இந்தியன் 2 படப்பிடிப்பு – மீண்டும் தொடங்குவதில் கருத்து வேறுபாடு
இந்தியன் 2 படப்பிடிப்பில், பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு ஒன்பதரை மணியளவில் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுப்பட்ட போது அதைத் தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது.
இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா,கலை இயக்குநரின் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகிய மூவர் இறந்தனர்.
இவ்விபத்தில் ஷங்கர், கமல், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் மயிரிழையில் உயிர் தப்பினர் என்று சொல்லப்பட்டது.
இதனால் காவல்துறையில் புகார், வழக்குப் பதிவு, கைது நடவடிக்கை ஆகியன நடந்தன. இதனால் அப்படக்குழுவில் பணியாற்றியவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கத் திட்டமிட்டுள்ளனராம். பிப்ரவரி 26 முதல் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டு வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்களாம்.
விபத்து நடந்த ஈவிபியில் இன்னும் நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டியிருக்கிறதாம். அதனால் பிப்ரவரி 26 அன்று அங்கேயே படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
ஆனால் ஒருசிலர் கொடூர சம்பவம் நடந்து ஒருவாரத்திலேயே படப்பிடிப்பு தொடங்குவதா? அதுவும் அதே இடத்திலேயே தொடங்குவதா? என்று எதிர்ப்புத் தெரிவிப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால், இயக்குநர் தரப்பில் ஏற்கெனவே பல தாமதங்கள், இப்போதும் விட்டால் இன்னும் தாமதம் ஏற்படும்,அதுமட்டுமின்றி இதற்கடுத்து படப்பிடிப்பு நடத்துவதற்காக அரங்கப்பணிகள் நிறைவடைந்து அந்த இடமும் தயாராகிவிட்டது. எனவே தாமதிக்காமல் படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்று சொல்கின்றனராம்.
இப்படி இருவேறு கருத்துகள் நிலவுகின்றனவாம். இறுதியில் என்ன முடிவெடுக்கிறார்கள்? என்பது நாளை தெரிந்துவிடும்.