Uncategorized செய்திக் குறிப்புகள்

மன உளைச்சல்கள் தரும் நிகழ்வுகள் – நடிகர் பரத் வேதனை

ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இயக்கியுள்ள படம் லவ்.இப்படத்தில், பரத் – வாணி போஜன் ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர்.

காதல் மற்றும் த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா ஜூலை 13 அன்று, படக்குழுவினர் கலந்து கொள்ள ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

மூத்த பத்திரிகையாளர்கள் இணைந்து “லவ்” படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டனர்.
நிகழ்வில் பாடலாசிரியர் ஆ.பா.இராஜா பேசியதாவது…

முதலில் பிஜி முத்தையா சார் தான் இந்தப் படத்திற்காக என்னைக் கூப்பிட்டார். இயக்குநர் யாரெனக் கேட்டபோது ஆர்பி.பாலா என்றார். அவரே பல படங்களுக்கு பாடல்கள் எழுதியவர், மிகச்சிறந்த பாடலாசிரியர். அவர் என்னை ஏன் கூப்பிடுகிறார்? என்று தோன்றியது. பாடல் எழுதத் தெரிந்த இயக்குநரிடம் பணிபுரிவது மிகக் கடினம். ஆனால் அவர் நான் பிஸியாக இருக்கிறேன், நீங்கள் எழுதுங்கள் என்றார். வைரல் வரிகள் இல்லாமல் முழுக்க தமிழில் பாட்டுக் கேட்ட முதல் இயக்குநர் இவர் தான். அதுவே மிக மகிழ்ச்சியாக இருந்தது. படத்தின் பாடல் அற்புதமாக வந்துள்ளது, பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி என்றார்.
 
இசையமைப்பாளர்  ரோனி ரஃபேல் பேசியதாவது… 

தமிழில் இது எனது முதல் படம். கேரளாவில் நிறையப் படங்களுக்கு இசையமைத்துள்ளேன். மலையாளப் படம் மூலம் தான் பரத் சார் அறிமுகம், பாலாவும் அறிமுகம். தமிழில் வேலை செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. பரத் சாரின் 50 ஆவது படத்தில் வேலை பார்ப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் ஆர்.பி.பாலாவுக்கு நன்றி. பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளன. படமும் நன்றாக வந்துள்ளது, படம் பார்த்து ஆதரவளியுங்கள் நன்றி என்றார் என்றார்.

படத்தொகுப்பாளர் அஜய் மனோஜ் பேசியதாவது….

படம் பார்த்தேன், நன்றாக உள்ளது. பரத் மற்றும் கதாநாயகியின் கடைசி 20 நிமிடக் காட்சிகள் அருமையாக வந்துள்ளது. பரத் சாரின் 50 ஆவது படத்தில் பணிபுரிவது மகிழ்ச்சியாக உள்ளது. வாய்ப்பளித்த இயக்குநர் ஆர்.பி.பாலா சாருக்கு நன்றி என்றார்.

ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா பேசியதாவது…

ஒரு டீமோட பெரிய சக்ஸஸ் என்பது அந்த டீம் வெற்றி பெற்று மீண்டும் அதே டீம் சேர்ந்து வேலை பார்ப்பது தான். அது போல் “லவ்” படம் வெற்றி பெற்று இதே டீம் மீண்டும் வேலை பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் அனைவருக்கும் நன்றி என்றார்.
 
நடிகை சுயம் சித்தா பேசியதாவது…

எனக்குத் தமிழ் கொஞ்சமாகத்தான் தெரியும். கோவிடுக்கு பிறகு வந்த முதல் படம் இது. எனக்கு மிகவும் நெருக்கமான படம், பட வாய்ப்பு தந்த ஆர்.பி.பாலா சாருக்கு நன்றி, படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
 
டேனியல்  பேசியதாவது….

இப்போதெல்லாம் யாரும் கதை சொல்வதில்லை, போன் செய்து,  என்ன லுக்?  ஃப்ரியா?  என கேட்டுவிட்டு, ஷூட்டிங் கூப்பிட்டு விடுகிறார்கள். டெய்லி பேட்டா போல் வேலை வருகிறது. இப்போதைய சினிமா அந்த மாதிரி மாறிவிட்டது.  லவ் படம் நன்றாக வந்துள்ளது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்.
 
நடிகை வாணி போஜன் பேசியதாவது….

நான் நிறையப் படங்கள் நடித்திருக்கிறேன். ஆனால் சில படங்களே மனதிற்கு முழு திருப்தியைக் கொடுக்கும். இந்தப்படத்தில் நான் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது. இந்தப் படத்தில் நானும் பரத்தும் நிறைய சண்டைகள் போட்டுள்ளோம், அடிகளும் பட்டது. ஆனால் அது படத்திற்காக மட்டும் தான், படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது உங்களுக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி என்றார்.

இயக்குநர் ஆர்.பி.பாலா பேசியதாவது…..

படம் ஜூலை 28 ஆம் தேதி வருகிறது. இப்போது படத்தை எடுப்பதை விட படத்தை ரிலீஸ் செய்வது கடினமாக இருக்கிறது. இப்படத்தின் டீம் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். பரத் படம் முழுவதும் பெரும் உறுதுணையாக இருந்தார். முத்தையா சார் இன்று வரை இப்படத்திற்கு வேலை செய்கிறார். அவர் படம் போல் பார்த்துக் கொள்கிறார். அவருக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். இசையமைப்பாளர் மரைக்காயர் படத்தில் வேலை செய்த போது, இந்தப்படம் பற்றிச் சொன்னேன். எனக்காக இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளார். டேனியல் மிகச் சிறந்த நண்பர். பரத் என்னை நம்பி 50 ஆவது படம் தந்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது, உங்களுக்குப் பிடிக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்.

நடிகர் பரத் பேசியதாவது…..

இங்கு எனது 50 ஆவது படத்தில் உங்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியது மகிழ்ச்சி. என் திரை வரலாற்றில் மோசமான படங்கள் செய்த போதும், நீ நல்லா பண்ணியிருக்க, நல்லா பண்ணு, நல்லா வருவ என எனக்குத் தொடர்ந்து ஊக்கம் தந்து வரும் உங்களுக்கு நன்றி. இந்தப் பயணம் மிகப்பெரியது. ஷங்கர் சார்,
ஏ.எம்.ரத்னம் சாருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். படம் செய்யும் போது மிக உற்சாகத்துடன் வேலை பார்க்கிறோம். ஆனால் படம் ரிலீஸ் என வரும் போது பெரும் பிரச்சனைகள் வந்து நிற்கிறது, மன உளைச்சல்கள் தருகிறது. சினிமா இரண்டாகப் பிரிந்து போயிருக்கிறது. ஆனால் நான் எப்போதும் என் வேலையைச் சிறப்பாகச் செய்து வருகிறேன். அது தான் முக்கியம். இந்தப் படம் எங்கேயும் உங்களுக்குப் போரடிக்காது, ஒரு சிறப்பான படம் பார்க்கும் அனுபவம் தரும். என் இயக்குநர் தயாரிப்பாளர் ஆர்.பி.பாலா சாருக்கு நன்றி. படக்குழுவினருக்கு நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts