ட்ரிகர் – திரைப்பட விமர்சனம்
அநாதைகளைப் பற்றி நினைக்க யாருக்கும் நேரமில்லை எனவே அவர்களை வைத்து நான் பெரிய வியாபாரம் செய்யப்போகிறேன் என்று கிளம்புகிறார் ஒருவர். அவருடைய எண்ணத்தில் இடியாய் இறங்குகிறார் ஒரு காவல்துறை அதிகாரி.
துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட தோட்டா போல் ஆக்ரோசமாகப் பாயும் அந்தக் காவல் அதிகாரியை வில்லன் எப்படி எதிர்கொள்கிறார்? அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கும் படம் ட்ரிகர்.
காவல்துறை வேடத்துக்குப் பொருத்தமாக அதர்வா அமைந்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் அவருடைய வேகம் ஆச்சரியப்படுத்துகிறது.வேகத்தோடு விவேகத்தையும் சேர்த்து அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையை உணர்ந்து அதற்கேற்ப உழைத்திருக்கிறார்.
காவல்துறையில் உண்மையாக உழைத்ததாலேயே பழிக்கு ஆளானதோடு நினைவுமறதி நோய் வந்து அவதிப்படும் அருண்பாண்டியனின் நிதான நடிப்பு திரைக்கதைக்கு வலுச்சேர்க்கிறது. கடைசிக்காட்சி கைதட்டல் பெறுகிறது.
நாயகி தான்யாவுக்குக் காதல் காட்சிகளும் பாடல்களும் இல்லை. ஆனால், திரைக்கதைக்குத் தேவையாக இருக்கிறார்.அவரும் அந்தப் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சின்னிஜெயந்த்துக்கு நல்ல வேடம். நன்றாகச் செய்து பாராட்டுப் பெறுகிறார்.
முனீஸ்காந்த், அன்புதாசன், அறந்தாங்கி நிஷா, அழகம்பெருமாள், சீதா ஆகியோர் அவரவர் வேடத்துக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.
வில்லனாக வரும் ராகுல்தேவ்ஷெட்டி, அடக்கி வாசிக்கிறார். ஆனால் பார்ப்போர் இதயம் படபடக்கிறது.
ஜிப்ரானின் இசையில் பாடல் கேட்டு இரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசை கொஞ்சம் குறைவாக அமைந்திருக்கலாம்.
கிருஷ்ணன்வசந்த் ஒளிப்பதிவில் காட்சிகளின் அதிர்வு வெளிப்பட்டிருக்கிறது.
சண்டைக்காட்சிகளை அமைத்த திலீப்சுப்பராயன் படத்தின் இன்னொரு நாயகன் எனலாம்.
இதுவரை திரையில் பதிவாகாத காவல்துறையின் ஒரு பிரிவு, தத்தெடுக்கப்படும் ஆதரவற்ற குழந்தைகளின் நிலை ஆகிய புதுவிசயங்களை அடிப்படையாகக் கொண்டு, அப்பா தோற்ற இடத்தில் வெல்லும் மகன் என்கிற பாசத்தையும் சேர்த்து புத்திசாலித்தனமான திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் சாம் ஆண்டன்.
பெயருக்கேற்ற வேகம்.அதர்வாவுக்குப் பலம்.











