சூர்யா கருத்து சுதாகொங்கரா கடுப்பு – கைவிடப்பட்டது புறநானூறு?
2020 ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியானது ‘சூரரைப் போற்று’ திரைப்படம். அந்தப் படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தேசிய விருதையும் வென்றது.
அதையடுத்து இரண்டாவது முறையாக சூர்யாவும், சுதா கொங்கராவும் இணைவதாக கடந்தாண்டு அக்டோடர் மாதம் அறிவிக்கப்பட்டது.
2023 அக்டோபர் 26 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில்…
சூர்யாவின் திரையுலகப் பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில் ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் ஒன்று. இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் மிகவும் சவாலான பாத்திரங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் , விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100 ஆவது படமிது. இந்தத் திரைப்படத்தை சூர்யாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா, சூர்யா மற்றும் இராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.கடைசியில் மார்ச் 27 அன்று சென்னையில் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்பட்டது.
திடீரென மார்ச் 18 ஆம் தேதி, சூர்யாவும், இயக்குநர் சுதா கொங்கராவும் இணைந்து கையொப்பமிட்டு ஒரு பதிவை வெளியிட்டனர்.
அதில்,புறநானூறு படப்பிடிப்புக்கான முன் தயாரிப்புப் பணிகளுக்குக் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.இப்படத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றுவது சிறப்பு வாய்ந்தது. இந்தக் கூட்டணி இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதும் கூட.எங்களது சிறந்த படைப்பை உங்களுக்குக் கொடுப்பதற்காகப் பணியாற்றி வருகிறோம். விரைவில் அடுத்தகட்டப் பணிகளும், படப்பிடிப்பும் தொடங்கும். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
அப்போது,படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருந்த இடங்களில் வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கவிருப்பது உட்பட பல காரணங்கள் சொல்லப்பட்டன.
அதோடு, புறநானூறு படப்பிடிப்பு காலவரையறையின்றித் தள்ளிப் போயிருக்கிறது. ஆனால், நிச்சயம் படம் நடக்கும் என்று சொன்னார்கள்.
ஆனால்,அந்தப்படத்தின் கதை தொடர்பாக இயக்குநர் சுதாகொங்கராவுக்கும் சூர்யாவுக்கும் இடையே கடும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டதென்று சொல்கிறார்கள்.இதனால் அந்தப்படத்தைக் கைவிட்டுவிட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
அப்படி என்ன கருத்து வேறுபாடு?
அந்தப்படத்தின் கதை, 1965 களில் தமிழ்நாட்டில் நடந்த மாணவர்கள் முன்னின்று நடத்திய மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையப்படுத்திய கதை.
இப்போது சூர்யா மும்பையில் குடியேறியிருக்கிறார்.அதோடு இந்திப்படங்களிலும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.இந்நேரத்தில் இந்தித் திணிப்பை எதிர்க்கும் கதையில் சூர்யா நடித்தால் இந்தி பேசும் மக்களிடையே எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஜோதிகா தரப்பிலிருந்து அவருக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.
அதை ஏற்றுக் கொண்ட சூர்யா, சுதாகொங்கராவிடம் தீவிர இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்றில்லாமல் மிக மென்மையாக மாற்றவேண்டும் அல்லது இந்தித் திணிப்பு என்று கூட இல்லாமல் மாணவர் போராட்டம் அதில் நடக்கும் நன்மை தீமை ஆகியனவற்றை மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்.
இதனால் இயக்குநர் சுதாகொங்கரா கோபமாகிவிட்டாராம்.கதையின் உயிர்நாடியே இந்தித் திணிப்பு எதிர்ப்புதான் அதையே மாற்றுவது என்றால் இந்தப்படமே வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாராம்.
இதனால் அந்தப்படம் நடக்காது என்கிறார்கள்.
அதேசமயம், சுதா கொங்கராவை சமாதானப்படுத்தி வேறொரு கதையில் ஒரு படம் செய்யலாம் என்று திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்களாம்.
என்ன நடக்கப்போகிறதென பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.











