செய்திக் குறிப்புகள்

விக்ரமுக்கு சாமி விக்ரம்பிரபுவுக்கு ரெய்டு

விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர்  முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெய்டு’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது.

இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நவம்பர் 3 ஆம் தேதி நடந்தது.

நிகழ்வில் முதலாவதாக பாடலாசிரியர் மோகன் ராஜா பேசியதாவது…..

இயக்குநர் முத்தையா இந்தப் படத்திற்குச் சிறப்பாக வசனம் எழுதியுள்ளார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடையும். விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா இதற்கு முன்பு இணைந்து நடித்த படங்கள் வெற்றி பெற்றது போல இதுவும் ஹிட்டாகி தயாரிப்பாளருக்கு இலாபம் தரக்கூடியதாக அமையும். சாம் சி.எஸ். இசையில் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன். படம் நன்றாக வந்திருக்கிறது. திரையரங்குகளில் பார்த்து ஆதரவு கொடுங்கள் என்றார்.
 
படத்தொகுப்பாளர் மணிமாறன் பேசியதாவது……

என்னை நம்பி வாய்ப்புக் கொடுத்த இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் நன்றி. படத்தைத் திரையரங்குகளில் பாருங்கள் என்றார்.

ஒளிப்பதிவாளர் கதிரவன் பேசியதாவது…..

இந்தப் படத்தில் நான் வேலை செய்ய முக்கிய காரணமாக இருக்கும் முத்தையா அண்ணனுக்கு நன்றி. இன்று தொழில்நுட்பம் அதிகம் வளர்ந்து விட்டது. உணர்வுகளைச் சரியான விதத்தில் வெளிப்படுத்துவதுதான் ஒளிப்பதிவாளருக்கு இருக்கும் பெரிய சவால் என்று நினைக்கிறேன். முடிந்தளவு அதைச் சரியாக இந்தப் படத்தில் கையாண்டுள்ளேன். என்னுடைய பார்வையில் எல்லாக் கலைஞர்களையும் வேறு விதமாகக் காட்ட முயற்சித்துள்ளேன். படத்தில் என்னை ஊக்குவித்து ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார்.

சண்டைப்பயிற்சி இயக்குநர் கணேஷ் பேசியதாவது……

கமர்ஷியல் படத்துக்கு ஏற்ற ஆக்‌ஷன் விஷயங்களை இதில் கொடுத்துள்ளோம். விக்ரம் பிரபு சார் அருமையாகச் செய்துள்ளார். இயக்குநர் முதல் படத்திற்காகக் கடினமான உழைப்பைக் கொடுத்துள்ளனர். ரெய்டு தீபாவளிக்கு சரவெடியாக இருக்கும் என்றார்.
 
கலை இயக்குநர் வீரமணி கணேசன்……

இயக்குநரான பின்பு கார்த்தி இதில் இரண்டு மடங்கு உழைப்பைக் கொடுத்துள்ளார். ரெய்டு ஒரு மாஸான படம். அதற்கேற்ப அனைவரும் உழைத்துள்ளனர் என்றார்.
 
நடிகர் ரிஷி பேசியதாவது…..

முத்தையா, விக்ரம் பிரபு சாருக்கு நன்றி. சண்டைக் காட்சிகளை முடிந்தளவு சிறப்பாகச் செய்துள்ளேன். எல்லோருக்கும் நன்றி என்றார்.

நடிகர் செளந்தரராஜன் பேசியதாவது……

நாளைக்கு ஷூட்டிங் எனும் போது என்னை அதற்கு முந்தைய நாள் அழைத்தார்கள். முத்தையா அண்ணனிடம் படம் நடிக்க வேண்டும் என்பது எனக்கு நீண்ட நாள் ஆசை. ‘குட்டிப்புலி’ படத்தில் நான் நடிக்க வேண்டியது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப் போனது. அதனால் இந்தப் படத்தின் வாய்ப்பு வந்தபோது கதை கேட்காமல் ஒத்துக்கொண்டேன். இயக்குநர் கார்த்தி சிறப்பாகச் செய்துள்ளார். ஆக்‌சன் காட்சிகளோடு இளைஞர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா என அனைவரும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம். எல்லோருக்கும் வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் வேலு பிரபாகரன் பேசியதாவது……

இந்தப் படத்தில் இயக்குநர் கார்த்திக், விக்ரம் பிரபு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. என்னை ஒரு இயக்குநராக அறிமுகப்படுத்தியதில் நடிகர் பிரபுவுக்கு முக்கிய பங்குண்டு. அப்படியானவரின் மகனுடன் நடித்தது எனக்கு மகிழ்ச்சி. இந்த நாட்டை கீழான நிலையில் இருந்து மீட்க கலைஞர்கள் முக்கியம். சாதி ஒழிப்பு, சனாதன ஒழிப்பை கலை மூலம் முன்னெடுக்க வேண்டும். வாய்ப்புக்கு நன்றி என்றார்.
 
