கொலை வழக்கில் சிக்கிய சூப்பர்ஸ்டார் – பரபரப்பு ஆரம்பம்
சோனி லிவ் (SONYLIV) ஓடிடி தளம் தனது புதிய தமிழ் இணையத் தொடருக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி,தி மெட்ராஸ் மர்டர் (THE MADRAS MURDER) எனத் தலைப்பிடப்பட்டுள்ள அந்த இணையத் தொடரினை சூரியபிரதாப்.எஸ், எழுதி-இயக்க,பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பாக ஐ.பி.கார்த்திகேயன் தயாரிக்கிறார். இயக்குநர் ஏ.எல்.விஜய் ஷோ ரன்னர் (SHOWRUNNER) ஆகச் செயல்படவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த இணையத் தொடர் 1940-களில் மெட்ராஸ் மாகாணத்தில் நடந்த ஒரு பிரபல கொலை வழக்கினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
அதிகப் பொருட் செலவில் தயாராக இருக்கும் இந்த இணையத் தொடரில் நடிக்கவிருக்கும் நடிகர்-நடிகையர்கள் மற்றும் இதில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
இந்த இணையத் தொடர், உண்மைச் சம்பவங்களை அடிப்படியாக கொண்டு உருவாக்கப்படுவதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதன்படி கொல்லப்பட்ட அந்த நபர் 1940-களில் பிரபலமான ஒரு பத்திரிக்கையாளர் என்றும், அந்தக் கொலை வழக்கில் தமிழ்த்திரைப்படத்துறையின் முதல் சூப்பர் ஸ்டார் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 1944-ஆம் ஆண்டு மெட்ராஸ் புரசைவாக்கத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்யபட்ட பிரபல மஞ்சள் பத்திரிக்கையாளர் லட்சுமிகாந்தனின் கொலை வழக்கு மற்றும் அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறை சென்ற தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் தொடர்பு பற்றிய கதையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இன்று வரை லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பல அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகள் இருக்கிறன. மேலும், லட்சுமிகாந்தனைக் கொலை செய்தது யார்? என்பது இன்று வரை விடை தெரியாத புதிராகவே உள்ளது. இந்த இணையத் தொடர் அந்த புதிர்களுக்கும், மர்மங்களுக்கும் விடை கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த இணையத் தொடருக்கான முன்தயாரிப்புப் பணிகள் முடிவடைந்து,விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.
இந்த இணையத் தொடர் பல புதிய பரபரப்புகளை உருவாக்கும் என்கிறார்கள்.











