தீபாவளிக்கு வெளியாகும் யோகிபாபு படம் – விவரங்கள்
இவ்வாண்டு தீபாவளி நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால் தீபாவளி வெளியீட்டுப்படங்கள் இரண்டு நாட்கள் முன்னதாக அதாவது நவம்பர் பத்தாம்தேதியே வெளியாகவிருக்கிறது.
ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ஜப்பான், கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் ராகவாலாரன்ஸ் நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கார்த்தி இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்துள்ள ரெய்டு ஆகிய படங்கள் இவ்வாண்டு தீபாவளியையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்போது இவற்றோடு இன்னொரு படமும் இணைந்துள்ளது.
ஜூனியர்விகடன் உள்ளிட்டு பல பத்திரிகைகளில் பணியாற்றிப் புகழ்பெற்றவர் அருள்செழியன்.இவர் திரைத்துறைக்குள் வந்து,எம்.மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி,யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஆண்டவன்கட்டளை திரைப்படத்தில் திரைக்கதை வசனம் எழுதினார்.
அதன்பின், யோகிபாபுவை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை எழுதி இயக்கியுள்ளார். இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பெயர் அறிவிக்கப்படாத அப்படத்தில் யோகிபாபுவுடன் சாய்பிரியங்கா, விதார்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
யோகிபாபு நாயகன் என்பதால் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள அதேநேரம் காதல், தாய்ப்பாசம் ஆகியனவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்து இப்படம் தயாராகியிருக்கிறதாம்.
லைகா நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தின் வேலைகள் அனைத்தும் நிறைவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது.
விரைவில் இப்படத்தின் பெயர், முதல்பார்வை மற்றும் வெளியீட்டுத் தேதி ஆகியன அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று சொல்கிறார்கள்.
இப்படத்தை தீபாவளி வெளியீடாகக் கொண்டுவருவது என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.
ஏற்கெனவே மூன்று படங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிற நேரத்தில் நான்காவதாக இப்படம் வெளியாகவிருக்கிறது.
கார்த்தி, ராகவாலாரன்ஸ், விக்ரம்பிரபு ஆகியோர் படங்களோடு யோகிபாபு படமும் போட்டியில் இருப்பது அவருக்குப் பெருமை தரக்கூடிய செய்திதான்.