பிளாக் – திரைப்பட விமர்சனம்
பேய் பிசாசுகள் இருக்கின்றன என்று சொல்லி நிறைய திகில் படங்கள் வருகின்றன.அந்தப் படங்களைப் போலவே படம் முழுக்க திகில், பரபரப்பு, இதய படபடப்பு ஆகியன இருக்கின்றன அதற்குக் காரணம் பேயோ பிசாசோ இல்லை என்று சொல்லி வந்திருக்கும் படம் பிளாக்.
நாயகன் ஜீவாவும் நாயகி பிரியா பவானி சங்கரும் திருமணமான இணையர்.சில நாட்கள் விடுமுறையைக் கழிப்பதற்காக புதிதாக உருவாகியிருக்கும் ஒரு குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு விட்டில் தங்குகிறார்கள்.பகலெல்லாம் அவர்கள் எண்ணியது போல் இன்பமாகக் கழிகிறது. இரவானதும் ஒரு சிக்கல்.அதிலிருந்து தப்ப அருகிலிருக்கும் இன்னொரு விட்டுக்குப் போகிறார்கள்.அங்கும் இவர்களே இருக்கிறார்கள்.குழப்பமாக இருக்கிறதா? படத்தில் ஜீவாவுக்கும் பிரியா பவானி சங்கருக்கும் அதே குழப்பம்,கூடவே பயம்.
அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன என்பதுதான் படம்.
மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன் என ஜாலியாக நடித்துக் கொண்டிருந்த ஜீவாவுக்கு இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம்.படம் முழுக்க குழப்பமும் பயமும் பதட்டமுமாகவே இருக்கவேண்டும்.கூடவே மனைவி இருப்பதால் தைரியமாக இருந்தாக வேண்டும்.அவற்றைச் சரியாகச் செய்திருக்கிறார்.
பிரியா பவானி சங்கரும் ஜீவாவுக்கு இணையராக மட்டுமின்றி நடிப்பிலும் இணையாகப் பயணித்து நல்ல பெயர் வாங்குகிறார்.அவர் பயப்படும்போது பார்வையாளர்கள் கவலைப்படுகிறார்கள்.
விவேக் பிரசன்னா,யோக் ஜேபி,ஷா ரா,ஸ்வயம் சித்தா, சிந்தூரி உள்ளிட்டோருக்கு திரைப்பங்கு கொஞ்சம்தான் என்றாலும் நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.
குறிப்பிட்ட இடங்கள், எல்லாக் காட்சிகளுமே இரவில் எடுத்தாக வேண்டும் என்கிற சவால்களை எளிதாக எதிர்கொண்டு நன்றாகப் பணியாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோகுல்பினாய்.அதனால் பயந்து கொண்டே என்றாலும் பார்க்க வைத்துவிடுகிறார்,
இதுபோன்ற படங்களுக்கு இசை மிக முக்கியம்.அதை உணர்ந்து வேலை செய்திருக்கிறார் சாம்.சிஎஸ்.படத்தில் வரும் சிக்கல்களுக்கான காரணங்களை வெளிப்படுத்தும் நேரத்தில் பின்னணி இசையால் அதை மேலும் உயர்த்திப் பிடித்திருக்கிறார்.
பிலோமின்ராஜின் படத்தொகுப்பு கூடுமானவரை படத்தின் மையத்தை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவியிருக்கிறது.
புது இயக்குநர் கே.ஜி.பாலசுப்பிரமணி இயக்கியிருக்கிறார்.அயல்நாட்டுப் படமொன்றின் தழுவல் என்றாலும் அதைத் தமிழ்நாட்டுக்குரியதாக மாற்றியிருக்கிறார்.மூடநம்பிக்கைப் படங்கள் நிறைந்திருக்கும் தமிழ்த் திரையுலகில் ப்ளாக் ஹோல் தியரி என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் கருந்துளை கோட்பாட்டை மையமாகக் கொண்டு திரைக்கதை எழுதி இப்படமெடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
– இளையவன்











