செய்திக் குறிப்புகள்

பாலுமகேந்திராவின் வீடு படம் போல் இருக்கும் – 3 பிஎச்கே படத்துக்குப் பாராட்டு

நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 3 பிஎச்கே.இப்படத்தில் சித்தார்த்துடன், சரத்குமார், தேவயாணி, யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘8 தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.சாந்தி டாக்கீஸ் சார்பில், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரித்துள்ளார்.

அழகான உணர்வுகளுடன் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு இதயத்தைத் தொடும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.இப்படம் ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா ஜூன் 26 அன்று நடைபெற்றது.

விழாவில் இயக்குநர் ராம் பேசியதாவது….

ஜூலை 4 எனக்கும், சித்தார்த், அருண் மூவருக்கும் முக்கியமான நாள். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா எனது அசிஸ்டெண்ட்டாக இருந்தார். ‘தங்க மீன்கள்’ படம் நான் எடுத்த சமயத்தில் அருண் என்னிடம் வந்தார். அவர் வந்ததும் எங்களுக்கு நம்பிக்கை வந்தது. ‘தங்க மீன்கள்’ வெளியாகுமா? இல்லையா? என்று இருந்த சமயத்தில் பலரும் என்னை விட்டுப் போனாலும் அருண் என்னுடன் தொடர்ந்து பயணித்தார். அவர் மூலமாகத்தான் கோடம்பாக்கத்தில் பலருடைய அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அவரைப் பார்த்தாலே எனக்கு உற்சாகம் பிறக்கும். அவருக்கு ஆல் தி பெஸ்ட்! தமிழில் முக்கிய படங்களைத் தயாரிப்பது மட்டுமல்லாது இயக்கவும் செய்வார் அருண். ’கற்றது தமிழ்’ ரிலீஸான பிறகு என்னிடம் பேச நினைத்த ஒரே ஹீரோ சித்தார்த். அவரை மிகவும் அகங்காரமானவர், எதிராளியின் மனதைப் பார்க்காமல் பேசி விடுபவர் என்ற பிம்பம் எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால், அவர் வளர்ந்த குழந்தை. அவர் படத்துக்கு வாழ்த்துகள். ’எட்டுத் தோட்டாக்கள்’ எனக்கு மிகப்பிடித்த படம். அவருக்கும் வாழ்த்துகள். தேவயானி, சரத்குமார் இருவரும் நடிப்பில் மிரட்டுபவர்கள். படத்திற்கு வாழ்த்துகள் என்றார்.

நடிகை சரஸ் மேனன் பேசியதாவது….

இந்த அற்புதமான வாய்ப்புக் கொடுத்த அருண் விஸ்வா, சாந்தி டாக்கீஸூக்கு நன்றி. சித்தார்த் சாரை உதவி இயக்குநராக இருக்கும் போதிருந்தே தெரியும். அவரது வளர்ச்சி இன்ஸ்பையரிங்கான விஷயம். மீதா, தலைவாசல் விஜய், இயக்குநர் ஸ்ரீகணேஷ் என எல்லோரிடமும் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு கொடுங்கள் என்றார்.

நடிகர் விவேக் பிரசன்னா பேசியதாவது….

மனித உணர்வுகளை அழகாகத் திரையில் கொண்டு வரும் கலைஞர் ஸ்ரீகணேஷ். இந்தப் படத்தில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் நிறைவான ஒன்று. சித்தார்த் சார் மற்றும் சரத் சார் இருவரும் இந்த 3BHK வீட்டைக் கட்டி முடிக்க பெரிய பலம். சிறுவயதில் நான் சரத் சாருக்குதான் இரசிகன் ஆனேன். தேவயாணி மேம், சைத்ரா, மித்து ஆகியோருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாகப் பணிபுரிந்திருக்கிறார்கள். எனது சகோதரர் கார்த்திக் நேத்தா இந்தப் படத்தின் மூலம் 100ஆவது படத்தை அடைந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சி என்றார்.

நடிகர் சரத்குமார் பேசியதாவது….

