விபரீத சிக்கலில் விடாமுயற்சி

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத், த்ரிஷா,அர்ஜூன்,ஆதவ்,ரெஜினா உட்பட பலர் நடிக்கும் படம் விடாமுயற்சி.அனிருத் இசையமைக்கிறார்.லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விட்டுவிட்டு நடந்து இப்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
இன்னும் பத்துநாட்கள் வரை படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறதென்றும் அதற்காகப் படக்குழுவினர் ஸ்பெயின் புறப்பட்டுச் செல்வதாக இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.அங்கு கனமழை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இப்படத்தின் படப்பிடிப்புக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.அதனால் அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடந்துகொண்டிருக்கிறதாம்.
இந்நிலையில் இன்னொரு விபரீத சிக்கலில் இப்படம் சிக்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அது என்ன?
இப்படம் ஓர் ஆங்கிலப்படத்தைத் தழுவி எடுக்கப்படுகிற படம் என்று செய்திகள் வந்தன.அச்செய்திகள் குறித்து படக்குழு கண்டுகொள்ளவேயில்லை.
ஆனால்,அச்செய்திகளில் இடம்பெற்ற ஆங்கிலப் படக்குழுவினர் அதை முழுமையாகக் கண்டுகொண்டனர் என்று சொல்லப்படுகிறது.
அதைத் தொடர்ந்து இப்படம் குறித்த விவரங்களைத் தரும்படியும் அப்படித் தர மறுப்பது உங்கள் உரிமை ஆனால்,பட வெளியீட்டுக்குப் பிறகு எங்கள் படத்தை ஒத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியிருக்கின்றனர்.
இதனால் திடுக்கிட்டுப் போன தயாரிப்பு நிறுவனம்,இயக்குநர் மகிழ்திருமேனியிடம் இதுகுறித்துக் கேட்டதாகவும் அவர் அந்தப்படத்தை இன்ஸ்பிரேசனாக வைத்துத்தான் இந்தத் திரைக்கதையை எழுதினேன் என்று ஒப்புக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் இந்தச் சிக்கல் முழுக்க முழுக்க உங்கள் பொறுப்பு இதை சுமுகமாக முடித்துவிடுங்கள் என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்து இயக்குநரிடம் சொல்லியிருக்கிறார்களாம்.
இதனால் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு அதற்குப் பிறகான பணிகள் ஆகியனவற்றோடு சம்பந்தப்பட்ட ஆங்கிலப் பட நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு திரைக்கதையில் செய்யப்பட்டுள்ள மாறுபாடுகளை விளக்கிச் சொல்லி அவர்களிடமிருந்து எந்தச் சிக்கலும் வராத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டிய வேலையிலும் இறங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இவ்வாண்டு தீபாவளியின்போதே வெளியாகியிருக்க வேண்டிய படம் இது.இயக்குநரின் தாமதத்தால் அடுத்த ஆண்டு பொங்கலுக்குப் போயிருக்கிறது.இதனாலேயே அதிருப்தியில் இருக்கும் தயாரிப்பு நிறுவனம்,இப்போது எதிர்பாரா விதமாக வந்திருக்கும் இந்த விபரீத சிக்கலால் பயந்து போயிருக்கிறதாம்.எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும் என்கிற வேண்டுதலிலும் இறங்கியிருக்கிறதாம்.
இயக்குநர்கள் சொல்லும் கதையை நம்பி கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டிவிட்டும் வெளியீடுவரை புதுப்புது பதைப்புகளோடு தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன என்று சொல்லப்படுவதற்குச் சான்றாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.