செய்திக் குறிப்புகள்

அசோக்செல்வனைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது – ஹாஸ்டல் படவிழாவில் சதீஷ் கலகல பேச்சு

இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹாஸ்டல்”.

இதில்,அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதீஷ், நாசர், முனீஸ்காந்த், ரவி மரியா, ராகுல், கிரிஷ், கேபிஒய் யோகி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு பிரவீன் குமார்,இசை போபோ சசி, படத்தொகுப்பு ராகுல்,கலை இயக்கம் ஜி.துரை ராஜ்,
நடனம் அப்சர்.ஆர்.

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரித்துள்ள இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 18 அன்று, படக்குழு ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர்.

அந்நிகழ்வில் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் பேசியதாவது…

எனது முந்தைய படத்திற்கு நல்ல ஆதரவைத் தந்தீர்கள். இப்போது ஒரு பெரிய டீமுடன் வந்துள்ளேன். தயாரிப்பாளர் ரவி சாருக்கு நன்றி. அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதீஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படம் எங்களுக்குப் பிடித்துள்ளது. இது ஒரு சிம்பிளான படம். உங்களுக்கும் பிடிக்கும். ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.

நடிகர் கிரிஷ் குமார் பேசியதாவது….

இப்படத்தில் நடிக்க வாய்ப்புத் தந்த சுமந்த் அவர்களுக்கு நன்றி. 2021 இல் இந்தப் படம் எடுத்தோம். கொரோனாவுக்கு பிறகு பல படங்கள் ஓடிடி செல்லும் நேரத்தில், இப்படத்தை தியேட்டருக்கு கொண்டு வரும் ரவி சாருக்கு நன்றி. படப்பிடிப்பில் ஆதரவளித்த அசோக் மற்றும் பிரியா இருவருக்கும் நன்றி என்றார்.

இசையமைப்பாளர் போபோ சசி பேசியதாவது…

என்னை நம்பி வாய்ப்புத் தந்த டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. எனக்கு முழு சுதந்திரம் தந்தார்கள். எல்லோரும் சின்ன பட்ஜெட்டில் அரபிக்குத்து மாதிரி பாடல் வேண்டும் என்பார்கள் ஆனால் சுமந்த் அந்த மாதிரி எதுவும் கேட்காமல் என்னை இயல்பாக வைத்து கொண்டார். நான் பாடல் மாற்றலாம் என்றாலும் அவர் மறுத்து விடுவார். படத்திற்காக நிறைய உழைத்துள்ளார்கள். இதில் நடித்த அசோக், பிரியா இருவரும் நன்றாக நடித்துள்ளார்கள். அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் கேபிஒய் யோகி பேசியதாவது…….

எனக்கு முதல் மேடை இது. இப்படி ஒரு சினிமா போஸ்டரில் என் பெயரையும் முகத்தையும் பார்க்கப் பெருமையாக உள்ளது. பெரும்பாலும் தொலைக்காட்சி நடிகர்களுக்கு திரையில் வாய்ப்புத் தர மாட்டார்கள். ஆனால், சுமந்த் சார் நிறைய ஊக்கம் தந்து, இப்படத்தில் நல்ல கதாபாத்திரம் நீங்கள் நடியுங்கள் என்றார். அவருக்கு நன்றி. இப்படத்தில் நடிக்கும் போது ஆதரவளித்த அசோக் மற்றும் பிரியா, சதீஷ் ஆகியோருக்கு நன்றி. முழுக்க முழுக்க இது ஒரு ஜாலியான படம். நல்ல ஜாலியாக வந்து பார்க்கலாம். படம் நல்லா வந்திருக்கு உங்கள் ஆதரவு தேவை எல்லோருக்கும் நன்றி என்றார்.

நகைச்சுவை நடிகர் சதீஷ் பேசியதாவது……

ரொம்ப ஜாலியா வேலை பார்த்த படம். எல்லோரும் வாழ்க்கையில் அனுபவித்த கதைதான். நான் ஹாஸ்டலில் படித்ததில்லை. ஆனால், நண்பனின் ஹாஸ்டல் போய் தங்கியிருக்கிறேன். அந்த நினைவுகளை இந்தப் படம் தூண்டிவிடும். அசோக் செல்வன் நடித்த ஒரு படம் சமீபத்தில்தான் வெளியானது. இப்போ அடுத்த படத்தோடு வந்து விட்டார். அவர் மூன்று நாயகிகளோடு நெருக்கமாக நடிப்பதைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது. பிரியா நெருங்கிய தோழியாக மாறிவிட்டார். நாசர் சார் மகளிர் மட்டும் படத்திற்குப் பிறகு நல்ல காமெடியோடு நடித்துள்ளார். சுமந்த் முன்னதாகவே எனக்கு நண்பர். படத்தை நன்றாக எடுத்துள்ளார். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி என்றார்.

ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார் பேசுகையில்,

இந்தப் படத்தின் இயக்குநர் சுமந்த் மற்றும் கலை இயக்குநர் துரை சார் ஆகிய இருவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். அவர்களுடன் இணைந்து பணி புரிந்தது மிகவும் சுலபமாக இருந்தது. இந்தப் படத்தில் கலை வேலைப்பாடுகள் மிகவும் நன்றாக இருந்தது, எனவே பல்வேறு கோணங்களில் என்னால் காட்சிகளைப் படமாக்க முடிந்தது. இந்தப் படத்தில் நடிகர் அசோக் ஒரு புதிய தோற்றத்தை ஏற்று நடித்தார். அது இதுவரை வேறு எந்தப் படங்களிலும் இல்லாதவாறு அமைந்துள்ளது. இந்தப் படத்தில் நானும் பங்களிப்பதற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

படத்தொகுப்பாளர் ராகுல் பேசியதாவது……

இந்தப் படம் மிக ஜாலியாக வேலை பார்த்தோம். எனக்கும் எடிட் செய்ய மிக ஈஸியாக இருந்தது. சுமந்த் அண்ணாவுக்கு நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.

நடிகர் ரவி மரியா பேசியதாவது…..

3 வருடம் ஹாஸ்டலில் தங்கிப் படித்த அனுபவங்களை எல்லாம் கொட்டித் தீர்த்து விடலாம் எனப் போனால் பிரியா பவானி சங்கருக்கு அப்பா என்று சொல்லிவிட்டார்கள். பிரியாவுடன் நடிக்கலாம் என ஓகே சொல்லிவிட்டேன். டைரக்டர் மிக தெளிவானவர், ரீமேக் படத்தைக் கெடுக்காமல் அவருக்கு என்ன தேவை என்பதைச் சரியாகச் சொல்லி வேலை வாங்கி விடுவார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக வடிவமைத்துள்ளார், மலையாளப் படத்தை மிஞ்சும் வகையில் படத்தை எடுத்துள்ளார். அசோக் செல்வன் மிக நன்றாக நடித்துள்ளார். மிக எளிமையானவர். காமெடி மனிதனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தருகிறது,ஆனால் அதை எடுப்பது சுலபமல்ல என்றார்.

நடிகை பிரியா பவானி சங்கர் பேசியதாவது…..,

இது போன்ற ஒரு குழுவுடன் இணைந்தது மிகவும் சந்தோசமாக இருந்தது. அசோக் செல்வன், சதீஷ் மற்றும் மற்ற நடிகர்களுடன் நடித்தது அற்புதமாக அனுபவமாக இருந்தது, இந்தப் படத்தின் ஷூட்டிங் சிரமமின்றி மிகவும் எளிதாக நடந்தது. அதற்குக் காரணமான தயாரிப்பாளர் ரவீந்திரன் சாருக்கு ஆயிரம் நன்றிகள் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் பிரவீன் சார் மிகவும் அற்புதமாகக் காட்சிப்படுத்தியுள்ளார். மேலும், போபோ சசி அழகான பாடல்களைக் கொடுத்துள்ளார். நாசர் சாருடன் முதல் முறை பணி புரிந்தது அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் அவருடன் ஒரு சில காட்சியில் மட்டும் தான் நடித்துள்ளேன். மேலும் அவருடன் இணைந்து இரண்டு படங்களில் நடிக்கப் போகிறேன். எங்கள் அனைவரையும் ஒன்றிணைத்த இயக்குநர் சுமந்த் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். ஹாஸ்டல் படம் இரசிகர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த படமாக இருக்கும். சதிஷுடைய அடுத்தடுத்த படங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். அசோக் செல்வன் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவருடைய கடின உழைப்பு அவரை மிகப் பெரும் உயரத்திற்குக் கொண்டு செல்லும். நன்றி என்றார்.

நடிகர் அசோக் செல்வன் பேசியதாவது……

எனது அனைத்துத் திரைப்படங்களுக்கும் ஆதரவளித்த ஊடகங்கள் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி. இந்தத் திரைப்படம் உருவாகக் காரணமாக இருந்த தயாரிப்பாளர் ரவீந்திரன் சாருக்கு நன்றி. ஆரம்பத்தில், இந்தத் திரைப்படத்தில் நடிக்க எனக்குத் தயக்கம் இருந்தது. ஆனால் சுமந்த் படத்தின் சாராம்சத்தை மட்டும் எடுத்துவிட்டு ஸ்கிரிப்டை முழுவதுமாக மாற்றியிருந்தார். பிரியா நன்றாக நடித்துள்ளார். சிறந்த மற்றும் தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து சிறந்த நடிகையாகிவிட்டார். சதீஷ் தனித்துவமான ஸ்கிரிப்ட்களுடன் முன்னணி பாத்திரத்தில் நடித்து, பெரிய உயரங்களை எட்டத் தொடங்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். க்ரிஷ் மற்றும் யோகி ஆகியோர் ஹாஸ்டல் போன்ற நல்ல திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதற்கு நன்றி. நாசர் சார் எனக்கு ஒரு குடும்ப உறுப்பினர் போன்றவர். அவருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முனிஸ்காந்த், ரவி மரியா சார், அறந்தாங்கி நிஷா மற்றும் ஏனைய நடிகர்கள் அவர்களது பணியைச் சிறப்புடன் ஆற்றியுள்ளனர். அனைவரும் திரையரங்குகளில் படத்தைப் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். ரவி மரியா சார் சொன்னது போல, நகைச்சுவை ஒரு சீரியஸ் பிசினஸ். நாங்கள் அதை முழு மனதுடன் செய்ய முயற்சித்தோம். அவர் கூறியது போல், அனைவரும் அனுபவித்துப் பாராட்டுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts