செய்திக் குறிப்புகள்

கண்ணீர் விட்ட லிங்குசாமி – வாரியர் பட விழா தொகுப்பு

இயக்குநர் என்.லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடித்திருக்கும் திரைப்படம் “தி வாரியர்”. சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சிட்துரி தயாரித்துள்ளார். பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார்.

இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி பினுஷெட்டி வில்லனாக நடித்துள்ளார்.தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் ஜூலை 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
 
படத்தின் வெளியீட்டினை ஒட்டி தமிழ்த் திரை பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
 
நிகழ்வில் இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில்,

இந்த விழாவிற்கு,  கிட்டத்தட்ட அனைத்து முன்னணி திரைப்பட இயக்குநர்களையும் வரவழைத்துள்ள லிங்குசாமி யுனிவெர்ஸை இங்கு காண்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன், இது எளிதான காரியம் இல்லை. லிங்குசாமி உடைய நல்ல உள்ளம் தான் இதை நிகழ்த்தியுள்ளது, அவர்தான் உண்மையான போர்வீரன். ராம் தமிழில் ‘காதல்’ படத்தின் மூலம் அறிமுகமாகவிருந்தார், அது அப்போது நடக்கவில்லை. இப்போது தமிழ் சினிமாவிற்கு அவர் வந்ததில் மகிழ்ச்சி. ஆதி ஒரு திறமையான நடிகர், அவருடன் அரவானில் பணிபுரிந்தபோது அவரது சிறப்பான நடிப்பை நான் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தின் மூலம் லிங்குசாமி மற்றும் அவரது ஒட்டுமொத்த குழுவும் மாபெரும் வெற்றியை காணப்போகிறது, அதற்கு என் வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசுகையில்,

ஆரம்பத்தில் லிங்குசாமி ஒரு காதல் கதையை உருவாக்குவதாக இருந்தது, ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. பின்னர், அவர் இந்தக் கதையை என்னிடம் விவரித்தார், இது ஒரு தெளிவான மற்றும் தனித்துவமான ஸ்கிரிப்டாக இருந்தது, ஸ்கிரிப்டில் எந்த ஒரு மாற்றமோ அல்லது மேம்படுத்தலோ தேவையில்லாமல் இருந்தது. நான் உடனடியாக இந்தக் கதையை எடுக்கச் சொன்னேன், மேலும் வாரியர் ஒரு மிகப்பெரிய வெற்றிகரமான திரைப்படமாக இருக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். ராமின் குறும்படத்தைப் பார்த்து காதல் மூலம் ராமை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் அப்போது அது நடக்கவில்லை இப்போது லிங்குசாமிதான் அவரை தமிழுக்குக் கூட்டி வந்துள்ளார். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் மணிரத்னம் பேசுகையில், 

எல்லா இயக்குநர்களுடனும் நான் இணைவதற்கான மையப்புள்ளியாக இருப்பவர் லிங்குசாமி. இங்குள்ள அனைவரும் போர்வீரர்கள் தான். அனைத்துப் போர்வீரர்களையும் ஒரே மேடையில் பார்த்ததில் நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன். நான் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இருந்த ஹைதராபாத்தில் அதே இடத்தில், வாரியர் படத்தின் படப்பிடிப்பில் லிங்குசாமி இருந்தார், அவர் இப்போது படத்தை முடித்துவிட்டு ரிலீஸுக்குத் தயாராகி வருகிறார், நாங்கள் இன்னும் மெதுவாகச் செல்கிறேன். அவர் மிக வேகமானவர் இந்தப்படம் பெரிய வெற்றி அடைய வாரியர் குழுவை வாழ்த்துகிறேன் என்றார்.

இயக்குநர் பாரதிராஜா பேசுகையில்,

இயக்குநர் லிங்குசாமி காதல் உணர்வு அதிகம் கொண்டவர், அதனால்தான் பல விசயங்களை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்த முடிகிறது. இந்தப் படத்தில் ராம் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி இன்னும் பல வருடங்கள் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தும் நடிகையாக இருப்பதற்கான அனைத்து அம்சங்களும் குணங்களும் கொண்டவராக இருக்கிறார். லிங்குசாமிக்கு அவரைச் சுற்றி நல்ல குடும்பம், நண்பர்கள் மற்றும் இரசிகர்கள் உள்ளனர், இது அவரை வரும் ஆண்டுகளில் பெரிய சாதனைகளைச் செய்ய முன்னோக்கித் தள்ளும். வாழ்த்துகள் என்றார்.
 