நடிகர் கண்ணன் பொன்னையா பேசியதாவது…..,

முத்தையா சாரின் வசனத்தில் நடித்தது எனக்குப் பெருமை. இயக்குநர் கார்த்தி சின்னப் பையனாக இருந்தாலும் சிறப்பாக வேலை பார்த்துள்ளார். சூர்யாவுக்கு ‘காக்க காக்க’ போல, விக்ரமுக்கு ‘சாமி’ போல, விக்ரம் பிரபுவுக்கு ‘ரெய்டு’ ஒரு பிராண்டாக அமையும் என்றார்.
 
நடிகர் செல்வா பேசியதாவது…..

வலிமை படத்தில் இருந்து தொடர்ந்து நான்காவது போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். என் அப்பாவுக்காக போலீஸ் கதாபாத்திரங்கள் செய்வேன். போலீஸ் பற்றி நிறைய நெகட்டிவான விஷயங்கள் வருகிறது. அவர்கள் பற்றி நல்லது வைரல் ஆவதில்லை. அப்பாவின் நினைவாக என் சம்பளத்தில் இருந்து சில நல்ல விஷயங்கள் செய்ய இருக்கிறேன். ரெய்டு படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.

நடிகை அனந்திகா பேசியதாவது…..,

இது எனக்கு முதல் படம். நல்ல அனுபவம் கிடைத்திருக்கிறது. படம் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் என்றார்.
 
இயக்குநர் கார்த்தி பேசியதாவது…..

இது என்னுடைய முதல் படம். இந்த சந்தோசத்தைக் கொடுத்த முத்து மாமாவுக்கு நன்றி. விக்ரம் பிரபு எனக்கு அண்ணன் போல. அந்த அன்பு கடைசி வரை இருக்கும். ஸ்ரீதிவ்யா சிரித்த முகமாகவே இருப்பார். என்னை நம்பி இந்தப் படத்திற்குள் வந்த அனைவருக்கும் நன்றி. படம் 10ஆம் தேதி வெளியாகிறது என்றார்.
 
இயக்குநரும் இந்தப் படத்தின் வசனகர்த்தாவுமான முத்தையா பேசியதாவது……

‘கொம்பன்’, ‘மருது’ போன்ற மண் சார்ந்த படங்களை முடித்துவிட்டு சிட்டி சார்ந்த ஒரு கதை எடுப்போம் என நினைத்திருந்தேன். அந்த நம்பிக்கையை என் மீது கொடுப்போம் என ‘ரெய்டு’ படத்தின் ஒரிஜினல் ரீமேக் உரிமையை வாங்கினேன். அந்தச் சமயத்தில் ‘டாணாக்காரன்’ நல்ல ரீச் ஆகியிருந்தது.அதனால், விக்ரம் பிரபு சாரிடம் படம் காட்டி கேட்டேன். அவரும் ஒத்துக் கொண்டார். என் தங்கச்சி பையன் சின்சியராக செய்திருக்கிறான். என் பெயருக்காக இதில் பல பேர் வந்திருப்பது மகிழ்ச்சி. ‘ரெய்டு’ படம் நன்றாக வந்திருக்கிறது. தீபாவளிக்கு நல்லபடியாக வெற்றி பெற வேண்டும் என்றார்.
 
நடிகை ஸ்ரீதிவ்யா பேசியதாவது……

‘ரெய்டு’ படம் நான் முத்தையா சாருக்காகதான் நடித்தேன். ‘மருது’ படத்தில் எனக்கு அருமையான கதாபாத்திரம் முத்தையா கொடுத்தார். விக்ரம் பிரபுவுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
 
நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது…..

நெகட்டிவிட்டியை வைத்துத்தான் இந்தப் படம் உருவாக்கியுள்ளோம். நல்ல கதைகளைத்தான் தேர்ந்தெடுப்பேன். இது கொஞ்சம் கமர்ஷியல் படம். எனக்கு ஆக்‌ஷன் பிடிக்கும். அதை கமர்ஷியலாக சில விஷயங்கள் எனக்காக சேர்த்து முயற்சி செய்து கொண்டு வந்துள்ளோம். ஸ்ரீதிவ்யாவை பல வருடங்கள் கழித்துச் சந்தித்துள்ளேன். இயக்குநர் கார்த்தி, வேலு பிரபாகரன் சார் என அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. நான் லீனியர் முறையில்தான் ரெய்டு கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் விஷூவலுக்காக இசையை சாம் சூப்பராக கொடுத்துள்ளார்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts