தெலுங்கின் பெரிய தயாரிப்பாளர் தமிழுக்கு வருகிறார்
தெலுங்குத் திரையுலகின் பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவர் ராஜு. இவர் தயாரிப்பில் வெளியாகி வெள்ளி விழா கொண்டாடிய படம் தில்.அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தில்ராஜு என்றே அழைக்கப்பட்டார். இவர் தயாரிப்பில் ஆர்யா, பத்ரா, பொம்மரில்லு, முன்னா, பிருந்தாவனம், மிஸ்டர் பெர்பக்ட், பிடா, ஜானு உள்ளிட்ட பல வெற்றிப்படங்கள் உருவாகியுள்ளன.
இவற்றில் சில படங்கள் தமிழில் திரும்ப எடுக்கப்பட்டு இங்கும் வெற்றியடைந்துள்ளன.
இவர் தற்போது தமிழ்த் திரையுலகுக்கு வரவிருக்கிறாராம். இங்கு வந்து நேரடித் தமிழ்ப்படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம்.
இதற்காக சென்னையில் ஓர் அலுவலகம் தொடங்கியதோடு, ஓர் இயக்குநரை நியமித்து கதைகள் கேட்கத் தொடங்கியிருக்கிறாராம்.
நல்ல கதைகளைத் தேர்வு செய்து அதற்கேற்ப நடிகர் நடிகைகளை ஒப்பந்தம் செய்து படங்கள் தயாரிப்பது அவருடைய திட்டம் என்று சொல்லப்படுகிறது.
நல்ல கதைகள், சிறு முதலீடு, புதிய திறமையாளர்கள் ஆகியனவற்றைக் கலந்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்த சூப்பர்குட் பிலிம்ஸ் இப்போது படத்தயாரிப்புகளைக் குறைத்திருக்கிறது.
அந்த நிறுவனத்தின் இடத்தை நிரப்பும் முயற்சியில் தில்ராஜு தமிழகம் வரவிருக்கிறார் என்று சொல்கிறார்கள். நன்மை நடந்தால் நல்லதுதான்.