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில்.., 

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ராம் பொத்தினேனிக்கு வாரியர்  மிகப்பெரிய திருப்புமுனையாக அமையப் போகிறது. படம் வெளியானதும் அவருக்குத் தமிழக இரசிகர்கள் சிவப்புக் கம்பளம் விரிக்கப் போகிறார்கள். இந்தப் படத்தின் ரிலீஸுக்குப் பிறகு இயக்குநர் லிங்குசாமி தெலுங்குத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தப் போகிறார். பிருந்தா சாரதி ஸ்கிரிப்டை விவரிக்கும் போது, ஒவ்வொரு ஷாட்டுக்கும் பார்வையாளர்களின் துடிப்புடன் தொடர்பு இருப்பதை என்னால் உணர முடிந்தது. லிங்குசாமி தமிழ்த் திரைப்படத்துறையில் நட்பு குணம் கொண்ட மனிதராகத் தான் இருக்கிறார், மேலும் அவர் அனைவருக்கும் உதவும் மனபான்மை கொண்டவர். மணிரத்னம், ஷங்கர் போன்ற திரையுல ஜாம்பவான்கள் இங்கு இருப்பதற்கு லிங்குசாமியின் குணமே முக்கியக் காரணம். வாரியர் குழுவிற்கு எனது வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறேன் என்றார்.
 
தயாரிப்பாளர் அன்புச்செழியன் பேசுகையில்..,

பையா படத்திலிருந்து லிங்குசாமியுடன் நான் பயணித்து வருகிறேன். பையா படத்தின் பாடல்களைக் கேட்டதில் இருந்தே அது பெரிய வெற்றியடையும் என்று நான் கூறினேன், அதுபோலவே அந்தப் படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இப்போது, வாரியர் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட்டாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். லிங்குசாமி இன்னும் நிறைய படங்களைத் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ராம் மற்றும் கீர்த்தி சிறந்த நடிகர்கள், கோலிவுட்டில் அவர்களின் வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தப் போகிறது.தேவிஸ்ரீபிரசாத்தின் உடைய இசை இப்போது ஒரு ஹாட் சென்சேஷனாக இருக்கிறது, இந்தப் படம் அவருக்கு மேலும் ஒரு வெற்றியைக் கொண்டுவரும் வாழ்த்துகள் என்றார்.
 
நடிகர் விஷால் கூறியதாவது.., 

லிங்குசாமியை உதவி இயக்குநராக இருந்த காலத்தில் இருந்தே எனக்குத் தெரியும். அவர் ஒரு அற்புதமான மனிதர், எனது தொழில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அவர் ஒரு முக்கிய காரணமாக இருந்தார். அவரை சினிமாதுறையில் வெற்றிகரமான நபராகப் பார்க்க வேண்டும் என்று எனக்கு எப்போதும் ஒரு ஆசை இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவர் மீண்டும் ஒரு பிரமாண்டமான இயக்குநராக மறுபிரவேசம் செய்வார் என்பது உறுதி. ராம் மீது எனக்கு பொறாமையாக இருக்கிறது, ஏனென்றால் அவர் லிங்குசாமியின் மிகச்சிறந்த ஸ்கிரிப்டில் ஒரு பகுதியாக மாறியுள்ளார். லிங்குசாமி பல துன்பங்களையும் துயரங்களையும் கடந்து வந்துள்ளார். அவருடைய மனநிலையையும், வாரியர் திரைப்படம் எவ்வளவு பிரமாண்டமாக இருக்கும் என்பதையும் என்னால் இப்போது தெளிவாக உணர முடிகிறது. இன்று, தென்னிந்திய சினிமா வளர்ச்சியைக் கண்டு ஒட்டுமொத்த பாலிவுட்டும் அதிர்ச்சியில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் எங்களிடையே உள்ள ஒத்துழைப்பு தான். இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெறப் போகிறது என்றார்.
 
இயக்குநர் ஷங்கர் பேசுகையில்,

வாரியர் என்ற தலைப்பே மிகவும் பிரமிக்க வைக்கிறது. இந்த டிரெய்லரில் ராமைப் பார்க்கும்போது, அவர் துடிப்பாக இருக்கிறார். இந்தப் படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளேன். கீர்த்தி ஷெட்டி தனது முதல் படத்தில் ஒரு அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார், மேலும் அவர் பல படங்களில் பணியாற்றவும், கீர்த்தி சுரேஷ் போன்று தேசிய விருது பெறவும் வாழ்த்துகிறேன். டிரெய்லரே ஆனந்தம், ரன், சண்டக்கோழி போன்ற படங்களில் உள்ள  ஹீரோ-வில்லன் சண்டை, குடும்ப உணர்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது. இந்த மூன்று படங்களின் கலவையும் இங்கே வாரியர் படத்தில் வரப்போகிறது. லிங்குசாமி ஒரு சிறந்த கவிஞர், நல்ல உள்ளம் கொண்டவர், இந்தப் படத்தின் மூலம் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில்,

கல்லூரி நாட்களில் லிங்குசாமி சார் படங்களுக்கு நான் ஒரு பெரிய இரசிகனாக இருந்து இரசித்திருக்கிறேன். ரன் திரைப்படத்தில் இருக்கும் பஸ் மற்றும் ஷட்டர் காட்சிகள் இன்னும் என் மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன, அவை என்னை உற்சாகப்படுத்துவதை நிறுத்தவே இல்லை. ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படம் வரவிருப்பதை என்னால் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார். 

இயக்குநர் சிவா கூறியதாவது.,

நடிகர் ராம் அவர்களுடைய முதல் திரைப்படத்தில் இருந்து அவர்களைப் பார்த்து வருகிறேன், அவருக்குள் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. தயாரிப்பாளருடன் நான் பல காலமாக நட்பில் இருந்து வருகிறேன். அவர் சிறந்த மனிதர். லிங்குசாமி அன்பான மனிதர். அவருடைய இந்த வாரியர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும். கீர்த்தி ஷெட்டி திரையில் அழகாகத் தோற்றமளிக்கிறார், அவருக்கு எனது வாழ்த்துகள். படம் நிச்சயமாக அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும் என்றார்.

இயக்குநர் விஜய் மில்டன் பேசுகையில், 

நான் ராம் சாரை பல வருடங்களுக்கு முன்பே பார்த்திருக்கிறேன். அவர் டோலிவுட்டில் பிரபலமான நட்சத்திரமாகிவிட்டார், மேலும் அவரைப் பல வருடங்கள் கழித்து இங்கு பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்குள் எப்போதும் ஒரு நெருப்பு இருக்கும். இந்நிகழ்ச்சியில் லிங்குசாமி சார் பற்றி அனைவரும் சொன்னது 100% உண்மை. அவர் அனைவரின் நலனில் அக்கறை கொண்டவர். தொழில்துறையைச் சேர்ந்த அனைவரும் இங்கு கூடியிருப்பதற்குக் காரணம் அவருடைய உண்மையான நல்ல உள்ளம்தான். இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள் என்றார்.

நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா பேசுகையில்.., 

இயக்குநர் லிங்குசாமி பல பிரச்சனைகளைக் கடந்து நீண்ட இடைவெளியில் இருந்தார். தன்னைத்தானே மாற்றிக் கொள்ளவும், சரியான நேரத்தில் சரியான திட்டத்துடன் பதிலடி கொடுக்கவும் கடவுள் அவரைத் தயார்படுத்தியுள்ளார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என் சொந்த வாழ்க்கையிலும் தொழிலிலும் நானே இதை அனுபவித்திருக்கிறேன். இதைக் கடந்து அவர் பெரிய வெற்றியைப் பெறுவார். வாழ்வே மாயம் காலத்திய கமல்ஹாசனின் வசீகரத்தை ராம் பெற்றிருக்கிறார். அவர் சிலம்பரசனின் தம்பியைப் போலவே இருக்கிறார். கீரித்தி ஷெட்டி குறுகிய காலத்தில் பெரிய நட்சத்திரமாகிவிட்டார். சில தனிப்பட்ட வேலைகள் காரணமாக மும்பை சென்று 2-3 மாதங்கள் தங்கியிருந்தேன். நான் மும்பையில் இருக்கும்போதெல்லாம் ஆட்டோ ரிக்க்ஷாவில் பயணிப்பேன், ஹிந்தியில் புஷ்பா 2 பாடல்களைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். தேவி ஸ்ரீ பிரசாத் இவ்வளவு உயரம் எடுப்பார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. தென்னிந்திய மற்றும் வட இந்திய திரைத்துறையின் போக்கு முற்றிலும் மாறிவிட்டது, இப்போது நிறைய மாற்றங்கள் ஏற்படப் போகிறது. வாரியர் குழு அனைவரும் சிறந்த வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன் என்றார்.

