செய்திக் குறிப்புகள்

எனக்கும் பெண்குழந்தைகள் இருக்கிறார்கள் – வெங்கட்பிரபு வித்தியாச பேச்சு

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில், நவீன இளைஞனின் வாழ்வில் நடக்கும் லீலைகளைச் சொல்லும் படமாக உருவாகியுள்ள படம், “மன்மதலீலை”.  

ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக டி.முருகானந்தம் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.

2022 ஏப்ரல் 1 உலகமெங்கும் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன்னோட்ட வெளீயீட்டு நிகழ்ச்சி மார்ச் 21 அன்று நடைபெற்றது.

நிகழ்வில்,ராக்ஃபோர்ட் நிறுவனம் சார்பாக கிரியேடிவ் புரொடியூசர் கே.பி.ஶ்ரீராம் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்வினில் ராக்ஃபோர்ட் நிறுவனம் சார்பாக நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி முருகனிடம், நடிகர் சங்க வளர்ச்சி நிதியாக ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலை அளிக்கப்பட்டது.
 
நிகழ்வில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசியதாவது……

நிச்சயமாக இது ஆபாசமான படமல்ல. இயக்குநர் பாலசந்தர் இருந்து அவர் எடுத்திருந்தால் பாலச்சந்தரின் மன்மதலீலை என்று சொல்லக்கூடிய தகுதி கொண்ட படம். குழந்தைகள் இல்லாமல் குடும்பங்களுடன் பார்க்கத் தகுதியுள்ள படம். மாநாடு படத்தை விட அதிகமான டிவிஸ்ட்டுடன் இந்தப் படம் உங்களை ஆச்சரியப்படுத்தும், வெங்கட் பிரபு மிக அட்டகாசமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தக் காலத்தின் ஜெமினி கணேசன் அசோக் செல்வன் தான். இந்தப் படம் மிக ஜாலியான படம். படம் மிக பெரிய வெற்றி பெறும் வாழ்த்துகள்.
 
நடிகை ரியா சுமன் பேசியதாவது……

என்னுடைய முந்தைய படங்களை விட இப்படம் மிக வித்தியாசமான படம், வெங்கட் பிரபு படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அவர் எனக்கு லீலா பாத்திரத்தைத் தந்ததற்கு நன்றி. அசோக் செல்வனுடன் வேலை பார்த்தது மிக ஜாலியாக சந்தோஷமாக இருந்தது.  இந்தப் படத்தை நீங்கள் சந்தோஷமாக பார்த்து ரசிக்கலாம்.எல்லோருக்கும் நன்றி. 

ஒளிப்பதிவாளர் தமிழ் ஏ.அழகன் பேசியதாவது…..

இப்பட வாய்ப்புத் தந்ததற்கு வெங்கட் பிரபு சாருக்கு நன்றி. அசோக் என் காலேஜ் சீனியர் அவருடன் வேலை பார்த்தது நல்ல அனுபவம். நான் வேலை பார்த்த தெலுங்கு படத்திலும் சம்யுக்தா ஹெக்டே தான் நாயகி. இதிலும் அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. படம் நன்றாக வந்துள்ளது எல்லோருக்கும் நன்றி. 

நாயகி சம்யுக்தா ஹெக்டே பேசியதாவது……

எல்லோருக்கும் மிக்க நன்றி. இந்தப் படத்தில் வேலை செய்தது மிக மிக சந்தோஷமாக இருந்தது. ஏப்ரல் 1 தியேட்டரில் வருகிறது எல்லோரும் வந்து பாருங்கள். படம் உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.

நாயகன் அசோக் செல்வன் பேசியதாவது……

காலேஜ் முடிந்த காலத்தில் நண்பர்களுடன் சென்னை 28 பார்த்தோம்,  இப்போது வெங்கட் பிரபு அண்ணாவுடன் வேலை பார்த்தது வரம், கொரோனா டைம்ல பரிசோதனை முயற்சியாக இதைப் பண்ணலாம் என்றார். நடுவில் எனக்கு கொரோனா எல்லாம் வந்து போனது, அந்த நேரத்தில் எடுத்தது தான் இந்த முத்தக் காட்சிகள் எல்லாம். ஆனாலும் ஹீரோயின்கள் யாரும் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை. பலர் இந்தப் படம் ஏன் செய்தீர்கள் என கேட்டார்கள், இந்தப் படத்தில் எந்தக் கெட்ட விசயமும் இல்லை என எனக்குத் தெரிந்தது. என்னை நான் ஒரு நடிகனாக மட்டுமே அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். இந்தப் படம் மிக மிக நல்ல படம். எனக்கு வாய்ப்புத் தந்த அனைவருக்கும் நன்றி. 

ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் பேசியதாவது……

கேமராமேன் தமிழ் ஏ.அழகன் என் உதவியாளர் தான். மிக நல்ல பையன். அவரது லீலைகளையே ஒரு படமாக எடுக்கலாம். வெங்கட் பிரபு ஒளிப்பதிவாளரை ஈஸியாக வைத்துக் கொள்வார். இசை நன்றாக இருக்கிறது. படமும் அழகாக வந்துள்ளது அனைவருக்கும் வாழ்த்துகள். 

தயாரிப்பாளர் சிங்காரவேலன் பேசியதாவது…….

திரைக்கதையில் அசத்தக்கூடியவர்களில் சமீப காலத்தில் வெங்கட் பிரபுவை மிஞ்சும் வேறொருவர் இல்லை. மாநாடு படத்தில் அந்தளவு அசத்தியிருப்பார் அதே போல் இந்தப்படத்திலும் மிக வித்தியாசமாக அசத்தியுள்ளார். இந்தப் படத்திற்கு பிறகு அனைவரும் திரைக்கதைக்காக வெங்கட் பிரபுவைப் பாராட்டுவார்கள். எல்லோருக்கும் லாபம் தந்த படம் மாநாடு, அதே போல் இந்தப் படமும் வெற்றி பெறும் நன்றி. 

நடிகர் நிதின் சத்யா பேசியதாவது……

இந்தப்படம் நான் பார்த்து விட்டேன் இது அடல்ட் படம் கிடையாது. இது வெங்கட் பிரபுவின் விருந்தாக இருக்கும். அசோக் செல்வனைப் பார்த்து பொறாமையாக உள்ளது. இந்தப் படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும். 

இசையமைப்பாளர் பிரேம்ஜி பேசியதாவது……

அண்ணன் படத்திற்கு நான் இசையமைத்துப் படம் ரிலீஸாவது மகிழ்ச்சி. கல்யாணமான அனைவரும் பார்க்க வேண்டிய படம், 2010 லும் 2020 லும் நடக்கக் கூடிய கதை. படத்தில் பெண்களை உஷார் செய்வது எப்படி என அசோக் சொல்லித் தருவார்.  எல்லோரும் பார்க்கக்கூடிய படம். எங்க அண்ணனுக்கு பயங்கரமான மூளை. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இந்தப் படத்தில் நிறைய க்ளாப்ஸ் கிடைக்கும். படத்தை தியேட்டரில் பார்த்து ரசியுங்கள் நன்றி. 

நடிகர் சங்கத் துணைத் தலைவர் பூச்சி முருகன் பேசியதாவது……

இந்தப்படத்திற்கு என்னை அழைத்த போது நான் பொதுவாக சினிமா விழாக்களுக்கு வருவதில்லை என மறுத்தேன், நடிகர் சங்கத்திற்கு நிதி அளிப்பதாகச் சொன்னார்கள் நடந்தே வருகிறேன் என்றேன். இந்தப்படம் எல்லோரும் நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள் இது அடல்ட் படம் அல்ல, வெங்கட் பிரபு மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் தம்பியுடன் இணைந்து நல்ல படங்கள் தந்து வருகிறார். இந்தப் படம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி. 

இயக்குநர் வெங்கட் பிரபு பேசியதாவது…..

என்னுடைய உதவியாளர் மணிவண்ணனின் கதை தான் இது. கொரோனா காலத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்றபோது இந்தக் கதை வந்தது, அருமையான கதை. மணிவண்ணன் பெரிய இடத்திற்குச் செல்வார். அசோக்கை கொரோனா நேரத்தில் சந்தித்து இந்தக் கதை சொன்னேன் உடனே செய்யலாம் என்றார். என் உடன் பணிபுரிந்த கலைஞர்களின் உதவியாளர்கள் மூன்று பேருடன் இப்படம் செய்துள்ளேன். யுவனின் உதவியாளர் தான் பிரேம்ஜி. இப்படம் கில்மா படம் கிடையாது. எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், நான் அப்படிப் படம் எடுக்க மாட்டேன். இந்தப் படம் கண்டிப்பாக அனைவரும் இணைந்து ரசிக்கும் படியான படமாக இருக்கும் உங்களுக்குப் பிடிக்கும். இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts