செய்திக் குறிப்புகள்

வெற்றி முகத்தில் லிப்ரா ரவீந்தர் – தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நிலவரம்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தலைவர், மற்றும் பிற நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை சென்னையில் நடைபெற உள்ளது.

சங்கத்தேர்தலை திருவிழா கொண்டாட்டமாக, தேர்தலில் போட்டியிடும் அணியினர் மாற்றி விடுவார்கள்.

தேர்தல் வேட்புமனு பரிசீலனை முடிந்து இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து வாக்குப்பதிவு முடியும் வரை வாக்குரிமை உள்ள தயாரிப்பாளர்கள், அவருக்கு வேண்டியவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும். அதே நிலவரம் இந்த தேர்தலிலும் தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறது.

ஏற்கனவே சங்கப்பொறுப்புகளில் இருந்தவர்களே மீண்டும் நிர்வாகப் பொறுப்புகளுக்குப் போட்டியிடுகின்றனர்.

இந்தத்தேர்தலில் முதன்முறையாக லிப்ரா ரவீந்திரன் பொருளாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

கடந்த தேர்தலில் டி.ராஜேந்தர் அணியில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சிங்காரவடிவேலன் தற்போது சுயேட்சையாக பொருளாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.முரளி ராமசாமி அணி சார்பாக தற்போதைய பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், மன்னன் அணி சார்பாக லிப்ரா ரவீந்திரன், ஓயாத அலைகள் அணி சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நண்பரும் றெக்கை பட தயாரிப்பாளருமான கணேஷ், ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த நால்வரில் தயாரிப்பாளர்களின் விருப்பத்துக்குரியவராக லிப்ரா ரவீந்திரன் மாறி வருகிறார்.

எல்லோரும் அரசாங்க உதவி, நட்சத்திரக் கலைவிழா, சிறு முதலீட்டுப் படங்களுக்கு அரசு மானியம்,அரசு மூலம் வீட்டு வசதி சலுகைகள் என தேர்தல் வாக்குறுதிகளைக் கூறி வாக்குக் கேட்டு வருகின்றனர்.

கோடிக்கணக்கில் முதலீடு செய்து படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அரசிடமும், நடிகர்களிடமும் உதவிக்காக ஏன் கையேந்த வேண்டும்?.

கொடுக்கிற நிலையில் இருப்பவர்கள் பிறர் உதவிக்காக கையேந்தக் கூடாது.

நாம் தயாரிக்கும் திரைப்படங்களை சங்கத்தின் சார்பில் படங்களுக்கு இருக்கக்கூடிய அத்தனை வியாபார வாய்ப்புகளையும் பயன்படுத்தி செய்து கொடுத்தால் எந்தப்படமும் நஷ்டமடையாது. அது மட்டுமின்றி இந்த வேலைகளை முறைப்படி செய்து கொடுப்பதற்காக நடைமுறையில் வழங்கப்படும் சேவைக் கட்டணமே கோடிக்கணக்கில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்குக் கிடைக்கும் என சினிமா விழா மேடைகளில் பேசிவந்த லிப்ரா ரவீந்திரன், இப்போது,தான் தயாரிக்கும் திரைப்படங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தை தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிதியாக தருவேன் என மன்னன் தலைமையிலான வேட்பாளர்கள் அறிமுக்க் கூட்டத்தில் அறிவித்தார்.

இதுவரை நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல்களில் போட்டியிட்ட எந்தத்தயாரிப்பாளரும் இப்படிக் கூறியதில்லை.

தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸ் கொடுக்கும் சந்திரபிரகாஷ் ஜெயின் அவர் கொடுத்த கடனை வசூலிக்கவே பொருளாளர் பதவியைப் பயன்படுத்தினார் என்கிற குற்றசாட்டு தயாரிப்பாளர்கள் மத்தியில் எழுப்பபடுகிறது. அவரது போட்டி வேட்பாளர்களும் தங்கள் பிரசாரத்தில் இதனை முன்னிலைபடுத்துகின்றனர்.

லிப்ரா ரவீந்திரன் குறுகிய காலத்தில் தயாரிப்பாளர்கள் மத்தியில் பிரபலமானவர். கொரோனா காலத்தில் தயாரிப்பாளர்களுக்கு பொருளாதாரரீதியாக உதவிகளை செய்துள்ளார். அது மட்டுமின்றி தன்னிடம் உதவி கேட்டுவரும் தயாரிப்பாளர்களுக்கு கல்வி, மருத்துவ உதவிகளை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி செய்து வந்தவர்.

நாளை நடைபெற உள்ள தேர்தலில் வாக்கு கேட்பவர்களிடம், இதுவரை செய்த எந்த உதவியையும் கூறாமல் உங்களுக்காக உழைக்க எனக்கு ஒருமுறை வாய்ப்புத் தாருங்கள், வாக்களியுங்கள் எனக்கேட்பது தயாரிப்பாளர்கள் மத்தியில் அவருக்கான ஆதரவை அதிகரித்து வருகிறது.

சந்திரபிரகாஷ் ஜெயின் மீதான எதிர்ப்பு, மன்னனுக்கான ஆதரவு அலை ஆகியன இவரை வெற்றி பெற வைக்கும் என்பதே தேர்தல்களநிலவரமாக உள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளராக ஒரு மார்வாரி இருக்கும் நிலை மாறி உணர்வுள்ள ஒரு தமிழர் பொருளாளராக வேண்டும் என்பதும் இவருக்கான பலமாக அமைந்திருக்கிறது என்கிறார்கள்.

Related Posts