தனுஷின் கர்ணன் படப்பிடிப்புக்குத் தடை
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கர்ணன்’. மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தாணு தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்தப் படத்துக்கு கருணாஸின் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் மணியாச்சி சாதிக் கலவரத்தை மையப்படுத்தி உருவாகும் ‘கர்ணன்’ படத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும், அதன் இயக்குநர் மாரி செல்வராஜைக் கைது செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இந்த அறிக்கையின் விளைவாக இன்று கர்ணன் படத்தின் படப்பிடிப்புக்கு உள்ளூர் நிர்வாகம் தடை விதித்திருக்கிறதாம். படப்பிடிப்பு தொடர்ந்தால் அப்பகுதியில் போராட்டங்கள் நடக்கக்கூடும் என்பதால் இந்தத் தடை என்கிறார்கள்.
இதனால் இன்று படப்பிடிப்பு நடக்கவில்லையாம். இத்தோடு முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்துக் கொள்ளக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.











