அட்லி மீது காவல்துறையில் புகார் வழக்குப்பதிவு – தொடரும் சர்ச்சை
அட்லி கதை எழுதி இயக்கியிருக்கும் பிகில் படம் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியானது.
படம் வெளியாகுமுன்பே அப்படத்தின் கதை தொடர்பாக வழக்குகள் நடந்தன.
படம் வெளியான பின்பு, பிகில் படத்தின் கதை தொடர்பாக அட்லி மீது தெலுங்கு இயக்குநர் நந்தி சின்னி குமார் ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
மராட்டியத்தைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் அகிலேஷ் பால் கதையைப் படமாக எடுக்க முடிவு செய்து அவருக்கு ரூ.12 லட்சம் தருவதாகப் பேசி முதல் கட்டமாக ரூ.5.5 லட்சம் கொடுத்தேன்.
இப்போது பிகில் படத்தைப் பார்த்து அதிர்ச்சியானேன். அகிலேஷ் பால் கதையும், பிகில் கதையும் ஒன்றுபோல் இருந்தது. இதனால் விஜய், அட்லி ஆகியோரைத் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.
என் கதையைத் திருடி படம் எடுத்த அட்லி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இதையடுத்து கச்சிபவுலி காவல்துறையினர் இயக்குநர் அட்லி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அட்லி படங்களின் கதை தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.











