ஏ.ஆர்.முருகதாசின் எஸ்கே 23 தி லெஜண்ட் 2 – இரு படங்களும் ஒரேகதை?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.‘எஸ்கே23’ என அழைக்கப்படும் இப்படத்தில்,‘சப்த சாகரதாச்சே எல்லோ’ கன்னட படத்தில் நடித்த ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார்.இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரும் தி லெஜண்ட் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சரவணன் நடிக்கும் அடுத்து ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில், இவ்விரு படங்களின் கதையும் ஒன்றுதான் என்றொரு தகவல் திரையுலக வட்டாரத்தில் கசிந்து வருகிறது.
ஒரு சாமானிய மனிதன்,தனிநபர் சிக்கல்கள், சமுதாயச் சிக்கல்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் வலிந்து இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவன்.அவன் எதிர்கொள்ளும் வித்தியாசமான பிரச்சினை அதனால் அவன் சந்திக்கும் விளைவுகள் தாம் திரைக்கதை என்று சொல்லப்படுகிறது.
இதைத்தான் இரண்டு இயக்குநர்களும் படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
பொதுவாக ஏதாவதொரு வெளிநாட்டுப் படத்தைப் பார்த்துவிட்டு அதை அவரவர் வசதிக்கேற்ப தமிழ்ப்படுத்தும் வேலையைப் பல இயக்குநர்கள் செய்வார்கள்.அப்படிச் செய்யும்போது ஒன்றுக்கும் மேற்பட்ட இயக்குநர்கள் ஒரேபடத்தைப் பார்த்துப் பிடித்துப் போய் ஒருவருக்கொருவர் தெரியாமலேயே படமெடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.
இன்னொரு பக்கம், கதை விவாதங்களில் பங்கு பெறும் இயக்குநர்கள், வருங்கால இயக்குநர்கள் உள்ளிட்டோர் ஓரிடத்தில் பேசிய விசயத்தை இன்னோரிடத்திலும் சொல்லிவிடுவார்கள்.அது அதில் சம்பந்தப்பட்ட இயக்குநருக்குப் பிடித்து தன் படத்தில் கதையாகவோ காட்சியாகவோ வைத்துவிடுவார் கடைசியில் அது சிக்கலில் போய் முடியும்.
இவ்விரு வகைகளில் எது நடந்ததோ தெரியவில்லை.இவ்விரு படக்கதைகளூம் ஒன்றுதான் என்கிற செய்தி கசிகிறது.
இதுகுறித்து விசாரித்தால், அப்படி இருக்க வாய்ப்பில்லை. எங்கள் ப்டத்தின் கதை என்ன என்பதை இப்போது சொல்லவியலாது ஆனால், இரு கதைகளும் ஒன்றாக இருக்க வாய்ப்பே இல்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.இவ்வளவு உறுதியாகச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.படம் வெளியான பின்பு அதை நீங்களே தெரிந்துகொள்வீர்கள் என்று சொல்கிறார்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம்.










