வேலையைக் காட்டிய சிம்பு விரக்தியில் சுந்தர்.சி
சிம்பு தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படம் வந்தா ராஜாவாத்தான் வருவேன். சுந்தர்.சி இயக்கும் இந்தப்படத்தில் மேகா ஆகாஷ், கேத்தரிந்தெரசா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருவதாகச் சொல்லப்பட்டது.
இப்படம் தொடர்பாக சிம்பு ரசிகர்களுக்கு எழுதிய கடிதத்தின் இறுதியில், தானாக வழி பிறக்கும். பொங்கலுக்கு எப்படியும் திரைக்கு வருவோம் என்று சொல்லியிருந்தார்.
ஆனால் பொங்கலையொட்டி ரஜினியின் பேட்ட, அஜீத்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியானதால் இப்படத்தை வெளியிடும் முடிவைத் தள்ளி வைத்தனர் என்று சொல்லப்பட்டது.
அதனால் இப்படம் சனவரி 26 வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது.
சனவரி 26 அன்று வெளியாவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. பிப்ரவரி 1 ஆம் தேதி படம் வெளியாகுமென அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இப்பட வெளியீடு தொடர்பாக சிக்கல் இருப்பது ஒருபுறம் என்றால் இன்னொருபுறம், இப்படத்தில் இடம்பெறும் இன்னும் ஒரு பாடல் படப்பிடிப்பு நடக்கவில்லை என்கிறார்கள்.
அந்தப்பாடலைப் படமாக்க சிம்பு வர மறுக்கிறார் என்றும் இதனால் சுந்தர்.சி விரக்தியில் இருக்கிறார் என்று சிம்பு மீது குற்றம் சொல்லப்படும் அதேநேரம் சிம்புவுக்கு தயாரிப்பு நிறுவனம் சம்பளப்பாக்கி வைத்திருப்பதால் அது நடக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
சிம்புவுக்கு உள்ளும் புறமும் சிக்கல்தாம் போல.











