பெருமைப் படுத்திய நடிகர்திலகம் குடும்பம் – கண் கலங்கிய கமல்
தமிழ்த் திரையுலகின் உச்சநட்சத்திரங்களில் ஒருவர் கமல். ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். ஆகஸ்ட் 12, 1960 இல் இந்தப் படம் வெளியானது.
இதன்படி, கமல் தற்போது திரையுலகில் 60 ஆவது ஆண்டில் இருக்கிறார். இதற்காகப் பலரும் கமலுக்கு வாழ்த்துச் சொல்லி வருகிறார்கள்.
இந்நிலையில்,நடிகர் கமலை நடிகர்திலகம் சிவாஜியின் அன்னை இல்லத்துக்கு அழைத்து தடபுடலாக விருந்து கொடுத்துள்ளார் பிரபு.
அதோடு அவருக்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார். அதில் பிரபுவின் குடும்பம் சிறு கவிதை ஒன்றையும் பொறித்துப் பரிசளித்துள்ளது.

Kamal and shivaji family
அந்தக் கவிதை…..
அரிதாரம் முதல்தாரம் ஆன நடிப்பின் அவதாரம் சிவாஜி
அவர் வெள்ளித்திரை விஞ்ஞானி
அவரின் தலைமகன் நீ கலைஞானி!
நடிகர் திலக நாயகனே பாராட்டிய
உலக நாயகனே!
நீ நடிப்பை ஆண்டு, ஆனது அறுபது ஆண்டு!
நீ ஊரை ஆண்டு, உலகை ஆண்டு
வாழ்ந்திடுக நூறாண்டு!
அன்புடன்,
உங்கள் குடும்பத்தினர்,
அன்னை இல்லம்.
இவ்வாறு அதில் பொறிக்கப்பட்டுள்ளது.
விருந்து முடிந்தவுடன் அன்னை இல்லத்தில் உள்ளவர்கள் அனைவரும் கமலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அந்தப் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்து. வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது. தம்பி பிரபு வாசித்து அளித்த பாராட்டு மடலின் வாசகங்கள் என்னைக் கண் கலங்க வைத்தது. மனது புன்னகைத்தது”
இவ்வாறு நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் கமல்.
தமிழ்நாடும் தமிழ்த்திரையுலகமும் செய்ய வேண்டியதை நடிகர் திலகத்தின் குடும்பம் செய்துள்ளது.











