மோடி அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரானது – விஜய் வெற்றிமாறன் பட பரபரப்பு
நடிகர் விஜய் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இந்தப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது.
இதற்கடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படம் பற்றிப் பல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிப்பில் நேரடித் தெலுங்குப்படமொன்றில் அவர் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே இயக்குநர் மகிழ்திருமேனியின் கதையைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார் விஜய்.இப்போது உதயநிதி நடிக்கும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் மகிழ்திருமேனி, அடுத்து விஜய் படம்தான், அவர் எப்போது கூப்பிட்டாலும் நான் தயார் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.
இவற்றிற்கிடையே, இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ரஜினிக்கு சொன்ன கதையை விஜய்யை வைத்து இயக்கப்போகிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இவை எல்லாவற்றையும் தாண்டி, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கப்போவதாகச் சொல்லப்படுகிறது.
ஆங்கிலத்தில் வெளியான ஷூஸ் ஆஃப் தி டெட் (Shoes Of the dead) என்கிற நாவலைத் தழுவி அமைக்கப்பட்டுள்ள திரைக்கதையில் விஜய் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
கோட்டா நீலிமா என்கிற தெலுங்கு எழுத்தாளர் எழுதியுள்ள இந்நாவலைத் திரைப்படமாக எடுக்கும் உரிமையை 2016 மே மாதத்திலேயே வெற்றிமாறன் பெற்றிருக்கிறார்.
அந்த நாவலை விஜய்யிடம் கொடுத்ததாகவும் அதைப் படித்துவிட்டு விஜய் சம்மதம் சொல்லியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அந்த நாவல் கார்ப்பரேட் மாஃபியாக்களால் பாதிக்கப்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்வதை அடிப்படையாகக் கொண்ட நாவல்.
தற்போது மோடி அரசால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களால் எவ்வளவு கொடும் விளைவுகள் நடக்கும் என்பதை இந்நாவலை அடிப்படையாகக் கொண்ட படம் மூலம் வெளிப்படும் என்பதால் இப்படம் பரபரப்பான படமாக இருக்கும் என்கிறார்கள்.











