கள் சாத்தானுக்கு மனித உயிர்களைப் பலி கொடுக்கும் அளவுக்குத் துணிந்தவர்கள்.அம்மக்கள் வசிக்கும் கிராமத்தில் பல்லாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பல மர்ம மரணங்கள் நடக்கின்றன.அவற்றை விசாரிக்க காவல்துறை வருகிறது.அவர்களுடைய விசாரணையில் பல உண்மைகள் வெளியாகின்றன.இன்னொரு பக்கம் கதாநாயகனும் இந்த விசாரணைக்குள் வந்துவிடுகிற நிகழ்வுகளும் நடக்கின்றன.அவை என்னென்ன? தொடரும் மரணங்களைத் தடுத்து நிறுத்த காவல்துறையும் கதாநாயகனும் என்னவெல்லாம் செய்கிறார்கள்? என்பதுதான் படம்.
கதாநாயகன் என்றதும் வாட்டசாட்டமான இளைஞர் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள்.இந்தப்படத்தில் நாயகன் பள்ளிமாணவர்.நாயகியும் பள்ளி மாணவிதான்.மாணவராக எஃப் ஜெவும் மாணவியாக ஐராவும் நடித்திருக்கிறார்கள்.
படத்தில் மிக முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருப்பவர் ஐராவின் அம்மாவாக நடித்திருக்கும் மோன பத்ரே.வினோதமாக நடவடிக்கைகளில் ஈடுபடுவது தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வது என்று மிகவும் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்து நம்மையும் பயமுறுத்தியிருக்கிறார்.
படத்தின் இறுதியில் வரும் சாந்தினி தமிழரசனுக்கு முக்கியமான கதாபாத்திரம்.அதற்கு அவர் சரியாகப் பொருந்தியிருப்பது அவருக்கும் படத்துக்கும் பலம்.
கதையில் இருக்கும் அச்ச உணர்வுகளைக் காட்சிகளிலும் காட்டி மேலும் பயமுறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் பாலா ஜி.ராமசாமி.கதைக்களமும் அதில் வருகிற வீடும் அவருக்கு மிக வசதியாக அமைந்திருக்கிறது.அவற்றை வைத்தே அச்சமூட்டுகிறார்.
இதுபோன்ற படங்களுக்கு பின்னணி இசை மிக மிக முக்கியம்.அதை உணர்ந்து இசைத்திருக்கும் இசையமைப்பாளர் அஷ்வின் கிருஷ்ணா படபடப்புடனும் பதட்டத்துடனுமே படத்தைப் பார்க்க வைத்திருக்கிறார்.
ராஜ்குமார் மற்றும் கோவை அபிஷேக் ஆகிய இருவரும் படத்தொகுப்பாளர்களாகப் பணியாற்றியிருக்கிறார்கள்.முற்காலக் கதைக்கும் தற்காலக் கதைக்குமான தொடர்பை சரியாகச் சொல்லத் திணறியிருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் மணிகண்டன் ராமலிங்கம்.மர்மமரணங்கள் எப்படி நடக்கின்றன? அவற்றை எப்படித் தடுத்து நிறுத்துகிறார்கள்? என்பனவற்றைச் சொல்லிவிட்டார் என்றாலும் மர்ம மரணங்களின் பின்னணி என்ன? என்கிற முக்கியமான கேள்விக்கான விடை அடுத்தபாகத்தில் என்று சொல்லிவிட்டார்.அந்தவிடையும் சாந்தினி தமிழரசனின் வேடமும் அடுத்த பாகத்தை எதிர்நோக்க வைத்திருக்கிறது.
– இளையவன்











