யாஷிகா ஆனந்தின் தோழி மரணம் இரு ஆண் நண்பர்கள் படுகாயம் – நள்ளிரவில் நடந்த கோரவிபத்து
இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் யாஷிகா ஆனந்த். கவர்ச்சிகாட்டியதாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாலும் பிரபலமானவர்.
நேற்று, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில், நள்ளிரவு 1-மணியளவில் அதிவேகமாக வந்த மகிழுந்து ஒன்று சாலையின் நடுச்சுவர் மீது மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைக் கண்ட சக வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு பூஞ்சேரியில் உள்ள விபத்து சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அந்த மகிழுந்தில் நடிகை யாஷிகா தன் நண்பர்களுடன் இருந்துள்ளார். நடிகை யாஷிகா, மற்றும் அவரது இரு ஆண் நண்பர்கள் படுகாயத்துடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் யாஷிகாவின் தோழியான ஐதராபாத் பகுதியைச் சேர்ந்த வள்ளிச்செட்டி பவணி-28. என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் யாஷிகா ஆனந்தின் நண்பர் என்பதும் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

yashika anand
அவர் உடலைக் கைப்பற்றிய மாமல்லபுரம் காவல்துறையினர் உடற்கூறாய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து, மதுபோதையில் அதிவேகமாக வண்டியை ஓட்டியதால் ஏற்பட்டது என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து மாமல்லபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.