இந்தப் படத்தைக் கொடுத்த ஸ்ரீக்கு நன்றி. சித்தார்த் தைரியமான, அற்புதமான நபர். நாளை ‘சூர்யவம்சம்’ திரைப்படம் வெளியாகி 28 வருடங்களை நிறைவு செய்கிறது. ஏழை, நடுத்தர வர்க்கம், பணக்காரர்கள் என அனைவருக்கும் சொந்த வீடு என்பது பெரும் கனவு. வீட்டில் ஒரு செண்டிமெண்ட் அட்டாச் செய்து கதை சொல்லி இருக்கிறார்கள். யதார்த்தமான கதையை அதன் யதார்த்தம் மீறாமல் ஸ்ரீகணேஷ் சொல்லி இருக்கிறார். வாழ்க்கை சவாலானதுதான். அதில் ஜெயித்துக் காட்ட வேண்டும். சமீபத்தில் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அடுத்த நாள் நான் படப்பிடிப்பில் சென்று நடித்தேன். அந்த மனப்பான்மையை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தோல்வியை நினைத்துக் கொண்டே இருந்தால் வெற்றி கிடைக்காது. ஏனெனில் நானும் பத்திரிக்கையாளராக இருந்துதான் நடிகன் ஆனேன். சென்னையில் மட்டும் 11 வீடுகள் மாறியிருப்போம். இந்தப் படத்தில் நடிக்கும் போது நாங்கள் அனைவரும் குடும்பமாக மாறி விட்டோம். அருண் விஸ்வா எனது சகோதரர். படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள். கனவெல்லாம் நிஜமாகும் என்றார்.

நடிகை மீதா பேசியதாவது….

இந்தப் படம் எங்களுடைய குடும்பக் கதை மட்டுமல்ல! நம் அனைவருடைய குடும்பக் கதையும்தான். இந்த அழகான வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ஸ்ரீ மற்றும் சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வாவுக்கு நன்றி. படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் அழகாக இருக்கு. சித்தார்த் சார் ரொம்ப சப்போர்ட்டிவ். சரத் சார் நிறைய சொல்லிக் கொடுத்தார். தேவயானி மேம் எனக்கு அம்மா போலதான். தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர் என்றார்.

நடிகை சைத்ரா பேசியதாவது….

முதல் வேலை, முதல் வண்டி இதெல்லாம் நமக்கு எவ்வளவு ஸ்பெஷலோ அதுபோல நான் நடித்த முதல் தமிழ்ப் படம் ‘3BHK’ ரொம்பவே ஸ்பெஷல். வாய்ப்புக் கொடுத்த ஸ்ரீகணேஷ், அருண் விஸ்வாவுக்கு நன்றி. சரத்குமார், தேவயானியின் ‘சூர்யவம்சம்’ பலமுறை பார்த்திருக்கிறேன். மீதாவிடம் நிறைய பேசியிருக்கிறேன். சித்தார்த் போன்ற ஒரு அண்ணன், நண்பன், மகன் எல்லோர் வாழ்விலும் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு எல்லோரிடமும் அன்பாக இருந்தார். எல்லோரும் திரையரங்கிற்குச் சென்று படம் பாருங்கள் என்றார்.

இயக்குநர் மடோன் அஸ்வின் பேசியதாவது….

’நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் இருந்தே ஸ்ரீகணேஷ் 15 வருட பழக்கம். மனித உணர்வுகளை அழகாகக் கொண்டு வருவது ஸ்ரீக்கு கைவந்த கலை. நிச்சயம் படம் ஹிட்டாகும். அருண் விஸ்வா பழகுவதற்கு எளிதான தயாரிப்பாளர். அம்ரித் இசை அற்புதம். வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசியதாவது….

நாங்கள் எல்லோருமே ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் இருந்து நண்பர்கள். அப்போதெல்லாம் ஸ்ரீகணேஷ் சிட்டுக்குருவிக்கெல்லாம் பாவம் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென பார்த்தால் ‘எட்டுத் தோட்டாக்கள்’ எடுத்து மிரள வைத்தான். மிகவும் மென்மையான நபர். மியூசிக், எடிட்டிங் எல்லாம் நன்றாக வந்துள்ளது. அருண் விஸ்வாவுக்கும் வாழ்த்துகள். ஒரு படம் பார்வையாளர்களுடன் எந்தளவுக்கு கனெக்ட் ஆகிறது என்பதுதான் அதன் வெற்றி. அந்த வகையில் இந்தப் படமும் ஹிட்டாகும் என்றார்.

இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் பேசியதாவது….

ஸ்ரீகணேஷ் திறமையாளன். அதிக புத்தகம் வாசிப்பான். சித்தார்த், சரத் சார், தேவயானி மேம் என எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் ரவிக்குமார் பேசியதாவது….

ராம் சார் சொன்னது போல அருண் விஸ்வா எனக்கும் நம்பிக்கை. அருணின் நம்பிக்கை, ஸ்ரீகணேஷின் மென்மை, சித்தார்த் சாரின் கருணை இதெல்லாம்தான் ‘3BHK’. உணர்வு பூர்வமாக இந்தப் படம் பார்வையாளர்களுக்குப் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.

இயக்குநர் அரவிந்த் பேசியதாவது…

இது வீடு பற்றிய படம் இல்லை. பலருடைய கனவை நோக்கி ஓடக்கூடிய நம்பிக்கை தரும். படம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. நிச்சயம் உங்கள் எல்லோருக்கும் படம் கனெக்ட் ஆகும் என்றார்.

