இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ சிக்கல் – உயர்நீதிமன்றம் புது உத்தரவு
இசைஞானி இளையராஜா 45 வருடங்களுக்கு மேலாக இசை உலகை ஆட்சி செய்து வருகிறார். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தொடக்கத்தில் ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் இசைப் பணிகளை மேற்கொண்ட அவர் பின்னர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவுக்கு ரிக்கார்டிங் ஸ்டூடியோவை மாற்றினார்.அங்கு 35 வருடங்களாக இசையமைத்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு இசைக் கூடத்தை காலி செய்யும்படி இளையராஜாவை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் வற்புறுத்தியது. இதற்குத் திரையுலகினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். பாரதிராஜா தலைமையில் இயக்குநர்கள் பலர் பிரசாத் ஸ்டூடியோவை முற்றுகையிட்டனர். ரிக்கார்டிங் ஸ்டூடியோவை காலி செய்ய இளையராஜாவுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.
இந்தநிலையில் இளையராஜா – பிரசாத் ஸ்டூடியோ விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். பிரசாத் ஸ்டுடியோவில் கடந்த 42 ஆண்டுகளாக சுமார் 6000 பாடல்கள் இசையமைத்துள்ளேன். வாடகை கொடுக்கத் தயாராக உள்ளேன். இட உரிமை தொடர்பாக இரு தரப்புக்கும் இடையிலான வழக்கு ஏற்கனவே 17 ஆவது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இட உரிமை தொடர்பாகப் போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்தும் சிட்டி சிவில் நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும். பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னைக் காலி செய்ய தடை விதிக்கவேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டார்.
இதையடுத்து, இளையராஜா தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் இளையராஜா – பிரசாத் ஸ்டூடியோ இடையிலான பிரச்சினையை 2 வாரங்களில் உரிமையியல் நீதிமன்றம் முடிக்கவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் பல மாதங்களாக இழுத்துக்கொண்டிருந்த சிக்கல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.