நடிகரும் இயக்குநருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபன் பேசுகையில்.., 

எஸ்.ஜே.சூர்யா சொன்னது போல லிங்குசாமிக்கு இந்த நீண்ட இடைவெளி நல்ல திருப்புமுனையாக அமைந்தது, மேலும் அவர் இயக்கும் ‘வாரியர்’ திரைப்படம் அவருக்குப் பெரிய வெற்றிப்படமாக அமையும். ராம் மிகவும் அழகான நடிகர், கீர்த்தி ஷெட்டியுடன் அவரது கெமிஸ்ட்ரி நிறைய வேலை செய்தது. வாரியர் படத்துடன் ஒரே வார இறுதியில் எனது இரவின் நிழல் திரைப்படம் வெளியாகிறது. இந்த இரண்டு படங்களையும் அனைவரும் ஆதரித்து வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

நடிகை நதியா பேசுகையில், 

இந்த நிகழ்ச்சி எங்கள் அனைவருக்கும் ஒரு சிறப்பு தருணம். லிங்குசாமி சாரை ஒரு நல்ல இயக்குநராக நான் அறிவேன், ஆனால் இன்று நான் அவரை ஒரு நல்ல நண்பராகப் பார்க்கிறேன், அவரது மனதுக்காகத் தான் இங்கு பலர் கூடியிருக்கிறார்கள். ராம் ஒரு அற்புதமான நடிகர். சமூக ஊடகங்களைப் பற்றி எனக்குச் சொல்லித் தருவதில் கீர்த்தி எனக்கு செட்டில் பெரும் உதவியாக இருந்தார். இந்தப் படத்தில் ஆதி சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் நாள் ஷூட்டிங்கில் அவர் மாற்றத்தைப் பார்த்து வியந்தேன். இவ்வளவு பெரிய திரைப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் சாருக்கு நன்றி. இப்படம் மாபெரும் வெற்றியடைய அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்றார்.

நடிகர் ஆதி பேசுகையில்.., 

இந்தப் படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. குரு கேரக்டரை போன்ற ஒரு சிறந்த கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய லிங்குசாமி சாருக்கு நன்றி. திரைத்துறை ஆளுமைகளான மூத்த படைப்பாளிகள் இங்கு வந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இப்போது அவர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. இப்படத்தில் சிறந்த ஆதரவாக இருந்த ஒட்டுமொத்த குழுவிற்கும் நன்றி. இப்படத்தின் வெற்றி சந்திப்பின் போது நிறைய பேச வேண்டும் என்று நினைக்கிறேன். இப்படம் ஜூலை 14, 2022 அன்று வெளியாகிறது. அனைவரும் படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என்றார்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பேசுகையில், 

