காற்றின் மொழி படத்தில் டப்பிங் பேசுவது ஏன்? – ஜோதிகா விளக்கம்
ராதாமோகன் இயக்கத்தில் காற்றின் மொழி படத்தில் நடித்துகொண்டிருக்கிறார் ஜோதிகா. அப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
தற்போது படத்தின் குரல்பதிவு பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் படம் பற்றி ஜோதிகா கூறியிருப்பதாவது…
காற்றின் மொழி, எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாகி விட்டது. அதனால் தான் நானே வசனங்கள் அதிகம் உள்ள இப்படத்திற்கு டப்பிங் செய்து வருகிறேன்.
பெண்கள் சுயமாகச் சம்பாதித்து, தங்கள் வாழ்க்கையை தங்களுக்கு பிடித்தபடி வாழ வேண்டும் என்ற கருத்தை இப்படம் வலியுறுத்துகிறது. அதற்கு அவர்கள் குடும்பத்தினரும் ஆதரவு தர வேண்டும்.
இத்தகைய பெண்களின் மேம்பாட்டிற்கு வழி காட்டும் 10 கட்டளைகளை உள்ளடக்கிய ஒரு போஸ்டர் டிசைன் காற்றின் மொழி படத்திற்கு உருவாக்கியது எனக்குப் பிடித்து இருந்தது.
அதில் குறிப்பிட்டு இருந்த பெண்களுக்கான பத்து கட்டளைகள்..
1.உன் விருப்பம் போல் உடை உடுத்துவாயாக.
2.நீ விரும்புவதைச் செய்வாயாக.
3. உன் கணவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டாதிருப்பாயாக.
4.பசித்தால் முதலில் நீயே சாப்பிடுவாயாக.
5.குண்டாய் இருக்க விரும்பினால் குண்டாய் இருப்பாயாக.
6.வீட்டுப் பணிகளில் உன் கணவனையும் பங்கெடுக்க செய்வாயாக.
7.நீ சம்பாதித்து உன் விருப்பம் போல் செலவு செய்வாயாக.
8.உன் மனம் மறுப்பதை, ஏற்காதிருப்பாயாக
9.ஆணும் பெண்ணும் சரி சமம் என்பதை அறிவாயாக.
10.மனதில் பட்டதைச் சொல்வாயாக.
இவ்வாறு ஜோதிகா தெரிவித்திருக்கிறார்.











