விடுதலை இரண்டு பாகங்களாகத் தயாரிக்கப்படுகிறது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய்சேதுபதி,சூரி,கிஷோர் மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் விடுதலை. இப்படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். எல்ரெட்குமாரின் ஆர்.எஸ் இன்ஃபோடெய்ட்மெண்ட் நிறுவனம் தயாரித்துவருகிறது.
ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது.
இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார்.அவர் இப்படத்திற்கான பாடல்கள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார்.
இப்படத்தின் வேலைகள் தொடங்கி இரண்டாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
சூரி, பாரதிராஜா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்று தொடங்கப்பட்டது இந்தப்படம்.
அதன்பின், விஜய்சேதுபதி, கெளதம்மேனன் எனப் பலர் படத்துக்குள் வந்துகொண்டேயிருக்கிறார்கள்.
இந்நிலையில், இந்தப்படத்தை இரண்டுபாகங்களாக உருவாக்கித் தருவதாக வெற்றிமாறன் கூறியிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.
அந்தச் செய்தியை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துச் சொல்லி ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறது தயாரிப்புநிறுவனம்.
அதில், எங்கள் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மேலும், இந்த சிறப்பு நாளில் விடுதலை படம் இரண்டு பாக காவியமாக தயாரிக்கப்படுகிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இவ்வாறு அதில் கூறியிருக்கிறார்கள்.