இயக்குநர் லிங்குசாமி சாருக்காக ஒட்டுமொத்த திரையுலகமும் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இருவரும் பல திரைப்படங்களில் ஒன்றாக வேலை செய்யப் பேசினோம், அது இறுதியாக இந்தப் படத்தில் தான் நடந்தது. அவர் சிறந்த கவிஞர் அவர். அவர் ஒரு அற்புதமான மனிதர், எந்த ஒரு திரைப்பட பிரபலங்களையும், தொழில்நுட்ப வல்லுநரையும் அல்லது யாரையும் பற்றி ஒரு எதிர்மறையான வார்த்தையையும் பகிர்ந்து கொள்ள மாட்டார். அறிமுகப் பட இயக்குநரைக் கூட மனதார பெருந்தன்மையுடன் பாராட்டுவார். அவர் மனதுக்கு எல்லாம் நன்றாக நடக்கும்.  நான் ஆரம்பத்தில் ராமுடன் வேலை பார்த்தபோது, அவரை ஒரு காதல் ஹீரோவாக தான் பார்த்தேன், இப்போது, அவரை உஸ்தாத் ராமாகப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவரது  மாற்றம் ஆச்சரியமாக இருக்கிறது. சமீபத்தில் பிரபுதேவா சாரை சந்தித்தேன், ‘புல்லட்’ பாடல் எல்லா இடங்களிலும் ஹிட் அடித்துவிட்டது என்று சொன்னார். எல்லாவற்றுக்கும் காரணம் ராம் மற்றும் கீர்த்தியின் அற்புதமான நடனம். நாங்கள், ஒரு குழுவாக, இந்தத் திரைப்படத்தில் மிக மகிழ்ச்சியுடன் பணியாற்றியுள்ளோம். ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கின் மேற்கோளை நான் நினைவுகூர விரும்புகிறேன் – “ஒரு வில்லன் மிகவும் சக்தி வாய்ந்தவனாக இருக்கும்போது, அந்தத் திரைப்படம் சக்தி வாய்ந்ததாக மாறும்”. ஆம், வாரியர் மிகவும் சக்தி வாய்ந்த திரைப்படமாக மாறியுள்ளது, அதற்கு ஆதியின் சிறப்பான நடிப்பே காரணம்.

நடிகை கீர்த்தி ஷெட்டி பேசுகையில்.., 

இங்கே பல சிறந்த திரைப்பட இயக்குநர்கள்  இத்திரைப்படத்தை ஆதரிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.  என்னை இந்தப் படத்தில் நடிக்க வைத்த லிங்குசாமி சாருக்கு நன்றி. டிரெய்லரில் சுஜித் சார் தனது காட்சிகளுக்கு பெரும் பராட்டுகளைப் பெற்று வருவது, எனக்கு மிகவும் மகிழ்ச்சி. எனக்கு ராமுடன் நிறைய காட்சிகள் உள்ளன, அடுத்து நதியா மேடம். நதியா அம்மாவுடன் வேலை செய்வதை மிகவும் இரசித்தேன் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். தயாரிப்பாளர் ஸ்ரீநிவாஸ் சார் சிறந்த ஆதரவை அளித்து வருகிறார், மேலும் அவரது தொடர் வரிசை திரைப்படங்கள் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். டிஎஸ்பி சாரின் இசைதான் தான் இதுவரை வெளியான அனைத்துத் திரைப்படங்களிலும் யுஎஸ்பி ஆக உள்ளது, மேலும் அவரது அற்புதமான இசையால் தான் படம் இவ்வளவு பிரபலம்  பெற்றுள்ளது. ஆதி நடிப்பிற்காக தரும் அர்ப்பணிப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தெலுங்கில் ராம் ஏற்கனவே வாரியர் என்று அழைக்கப்படுகிறார், மேலும் இந்தப் படம் வெளியான பிறகு தமிழிலும் அவர் அழைக்கப்படுவார். என்னைப் பற்றி பாசிட்டிவிட்டியை பரப்பி எனக்கு ஆதரவளித்த இரசிகர்களுக்கு நன்றி. லிங்குசாமி சார் ஒரு போர்வீரன், அவர் மீண்டும் போர்க்களத்தில் இருக்கிறார். இன்று அவருக்கு ஆதரவாகப் பலர் வந்திருப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு அவருக்கு நன்றி என்றார்.