இயக்குநர் சக்திவேல் பேசியதாவது….

இந்த வருடம் வந்திருக்கும் நல்ல படங்கள் பட்டியலில் இந்தப் படமும் நிச்சயம் இருக்கும்.வாழ்த்துகள் என்றார்.

நடிகை தேவயானி பேசியதாவது….

ஃபீல் குட், பாசிட்டிவான படம் இது.சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா அற்புதமான தயாரிப்பாளர். அவர்களிடம் இருந்து கதை வந்த போது மகிழ்ச்சியாக இருந்தது. ஸ்ரீகணேஷ் தான் நினைத்ததை நடிகர்களிடம் இருந்து மென்மையான வாங்கி விடக் கூடிய இயக்குநர். படம் அழகாக வந்திருக்கிறது. பல வருடங்கள் கழித்து சரத் சாருடன் இணைந்து நடித்திருக்கிறேன். இப்போதும் ‘சூர்யவம்சம்’ படம் இரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. சித்தார்த் ‘பாய்ஸ்’ படத்தில் இருந்து எனது தம்பியுடன் சேர்ந்து பார்த்திருக்கிறேன். எனர்ஜி, திறமையானவர். எல்லாத் துறைகளிலும் அவருக்கு ஆர்வம் உண்டு. அவருக்கு சினிமாவில் எப்போதும் தனியிடம் உண்டு. மீதா, சைத்ரா இருவரும் ஸ்வீட் ஹார்ட்ஸ். அம்ரித்திற்கு இன்னும் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. தொழில்நுட்பக் குழு சிறப்பாகப் பணிபுரிந்துள்ளது. இந்தப் படம் உணர்வு. படம் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் என்றார்.

இசையமைப்பாளர் அம்ரித் பேசியதாவது…..

இந்தப் படம் அற்புதமான கனவு. இந்தப் படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சி. திங்க் மியூசிக் எனக்குக் குடும்பம் போல, வருங்காலத்தில் இன்னும் அதிகம் இணைந்து பணிபுரிவோம் என்று நம்புகிறோம். சித்தார்த், சரத் சார், தேவயானி, மீதா மற்றும் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

இயக்குநர் மாரிசெல்வராஜ் பேசியதாவது….

இந்தப் படம் நான் பார்த்துவிட்டேன். ஸ்ரீகணேஷின் கரியரில் இந்தப் படம் நிச்சயம் தி பெஸ்ட்டாக இருக்கும். ஒரு ஹீரோவின் வீட்டிற்குள் முதல் முறை நான் போயிருக்கிறேன் என்றால் அது சித்தார்த் சார்தான். அவரின் வெளிவராத பாடல்கள் எல்லாம் நிறைய கேட்டிருக்கிறேன். ராம் சார் நினைவு வைத்திருக்கும் கதாநாயகி பெயர் தேவயானி. ’ஐயா’ படத்துக்குப் பிறகு சரத் சாரின் மனது நடித்திருக்கும் படம் இது. அம்ரித் இசை நன்றாக இருக்கிறது. என் வாழ்வில் ராம் சார் ஒரே தூண். அதுபோல அருண் விஸ்வாவும் எனக்கு நிறையச் செய்திருக்கிறார். நான் இயக்குநராக வேண்டும் என ஆசைப்பட்ட இரண்டாவது நபர் அருண். ’பரியேறும் பெருமாள்’ கதையை பல அலுவலகங்களுக்குக் கொண்டு சென்றிருக்கிறார் அருண். அதை எல்லாம் என்னால் மறக்க முடியாது. நிச்சயம் நானும் அருணும் சீக்கிரம் படம் செய்ய வேண்டும். நன்றி என்றார்.

நடிகர் ரவி மோகன் பேசியதாவது….

இந்தப் படம் நான் பார்த்துவிட்டேன். மிகப்பெரிய உணர்வாக இந்தப் படம் எனக்கு அமைந்தது. அது உங்களுக்கும் கிடைக்கும். பாலு மகேந்திரா அவர்களின் ‘வீடு’ எந்தளவுக்கு பேசுபொருளாக அமைந்ததோ அதுபோல இந்தப் படமும் உங்களுக்கு அமையும். நானும் சித்தார்த்தும் ஒன்றாக வளர்ந்தோம். சித்தார்த் எப்போதும் தப்பான படங்கள் செய்ததில்லை. இனியும் அப்படித்தான் இருப்பார். அவருக்கு வாழ்த்துகள். மீதா, சைத்ரா இருவருக்கும் வாழ்த்துகள். நான் பிறந்ததில் இருந்தே வாடகை வீட்டில் இருந்தது இல்லை. சொந்த வீட்டில் தான் இருந்திருக்கிறேன். ஆனால், இப்போது வாடகை வீட்டில் இருப்பதால் என்னால் இந்தக் கதையைத் தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. சரத் சார், தேவயானி மேம் சிறந்த நடிகர்கள். நல்ல கதைகளையும் படங்களையும் பார்க்க வேண்டும் என விரும்புவர்களுக்கான படமாக இது இருக்கும் என்றார்.

