சிக்கல் நீங்கியது – 350 திரையரங்குகளில் வெளியாகிறது நெஞ்சம் மறப்பதில்லை
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ரெஜினா நந்திதா உட்பட பலர் நடித்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ள இந்தப்படம் சில காரணங்களால் வெளியிடத் தாமதமானது.
இப்போது அந்தப்படத்தை ராக்போர்ட் எண்டர்டெயிண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படம் மார்ச் 5 ஆம் தேதி வெளியாகிறது என்று அறிவித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டுவந்தனர்.
இந்நிலையில், ரேடியன்ஸ் நிறுவனம் சார்பாக வருண்மணியன், அப்படத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்து வெளியீட்டுக்குத் தடை கோரியிருந்தார். அவர் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் பட வெளியீட்டுக்குத் தடை விதித்தது.
உடனே, படக்குழுவினர் வருண்மணியனோடு பேசி அவருக்குச் சேர வேண்டிய தொகையைக் கொடுத்து சிக்கலைத் தீர்த்துவிட்டனர்,
இதனால், ஏற்கெனவே அறிவித்தபடி நாளை இப்படம் வெளியாகவிருக்கிறது. சுமார் முன்னூற்றைம்பது திரையரங்குகளில் இப்படம் வெளியாகவிருக்கிறதாம்.
இப்படத்தின் சில காட்சிகள் வெளியிடப்பட்டபோது தனுஷ், சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ்,வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், அட்லீ உள்ளிட்ட பலர் அதைத் தங்கள் சமூகவலைதளங்களில் வெளியிட்டுப் பாராட்டினர்.
அதனால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்யும் வண்ணம் படம் இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.











