செய்திக் குறிப்புகள்

கென்னடி கிளப் படத்தில் நடித்தது ஏன்? – சசிகுமார் விளக்கம்

சுசீந்திரன் எழுத்து இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார்,புதுநடிகை மீனாட்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கென்னடி கிளப். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

அவ்விழாவில்,அகத்தியன்,எஸ்.டி.சபா,எழில்,லெனின்பாரதி, ராம்பிரகாஷ்,தயாரிப்பாளர் பி,எல்,தேனப்பன்,கதிரேசன், டி.சிவாஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்

நிகழ்வில் படத்தில் பணியாற்றிய நிஜ கபடி வீரர்களும் பயிற்சியாளரும் கலந்துகொண்டனர்.

விழாவில் நாயகி மீனாட்சி பேசும்போது:-

இயக்குநர் சுசீந்திரனிம் கடின உழைப்பு போன்று பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். தேர்வு இல்லாமல் தான் என்னைத் தேர்ந்தெடுத்தார் சுசீந்திரன். அதுபற்றி அவரிடம் கேட்கும்போது நான் என் மேல் நம்பிக்கை வைத்துதான் உன்னைத் தேர்வு செய்தேன் என்றார். சசிகுமார் மிக நல்ல பயிற்சியாளர். ஒட்டன்சத்திரத்தை என்னால் மறக்க முடியாது என்றார்.

இசையமைப்பாளர் டி.இமான் பேசும்போது:-

சுசீந்திரனுடன் இணைந்து பணியாற்றுவது இது ஏழாவது படம். இத்தனை படங்களிலும் எங்களுடைய உறவு கெடாமல் இருப்பது இருவருக்கும் உள்ள புரிதல்கள் தான். ஒவ்வொரு படங்களிலும் அடித்தளத்தை தெளிவாக அமைத்துக் கொடுப்பார் சுசீந்திரன். விவேகாவும் பாடல் வரிகளை சிறப்பாக எழுதியிருந்தார். மேலும், பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக ‘கென்னடி கிளப்’ இருக்கும். சசிகுமாரின் கதாபாத்திரம் முதல் பார்வை போஸ்டரிலேயே நன்றாக இருக்கும் என்று தெரிந்தது. பாரதிராஜா இருந்தாலே அங்கே ஒரு காந்த அலைகள் இருக்கும் என்றார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது…

நல்லுச்சாமி பிக்சர்ஸ் சார்பில் இது எங்களுடைய மூன்றாவது படம். என் அப்பாவிற்கு விளையாட்டு பிடிக்கும். அதை வைத்து படமெடுக்க வேண்டும் என்று தான் வெண்ணிலா கபடி குழு எடுத்தேன். என் அப்பா வேடத்தில் இப்படத்தில் நடித்தற்காக பாரதிராஜாவிற்கு தேசிய விருது கிடைக்கும். ஒவ்வொரு காட்சியிலும் வசனங்களைக் கொடுத்து விடுவேன். அதை ஒரே முறையில் நடித்து விடுவார். அவர் நடிப்பதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். சசிகுமாரிமிருந்து 9 புது இயக்குநர்கள் உருவாகியிருக்கிறார்கள். டி.இமானிடம் எனக்கு பிடித்தது நேரம் தவறாமை. விவேகா நன்றாக பாடல் எழுதியிருக்கிறார்கள்.

ராஜபாண்டி இப்படம் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகியிருக்கிறார்கள். உதவி இயக்குநர்களுடைய கடின உழைப்பு இப்படத்தில் இருக்கிறது. கலை இயக்குநர் சேகருடன் இது எனக்கு மூன்றாவது படம். நாங்கள் நினைத்த படத்தைப் பிடிவாதமாக எடுத்திருக்கிறோம்.

ஆகஸ்ட் 15 இப்படம் வெளியாகிறது. இப்படம் எங்களுடைய குடும்பப் படமாக இருந்தாலும் என் தம்பி தயாரிப்பாளராக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மதுரைப் பெண் மீனாட்சி நாயகியாக அறிமுகமாகிறார்.

