மீண்டு (ம்) வந்த ஹீரோ – சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாட்டம்
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2019 டிசம்பர் 20 அன்று வெளியான படம் ஹீரோ. இத்திரைப்படத்தின் கதை தன்னுடையது எனக்கூறி வழக்கு தொடர்ந்தார் உதவி இயக்குநர் போஸ்கோ பிரபு. இதை விசாரித்த தென்னிந்திய எழுத்தாளர் சங்கத் தலைவரான பாக்யராஜ், இரண்டு கதைகளிலும் ஒற்றுமை இருப்பதாகவும், கதை திருட்டு உண்மைதான் என்றும் கூறினார்.
இதையடுத்து இயக்குநர் பி.எஸ்.மித்ரனை, பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் பாக்யராஜ். ஆனால் அதை மித்ரன் நிராகரித்த நிலையில் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹீரோ திரைப்படம் போஸ்கோவின் கதையை ஒத்து இருப்பதாகக் கூறியது.
அதைத்தொடர்ந்து படத்தை வேறு மொழிகளில் வெளியிடவும், டிஜிட்டல், சாட்டிலைட், மொழிமாற்றம் செய்து வெளியிடவும் தடைவிதித்து உத்தரவிட்டது. ஆனாலும் மார்ச் 20 ஆம் தேதி இத்திரைப்படம் தெலுங்கில் சக்தி என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிட உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியிடவில்லை.
நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிப்பதற்கு முன்னதாகவே ஹீரோ திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியிடப்பட்டது. டிஜிட்டல் தளத்தில் வெளியிட இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதை உதவி இயக்குநர் போஸ்கோ பிரபு அமேசான் பிரைம் தளத்துக்கு அனுப்பவே அமேசான் தளத்திலிருந்து அப்படம் நீக்கப்பட்டது.
இந்நிலையில் அமேசான் தளத்தில் தற்போது மீண்டும் ஹீரோ படம் வெளியாகியுள்ளது. படத்தின் தடையை எதிர்த்து படக்குழுவினர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். குறிப்பிட்ட தொகையை நீதிமன்றத்தில் செலுத்தினால் படத்தை வெளியிடலாம் என்று தீர்ப்பு வந்ததை அடுத்து மீண்டும் ஹீரோ படம் வெளியாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து தெலுங்கில் சக்தி என்கிற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்ட அந்தப்படம் நேற்று ஸ்டார்மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
நீதிமன்றத்தடையால் தமிழில் தடைபட்டிருந்த தொலைக்காட்சி ஒளிபரப்பும் விரைவில் நடக்கவிருக்கிறதென்கிறார்கள். தமிழில் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்குக் காலத்திலும் தடைவென்ற ஹீரோ என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இதைக் கொண்டாடிவருகின்றனர்.












