விமர்சனம்

ஒரு நொடி – திரைப்பட விமர்சனம்

எம்.எஸ்.பாஸ்கர் காணாமல் போகிறார்.அவர் மனைவி ஸ்ரீரஞ்சனி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார்.காவல்நிலைய ஆய்வாளரான நாயகன் தமன் குமார் அந்த வழக்கை விசாரிக்கிறார்.அந்த விசாரணையின் போக்கில் நிகிதா மரணமும் வருகிறது.இந்த வழக்குகளும் அவற்றின் விசாரணையும்தாம் மொத்தப்படத்தின் திரைக்கதை.

நாயகன் தமன்குமார்,காவல்துறை ஆய்வாளர் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார்.தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் நன்று.காவல்துறையினருக்கே உரிய அலட்சிய மனோபாவமும் விசாரணையின் தீவிரத்தில் கூர்மதியாளரின் முகபாவமும் இயல்பாக அவருக்கு அமைந்திருக்கிறது.

திரைக்கதையைத் தொடங்கி வைக்கும் கதாபாத்திரம் என்பதால் கொஞ்சநேரமே வந்தாலும் நிலைத்து நிற்கிறார் எம்.எஸ்.பாஸ்கர்.அவர் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனி அளவாக நடித்திருக்கிறார்.

மரணமடைந்து திரைக்கதையில் திருப்பத்தை ஏற்படுத்தும் நிகிதா, அழகாகவும் இருக்கிறார் நன்றாகவும் நடித்திருக்கிறார்.

கந்துவட்டிக்காரராக நடித்திருக்கும் வேல.இராமமூர்த்திக்குக் கதையில் பெரும்பங்கு இருக்கிறது.அதற்கேற்ப நடித்திருக்கிறார்.

சட்டமன்ற உறுப்பினராக நடித்திருக்கும் பழ.கருப்பையா,நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் தீபா சங்கர், முடிதிருத்தும் கலைஞர் விக்னேஷ் ஆதித்யா,அருண் கார்த்திக், கஜராஜ், கறுப்பு நம்பியார் ஆகியோர் தங்கள் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.இதுபோன்ற கதைக்களத்துக்கு ஒளிப்பதிவின் பங்கு மிக முக்கியம் என்பதை உணர்ந்து பணியாற்றியிருக்கிறார்.அதனால் திரைக்கதையில் இருக்கும் பரபரப்பு காட்சிகளிலும் வெளிப்பட்டிருக்கிறது.

சஞசய் மாணிக்கம் இசையமைப்பில் பாடல்கள் கேட்கும் இரகம். ஜெகன்கவிராஜ் எழுதியுள்ள கொல்லாதே கண்ணார பாடல் கவனிக்க வைத்திருக்கிறது.பின்னணி இசை திரைக்கதையோட்டத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறது.

எஸ்.குரு சூர்யாவின் படத்தொகுப்பு படத்தை வேகமாக்கியிருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் பி.மணிவர்மன்.ஒரு மெல்லிய கதையை எடுத்துக் கொண்டு அதை முழுநீளப் படத்துக்கான திரைக்கதை ஆக்கி அதற்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்ந்தெடுத்ததிலேயே பாதி வெற்றி பெற்றுவிடுகிறார்.சாமானியர்களும் கண்டுகொள்ளும் வகையில் திரைக்கதையில் இருக்கும் சில குறைபாடுகளைக் களைந்திருக்கவேண்டும்.

நொடிநேரத்தில் நாம் எடுக்கும் முடிவு எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது என்பதை வசனங்களால் விவரிக்காமல் பார்த்து உணர வைப்பது அவருடைய இயக்கத்துக்குப் பலம்.

– ஆநிரையன்

Related Posts