பிரபுதேவாவின் 3 படங்கள் நயன்தாராவின் 2 படங்கள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழ்த் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், வேதாளம், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி–1, சென்னை–28 2 ஆம் பாகம், இது நம்ம ஆளு, காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் பி.பிள்ளை தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக 8 புதிய படங்களைத் தயாரிக்கிறார்.
சமீபத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சசி இயக்கத்தில் சிவப்பு – மஞ்சள் – பச்சை என்ற படத்தைத் தயாரித்து வெற்றி பெற்றதுடன் தற்போது எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க ‘ஆயிரம் ஜென்மங்கள்’ மற்றும் ‘திரிஷ்யம்’ பட வெற்றிக் கூட்டணியான மோகன்லால் – ஜீத்து ஜோஸப் மற்றும் திரிஷா நாயகியாக நடிக்க மும்மொழிகளில் உருவாகும் ‘ராம்’ படத்தைத் தயாரித்து வருகிறார்.
நல்ல கதைகளும், உணர்வுப்பூர்மான காட்சியமைப்புகளும் என்றென்றும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் விநியோகம், தயாரிப்பு என தொடர்ந்து செய்து வரும் ரமேஷ் பி.பிள்ளை இன்றைய சூழலில் மட்டுமல்ல எந்தச் சூழலிலும் இந்த நம்பிக்கை வெற்றி பெறும் என உறுதிபட முடிவெடுத்து திரைப்படக்க்லை மீது உள்ள ஆர்வம் மற்றும் திறமையான கலைஞர்களை வெளிக்கொண்டு வரும் முடிவில், நல்ல கதையம்சத்தோடு, காட்சிக்குத் தேவையான பிரம்மாண்டமான பொருட்செலவில் மேலும் 6 புதிய படங்களைத் தனது அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார்.
அவை குறித்த விவரங்கள்…
டான்சேண்டி இயக்கத்தில் பிரபுதேவா, ரெஜினா கசாண்டிரா, அனுசுயா நடிக்கும் ‘பிளாஷ்பேக்’
மகாபலிபுரம், கொரில்லா ஆகிய படங்களைத் தொடர்ந்து டான்சேண்டி கதை – திரைக்கதை – வசனம் – இயக்கத்தில் ‘பிளாஷ்பேக்’ எனும் புதிய படம் உருவாகிறது. அழகிய காதல் கதையினை, முற்றிலும் அழகான பின்னணியில் அனைவரும் ரசிக்கும் வகையில், உணர்வுகளின் உயிர்ப்போடு வெளிப்படுத்தும். பிரமாண்டமான பொருட்செலவில் படைக்கப்படும் இப்படம் பார்ப்பவர்கள் அனைவரும் தாங்கள் சந்தித்த, பாதித்த, கடந்து வந்த உணர்வுகளை திரும்பிப் பார்க்கும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில், ரெஜினா, இளவரசு, அனுசுயா, உமா ரியாஸ், ஆர்யன், 96 பட புகழ் சூர்யா, மெர்சல் பட புகழ் அக்ஷன்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் முக்கியமான பகுதிகள் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்துக்கு ஒளிப்பதிவு எஸ்.யுவா, இசை சாம் சிஎஸ்,
பிரபுதேவா, ‘மஞ்சப் பை’ ராகவன் இணையும் புதிய படம் ‘மை டியர் பூதம்’
இயக்குனர் சற்குணத்திடம் பல படங்களில் இணை–துணை இயக்குநராகப் பணியாற்றி ‘மஞ்சப் பை’ படம் மூலம் இயக்குநரான ராகவன், கடம்பன் படம் மூலம் தனி அடையாளம் கண்டார்.
காதல் – கமர்ஷியல் – ஹாரர் – திரில்லர் என தொடர் வரிசை படங்களிலிருந்து மாறுபட்டு முற்றிலும் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் இணைந்து மகிழும்படியான கதை – திரைக்கதையமைப்பில் பேண்டஸி படமாக பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்குகிறார் ராகவன். இதுவரை ஏற்றிடாத வேடத்தில் பிரபுதேவா நடிக்கிறார்.
அன்புள்ள ரஜினிகாந்த் படத்திற்கு பின் எப்படி ‘ரஜினி அங்கிள்’ என்று அவரை கொண்டாடினார்களோ அதைப்போல் இப்படத்திற்கு பின் அனைத்து குழந்தைகள் பி டி (பிரபுதேவா) அங்கிள் என கொண்டாடும் விதம் காட்சியமைக்கப்பட்டிருக்கிறது.
பேண்டஸி திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்காக அமெரிக்கா மற்றும் இலண்டனிலுள்ள விஎஃப்எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
இப்படத்துக்கான கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
நயன்தாரா நடிக்கும் இரண்டு புதிய படங்கள்.
முதல் படத்தை, இயக்குநர் ஷாஜி கைலாசிடம் ‘ஆகஸ்ட் 15’, ‘துரோனா’, ‘ரெட் சில்லிஸ்’ போன்ற படங்களிலும், இயக்குநர் மது சுதாகரனின் ‘சேண்ட்விச்’ மற்றும் ‘10:30am லோக்கல் கால்’ படங்களிலும் துணை, இணை இயக்குநராகப் பணியாற்றிய விபின் முதன் முறையாக கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குநராக தமிழில் அறிமுகாகிறார். படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். இது ஒரு சைக்காலாஜிக்கல் மிஸ்டிரி த்ரில்லர் படமாக இருக்கும்.
நயன்தாராவின் இரண்டாம் படத்திற்கான குழு விரைவில் அறிவிக்கப்படும்.
காஜல் அகர்வால், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், லக்ஷ்மி ராய் நடிப்பில் – ராஜா சரவணன் இயக்கத்தில் ‘ரவுடிபேபி’
பல முன்னணி இயக்குநர்களுடன் உதவி, இணை இயக்குநராகப் பணியாற்றியவரும், கதை–வசனம், விஎஃப்எக்ஸ், படத்தொகுப்பு, சந்தைப்படுத்துதல் எனப் பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்று பணியாற்றிவருமான ராஜா சரவணன் ‘ரவுடிபேபி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். எல்லாக் குழந்தைகளும் ஏஞ்சல் அல்ல என்ற வரிகளுடன் முதல்பார்வை வெளியிடப்பட்டது. சுவாரசியமான காட்சிகள், எதிர்பாராத திருப்பங்கள், பயம் கலந்த, கவனம் பிசகாத, அதிர்ச்சியான காட்சியமைப்புகளுடன் கூடிய திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
மற்ற நடிகர் – நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில்…
ஒளிப்பதிவு : செல்லதுரை இசை : சாம் CS
கலை : ரெமியோன் பாடல்கள் : ‘கவிப்பேரரசு’ வைரமுத்து
படத்தொகுப்பு : தீபக் துவாரகநாத் ஸ்டண்ட்: ‘சுப்ரீம்’ சுந்தர்
கல்யாண் குமார் இயக்கத்தில் பிரபுதேவா
கதை சொல்லப் போறோம், காத்தாடி, குலேபகாவலி, ஜாக்பாட், கோஷ்டி, ஷூ திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் கல்யாண் குமார், கதை,திரைக்கதை,வசனம் எழுதி ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் பிரபுதேவா உடன் கே எஸ் ரவிக்குமார், யோகிபாபு, தங்கதுரை, டோனி, மன்சூர் அலி கான், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இது ஒரு ஹாரர் கலந்த காமெடி குடும்பப் படமாக உருவாகவிருக்கிறது. ஜேக்கப் ரத்தன் ராஜ் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், அஸ்வின் இசையமைக்கிறார், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்கிறார், கலை அமைப்பபை மோகன் மேற்கொள்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.