நடிகர் ராம் பொத்தினேனி பேசுகையில்,

எனது நீண்ட நாள் கனவான தமிழ் சினிமா அறிமுகம் இப்படி பிரமாண்டமாக அமையும் என நினைக்கவில்லை.  ‘புல்லட்’ பாடலை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி. அற்புதமான ஆல்பத்தை வழங்கிய தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு நன்றி. ஆதி ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். புல்லட் பாடலைப் பாடிய சிலம்பரசன் அண்ணனுக்கு நன்றி. இந்தத் திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் சிவகார்த்திகேயன் அண்ணன், சூர்யா சார் மற்றும் பிற பிரபலங்களுக்கு நன்றி. தமிழ் சினிமாவில் இவ்வளவு பிரமாண்டமாக அறிமுகமானதற்கு நானும் கீர்த்தியும் மிகவும் பாக்கியசாலிகள். என்னை இந்தப் படத்தில் நடிக்க வைத்த தயாரிப்பாளர் சிட்தூரி சாருக்கு நன்றி. இந்தப் படத்தில் நதியா மாம் அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இங்கு வந்திருக்கும் அனைத்து ஜாம்பவான்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் இந்தப் படத்திற்கு உங்கள் அனைவரையும் ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் லிங்குசாமி பேசுகையில்..,

இங்கே என்னை மதித்துக் கூடிய பல திரையுலகினர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். திரைத்துறையில் பல நண்பர்களின் ஆதரவைப் பெற்றதை நான் பாக்கியமாக உணர்கிறேன். அருமையான பாடல் வரிகளைத் தந்த விவேகா அவர்களுக்கு எனது நன்றிகள். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மத்தியில் மிகச் சில படங்கள் மட்டுமே சரியான ஆற்றலைப் பெறுகின்றன, ராம் சார் மற்றும் டிஎஸ்பி சாரின் எனர்ஜி லெவல்கள் இந்தப் படத்திற்கு சிறப்பாக இருந்ததால் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். படம் நன்றாக வந்துள்ளது. நதியா மேடத்துடன் பணிபுரிய வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு, அது தற்போது சரியான திரைப்படத்தில் நடந்துள்ளது. கீர்த்தி ஷெட்டிக்கு மீரா ஜாஸ்மினின் சாயல்கள் உள்ளன, மேலும் அவர் திரைத்துறையை ஆள்வார் என்பது உறுதி.  அவருடன் ஆரம்பத்தில் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், பின்னர் குடும்ப நண்பர்களாகிவிட்டோம். இந்தப் படத்தில் ஆதி சார் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார், இதுவரை நான் செய்த படங்களில் அவர்தான் சிறந்த வில்லன். அடுத்த ஆண்டு ‘சிறந்த வில்லன் பிரிவில்’ அதிக விருதுகளை அவர் வெல்வார். சீனிவாச சிட்தூரி  சார் போன்ற ஒரு தயாரிப்பாளரை நான் பெற்றது பாக்கியம். அவர் திரைப்படத்தில் எந்த இடத்திலும் தலையிடவில்லை மற்றும் இப்படத்திற்கு அதிகப் பணம் செலவழித்தார். இந்தத் திரைப்படத்திற்காக நான் முழு மனதுடன் உழைத்தேன், இப்படம் அவருக்கு நல்ல இலாபத்தைத் தரும். சண்டக்கோழி, பையா நடிகர்களுக்கு எப்படி திருப்புமுனையாக அமைந்ததோ, அதுபோலவே ராமுக்கும் வாரியர் அமையும். இதுவரை என்னுடன் பணியாற்றிய விக்ரம், மம்முட்டி சார், சூர்யா போன்ற எனது ஹீரோக்களின் கலவை அவர். இந்தப் படத்தை ஆதரித்த சிம்பு சார், சூர்யா சார் மற்றும் அனைவருக்கும் நன்றி. ‘புல்லட்’ பாடலை வெளியிட்டு இந்தப் படத்தை ஆதரித்த உதயநிதி சகோதரருக்கு நன்றி. நீங்கள் அனைவரும் இத்திரைப்படத்தை ஆதரித்து வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்

இவ்வாறு அவர் பேசினார்.

இயக்குநர் லிங்குசாமி பேசத்தொடங்கும்போதே உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். இவ்வளவு பேர் எனக்காக வந்திருக்கிறார்கள். இதுதான் நான் சேர்த்து வைத்திருக்கும் சொத்து, இதைப்பார்க்க என் அம்மாவைக் கூட்டிவர நினைத்தேன் அவர் உடல்நிலை சரியில்லாததால் அது முடியாமல் போய்விட்டது என்று சொல்லி மீண்டும் கண்கலங்கினார்.

Related Posts