இயக்குநர் சசிகுமார் பேசும்போது:-

‘கென்னடி கிளப்’ படத்தின் நாயகன் நான் இல்லை. இப்படத்தில் நடித்திருக்கும் நிஜ கபடி வீராங்கனைகள் தான். கபடி பயிற்சியாளர் செல்வமாகத் தான் நான் நடித்திருக்கிறேன். நல்லுச்சாமியாக பாரதிராஜா சார் நடித்திருக்கிறார்.

கபடியில் வென்றால் தான் வேலைவாய்ப்பு, வாழ்க்கை எல்லாமே அமையும் என்று தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பல போட்டிகளில் வென்றிருக்கிறார்கள்.

இப்படத்தின் கதையை சுசீந்திரன் கூறும்போது பெண்களுக்காக இப்படத்தை நிச்சயம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இம்மாதிரி படங்களில் நான் நிறைய நடிப்பேன். பாரதிராஜாவுடன் நடிக்கும்போது சுறுசுறுப்பாக இருக்கும். அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அவரை சுசீந்திரன் அழகாகக் கையாண்டார். எல்லோருடனும் இணைந்து நடித்தது இயல்பாக, சுலபமான அனுபவமாக இருந்தது. டி.இமானின் இசை இப்படத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்க முடிவு செய்திருக்கிறோம் என்றார்.

இயக்குநர் பாரதிராஜா பேசும்போது:-

நல்ல கலைஞர்களை வளர்கின்ற கலைஞர்களை ஊக்கப்படுத்தவில்லையென்றால் நான் ஒரு நல்ல கலைஞன் இல்லை. இதற்கு முன்பு சுசீந்திரனுடன் ஒரு படத்தில் நடித்தேன். ஆனால், இப்படத்தில் ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படத்தில் நடித்த அனுபவமே இல்லை. சினிமா என்றால் என்னவென்றே தெரியாத கபடி வீராங்கனைகள் இப்படத்தில் நடித்ததாகவே தெரியவில்லை, வாழ்ந்திருக்கிறார்கள். அர்ப்பணிப்போடு நடித்திருந்த இந்தப் பெண்களுக்கு நன்றி கூற வேண்டும்.

சுசீந்திரன் மாதிரி ஒரு மகனைப் பெற்றதற்கு நல்லுச்சாமி கொடுத்து வைத்தவர். அம்பானிபோல் வசதியாக வாழ விருப்பமில்லை.எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இயக்குநர் பாரதிராஜாவாகவே பிறக்க விரும்புகிறேன்.

இது சினிமா அல்ல. தென் மண்ணின் வாழ்க்கை. அதில் பெரும்பங்கு நல்லுச்சாமிக்கு இருக்கிறது. இப்படத்தில் நல்லுச்சாமியாகத்தான் நான் நடித்திருக்கிறேன்.

சசிகுமாரை பார்க்கும்போது அவர் முகத்தில் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். சிறு குழந்தைகளுக்கும் அவருடைய முகம் பிடிக்கும். அவருடன் நெருங்கி பழகும்போது தான் அவர் இன்னும் குழந்தையாக இருக்கிறார் என்று தெரிகிறது.

இப்படத்தை தொழிற்சார்ந்த படமாக இல்லாத வண்ணம் சிறப்பாக இயக்கியிருக்கிறார் சுசீந்திரன்.

நானும் டி.இமானும் ஒரு படத்திற்கு இணைந்து பணியாற்றுவதாக இருந்தது. ஆனால் அப்படம் நின்று விட்டது. அவர் உடம்பைக் குறைத்து திறமையை வளர்த்துக் கொண்டார். படத்தொகுப்பாளர் ஆண்டனியின் பல படங்கள் பார்த்திருக்கிறேன். மிகவும் திறமையானவர். லெனின் பேசும்போது, நான் அதிகம் பேசவில்லை பேசினால் பிரச்னை வரும் என்று கூறினார். பேசினால் பிரச்னை தீரும். ஆகையால் பேச வேண்டும். நான் துணை நிற்கிறேன் தயங்காமல் பேசு லெனின்.நீ சமீபத்தில் பேசியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் இயக்குநர் பாரதிராஜா கபடி வீராங்களைகளுக்கு பதக்கங்களை வழங்கினார்.

Related Posts