விஜய் விஷால் கைவிட்டால் என்ன? நான் இருக்கிறேன் – நம்பிக்கையூட்டிய ஜெயம்ரவி
2019 ஆம் ஆண்டின் வெற்றிப்படங்களில் ஒன்று கோமாளி. புதுஇயக்குநர் பிரதீப்ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி காஜல் அகர்வால் யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அந்தப்படம் நல்ல வரவேற்பையும் பெரிய வெற்றியையும் பெற்றது.
ஒரு படம் வெற்றி பெற்றால் அப்படத்தின் இயக்குநருக்கு நிறைய கிராக்கி ஏற்படும் என்கிற தமிழ்த்திரையுலகத்தின் வழக்கத்துக்கு பிரதீப்ரங்கநாதனும் தப்பவில்லை.
விஜய், விஷால்,தனுஷ் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் எல்லாம் அவரோடு இணைந்து படம் செய்ய விருப்பம் தெரிவித்தனராம்.
அவரும் எல்லோருக்கும் கதை சொல்லியிருக்கிறார். முழுமையான திரைக்கதையாக இல்லாமல் மையக்கதையைச் சொல்லியிருக்கிறார்.தொடக்கத்தில் ஆர்வம் காட்டிய நாயகர்கள் ஓவ்வொருவராகக் கழன்று கொண்டனராம்.
இதனால் ஒரு பெரிய வெற்றிப்படம் கொடுத்தும் அடுத்த படத்துக்கு எந்த வழியும் திறக்கவில்லை எனும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்தத் தகவலை அறிந்த ஜெயம்ரவி, மீண்டும் அவரை அழைத்துப் பேசியிருக்கிறார். அதோடு அவரிடம் கதையையும் கேட்டு அதில் சில விசயங்கள் சரி செய்யச் சொல்லியிருக்கிறார்.
முழுத்திரைக்கதையும் தயாரான பின்பு சொல்லுங்கள் நான் தேதிகள் சொல்கிறேன் நாம் படம் பண்ணலாம் என்று நம்பிக்கையூட்டியிருக்கிறார் ஜெயம்ரவி.
இதனால் உற்சாகமாகத் திரைக்கதை எழுதிக்கொண்டிருக்கிறாராம் பிரதீப்ரங்கநாதன்.