இயக்குநர் ஸ்ரீகணேஷ் பேசியதாவது….

ரொம்ப எமோஷனலாக இருக்கிறது. அதிகம் யோசிக்காமல் மனதாரச் செய்ய வேண்டும் என்று இயக்கிய படம்தான் இது. இந்தக் கதையைப் படித்துப் படமாக்கலாம் என்று முடிவெடுத்தவர் அருண் விஸ்வாதான். அவருக்கு நன்றி. அடுத்து வந்தது சித்தார்த் சார்தான். நல்ல கதையைத் தேடுபவர் அவர். சரத் சார், தேவயானி மேம் வந்ததும் கதை முழுமையாகியது. மீதாவுக்கும் நன்றி. வெற்றிப் படம் கொடுத்து விட்டு ஹீரோவுக்கு தங்கையாக நடித்திருப்பது பெரிய விசயம். சைத்ராவும் சிறப்பாக நடித்திருக்கிறார். யோகிபாபு, சதீஷ், தலைவாசல் விஜய் சார், விவேக் பிரசன்னா, ஆவுடையப்பன் எல்லோருக்கும் நன்றி. தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. இதயப்பூர்வமாக அம்ரித் வேலை பார்த்தார். எழுத்தாளர் அரவிந்த் சச்சிதானந்தம் அவர்களின் ‘3BHK வீடு’ கதை எமோஷனலாக இருக்கும். அதில் இருந்துதான் இந்தப் படத்திற்கான ஆரம்பம் கிடைத்தது. இப்படியான ஒரு படம் எடுக்கக் காரணமும் என் குடும்பம்தான். என் நண்பர்களுக்கும் நன்றி என்றார்.

தயாரிப்பாளர் அருண் விஸ்வா பேசியதாவது….

அம்மா பெயரில் இருந்து ஆரம்பித்த இந்த தயாரிப்பு கம்பெனியில் இருந்து வரும் படங்கள் தரமாக இருக்க வேண்டும் என்பதுதான் எண்ணம். மடோன் அஸ்வின் தான் ஸ்ரீகணேஷை அறிமுகப்படுத்தினார். இந்தப் படம் எவ்வளவு வசூலிக்கும் என்பதைத் தாண்டி தயாரிப்பாளராக இந்தப் படம் தயாரித்ததில் திருப்தி. ராம் சார் கொடுக்கும் அங்கீகாரம் மறக்க முடியாதது. ராம் சாரின் ‘பறந்து போ’ படம் வெற்றியடைய வாழ்த்துகள். சித்தார்த் சார், சரத் சார், தேவயானி மேம், மீதா எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அம்ரித் இன்னும் பல உயரங்கள் தொடுவார். உங்கள் பெற்றோர், குடும்பத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி என்றார்.

நடிகர் சித்தார்த் பேசியதாவது….

சினிமாவுக்கு வந்த பிறகு இது எனது நாற்பதாவது படம். நாற்பது படம் நடித்து விட்டாயா? என எனது அப்பா ஆச்சரியமாகக் கேட்டபோது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. எழுத்தும் தயாரிப்பும் எனக்கு தாய் தந்தை. நான் நடித்த நாற்பது படங்களையும் அப்படித்தான் பார்க்கிறேன். நாற்பதாவது படத்தை என்னை நம்பிக் கொடுத்த ஸ்ரீ, அருணுக்கு நன்றி. இந்தப்படம் இன்னும் ஸ்பெஷலாக அமையக் காரணம் சரத் சார் & தேவயானி மேம். தேவயானி, மீதா, சைத்ரா இந்த மூன்று கதாபாத்திரங்களின் புத்திசாலித்தனம், பொறுப்புதான் பிரபுவையும் வாசுதேவனையும் நகர்த்திச் செல்லும். சின்ன வயதில் இருந்து சொந்த வீட்டில்தான் இருந்தேன். எனது மனைவிக்காகதான் சமீபத்தில் வீடு வாங்கினேன். இந்தப் படத்தில் நடித்தபோதே வீடு வாங்கியது நல்ல சகுனம். பிடிவாதம் கொண்ட தனக்கு என்ன வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கும் வளர்ந்த குழந்தைதான் ஸ்ரீகணேஷ். அம்ரித் இசையில் இன்னும் பெரிய உயரம் அடைவார். மீதா, சைத்ரா மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக வேலை பார்த்துள்ளனர். என் வீட்டில் ரவியும் இன்னொரு மகன் தான். படம் உங்கள் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts