விமர்சனம்

பொன்மகள் வந்தாள் – திரைப்பட விமர்சனம்

காவல்துறை சொல்லும் குற்றச்சாட்டுகள் அதன் மீதான நடவடிக்கைகள் ஆகியன அனைத்தும் எல்லா நேரங்களிலும் அப்படியே உண்மையாகிவிடாது என்பதை ஓங்கிச் சொல்லியிருக்கிறது பொன்மகள் வந்தாள்.

காவல்துறையால் இட்டுக்கட்டிப் புனையப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் வழக்கை 15 ஆண்டுகளுக்குப் பின் தோண்டியெடுக்கிறார் வழக்குரைஞர் வெண்பா ( ஜோதிகா ).

அவருக்கு உறுதுணையாக டிராபிக்ராமசாமி போல செயல்படும் பெட்டிசன் பெத்துராஜ் ( பாக்யராஜ்) இருக்கிறார்.

நீதிபதியாக பிரதாப்போத்தன், அவருடைய உதவியாளராக பாண்டியராஜன், எதிர்த்தரப்பு வழக்குரைஞராக பார்த்திபன், காவல்துறை அதிகாரியாக சுப்புபஞ்சு, வழக்கின் பின்புலமாக தியாகராஜன் ஆகியோர் இருக்கிறார்கள்.

இந்த வழக்கு என்னவாகிறது? என்பதுதான் திரைக்கதை.

ஜோதிகா ஏற்றுக்கொண்ட பாத்திரங்களுக்கு நூறு விழுக்காடு நியாயமாக நடித்திருக்கிறார். நீதிமன்றத்தில் பார்த்திபனுக்கு அவருடைய பாணியிலேயே பதிலடி கொடுக்கும் காட்சிகள் சிறப்பு.

பாக்யராஜ், பிரதாப்போத்தன், தியாகராஜன் உள்ளிட்டோர் தங்கள் பங்கைக் குறை வைக்காமல் செய்திருக்கிறார்கள்.

பார்த்திபனுக்கு அடித்து ஆடும் வாய்ப்புள்ள வேடம். நன்றாக ஆடியிருக்கிறார்.

கதைக்களம் ஊட்டி என்பதால் காட்சிகளில் பசுமை.

கோவிந்த்வசந்தாவின் இசை மென்மையாக வருடிச் செல்கிறது.

நீதிமன்றக் காட்சிகள் போரடிக்காமல் கொண்டு சென்றிருப்பது படத்தின் பலம்.

அதிகார வர்க்கம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதை சரியாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறார்கள்.

ஜோதிகா முதல் வழக்காக இந்த வழக்கு எடுத்திருப்பதன் பின்னணி மற்றும் ஓரிடத்தில் தேங்கி நிற்கும் வழக்கு மீண்டும் புறப்படுவது ஆகியன சுவாரசியம்.

சிறு பிழைகள், குறைகள் இருந்தாலும் நகைச்சுவைகள், சண்டைக்காட்சிகள் ஆகிய பாதுகாப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் இன்றி ஒரு உணர்வு பூர்வமான கதையைப் போரடிக்காமல் சொல்லி வெற்றி பெறுகிறார் இயக்குநர் பிரட்ரிக்.

Related Posts