தெலுங்கு தயாரிப்பாளருக்கு அடுத்த படம் – விஜய் 66 பட அறிவிப்பால் சர்ச்சை
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. இந்தப் படம் விஜய் நடிப்பில் உருவாகும் 65 ஆவது படமாகும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஜார்ஜியா, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றுள்ளது.
இந்தப் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் அடுத்த படத்தைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை இயக்குநர் வம்சி இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.தமிழிலேயே பல தயாரிப்பாளர்கள் விஜய்க்காகக் காத்திருப்பதால் இது நிஜமாக இருக்காது என்றும் சொல்லப்பட்டது.
ஆனால், அவற்றைப் பொய்யாக்கும் விதமாக, இன்று (செப்டம்பர் 26,2021)மாலை இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘தளபதி 66’ என அழைத்து வருகிறது படக்குழு. இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நுழைவது பெருமையாக இருப்பதாக தில் ராஜு தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் படத்தில் விஜய்யுடன் நடிக்கவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம், தமிழ்த்திரையுலகில் பல த்யாரிப்பாளர்கள் இருக்கும் நேரத்தில் ஒரு தெலுங்குத் தயாரிப்பாளருக்கு அவர் படம் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பது பல சர்ச்சைகளை உருவாக்கிவருகிறது.











