கர்நாடக முதலமைச்சர் வாழ்த்து மழையில் விஜயானந்த் திரைப்படம் – விழா தொகுப்பு
கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒரு சிறு டிரக்கை வைத்து கொண்டு பிசினஸ் ஆரம்பித்து 4300 வாகனங்களுக்குச் சொந்தக்காரராக மாறிய ஒரு மிகப்பெரும் பிசினஸ்மேனின் அசாதாரணமான வாழ்க்கை தான் “விஜயானந்த்” திரைப்படம்.
வணிக ரீதியிலான சாலைப்போக்குவரத்து வாகனத்தை இயக்கும் தொழிலில், இந்திய அளவில் முன்னணி நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் கதையின் நாயகனான விஜய் சங்கேஸ்வர் கதாபாத்திரத்தில் நடிகர் நிஹால் நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், ரவிச்சந்திரன், பாரத் பொப்பண்ணா, பிரகாஷ் பெலவாடி, ஸ்ரீ பிரகலாத், வினயா பிரசாத், அர்ச்சனா, அனிஷ் குருவில்லா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். சுய சரிதையைத் தழுவி தயாராகும் இந்தத் திரைப்படத்தை வி ஆர் எல் ஃபிலிம்ஸ் நிறுவனம், பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையா கலந்து கொள்ள ஊடக நண்பர்கள் முன்னிலையில் நவம்பர் 19 ஆம் தேதி பெங்களூருவில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவினில்..
கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையா பேசியதாவது……
நான் விஜயை 1985 இல் சந்தித்தேன். ஒரு சாகசக்காரராகத் தான் அவர் எனக்குத் தெரிந்தார். எப்பொழுதும் அவரிடம் ஒரு தாகம் இருக்கும், எப்பொழுதும் கிரியேட்டிவாக யோசிக்கக் கூடியவர். அவர் இதுவரை நடத்திய அனைத்துத் தொழில்களுமே இலாபகரமான ஒன்றாக இருந்து இருக்கிறது. முடியாததை முடிப்பது தான் அவரது பாணி. அவர் லோக்சபா எம் பி ஆக இருந்தார், அப்பொழுதும் நேரம் தவறாமை தான் அவரது பலம். அவரது கடின உழைப்பு அவருக்கு எல்லாத் துறைகளிலும் பலத்தைக் கொடுத்து இருக்கிறது.அவர் எதைத் தொட்டாலும் வெற்றி தான். இந்த சுயசரிதை படம் பல மொழிகளில் வெளியாவது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் சங்கேஸ்வர் பேசியதாவது……
நடிகர் புனித்ராஜ்குமார் மரணம் என்னைத் துக்கத்தில் ஆழ்த்தியது. அவர் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். அவரை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். எனது 73 வருட வாழ்கையில் வாழ்கை எவ்வளவு அழகானது, ஆழமானது ஆச்சர்யமானது என்பதைக் கற்றுக் கொண்டேன். இளைய தலைமுறைக்கு நான் கொடுக்கும் அறிவுரை என்னவென்றால் தயவு செய்து நேரத்தை வீணாக்காதீர்கள். எனக்கு நிறைய நேரம் இருந்து இருந்தால், நான் இன்னும் நிறைய விசயங்களைச் செய்து இருப்பேன். அதனால் இளைய தலைமுறை உங்களது நேரத்தை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்துங்கள். இந்தத் திரைப்படம் உங்களுக்கு நம்பிக்கை தரும். படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.
நடிகர் நிஹால் பேசியதாவது……
ஒரு தலைமுறைக்கு நம்பிக்கை தரும் மிகப்பெரும் சாதனையாளராக நான் நடிப்பது பெருமை. நாம் எல்லாம் சாதாரண மனிதர்கள் லீவு நாளில் ஓய்வெடுப்போம் ஆனால் இவர் எத்தனையோ ஆண்டுகள் ஓய்வில்லாமல் உழைத்திருக்கிறார். அவரது சாதனைகள் வாழ்வில் வெற்றிபெற விரும்பும் அனைவருக்கும் பாடம். இதனைத் திரைப்படமாக எடுப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இப்படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். அனைத்து மொழிகளிலும் இப்படத்தைக் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
உலகில் வெற்றிக்குப் பல விதிகள் இருக்கும் ஆனால் வெற்றிபெற்றவன் கதை வேறு மாதிரி இருக்கும். உண்மையில் வெற்றி பெற்றவனின் வாழ்க்கை தான் வெற்றிக்கான வழிகாட்டி.அப்படி ஒரு வழிகாட்டியாகத் தயாராகியிருக்கும் விஜயானந்த் திரைப்படம் டிசம்பர் டிசம்பர் 9 ஆம் தேதி, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய இந்தியாவின் ஐந்து மொழிகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.











