கஜினிகாந்த் – திரைப்பட விமர்சனம்
இந்தியா மீது 17 முறை படையெடுத்தவர் கஜினிமுகமுது. விடாமுயற்சிக்கு உதாரணமாக அவரைச் சொல்வார்கள். ஏ.ஆர்.முருகதாஸ், மறதிக்காரரை மையமாகக் கொண்ட கதைக்கு கஜினி என்று பெயர் வைத்தவுடன், கஜினி என்றால் மறதிக்காரர் என்ற அடையாளம் வந்துவிட்டது.
கஜினிகாந்த் அதை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
தர்மத்தின்தலைவன் பட ரஜினி போல் ஞாபக மறதிக்காரர் ஆர்யா. ஒரே நேரத்தில் அழகான பெண்ணின் காதலுக்கும், காதலியின் அப்பாவுடைய தீவிர வெறுப்புக்கும் ஆளாகிறார் ஆர்யா.
காதலில் வென்றாரா? என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ஏற்கெனவே வந்த பல படங்களின் காட்சிகளை நினைவுபடுத்தினாலும் சிரிப்புக்குப் பஞ்சமில்லை.
ஞாபகமறதிக்காரர் வேடத்துக்கு ஆர்யா பொருத்தமாக இருக்கிறார். படம் முழுக்கச் சிரிக்கவைப்பது, காதலி நிராகரித்துவிட்டாள் என கலங்கி அழும்போது, படத்தில் இடம்பெறும் ஒரே ஒரு சண்டைக்காட்சியில் சிறப்பாகச் சண்டை போடுவதுமென எல்லாவற்றையும் செய்துவிட்டார்.
அவருக்குப் பக்கபலமாக கருணாகரனும் சதிஷூம். இருவரில் யாருடைய தேதி கிடைக்கிறதோ அவரை ஆர்யாவோடு கோர்த்துவிடுகிறார் இயக்குநர். அவர்களும் ஆர்யாவின் பேச்சுக்குப் பொருத்தமாகப் பதில் பேசி சிரிக்கவைக்கிறார்கள்.
நாயகி சாயிஷா அழகுப்பதுமை. பாடல்களில் உடலழகைக் காட்டி மகிழ்விக்கிறார். நடிக்கவும் முயல்கிறார்.
நாயகியின் அப்பாவாக வரும் சம்பத், நாயகனின் அப்பாவாக வரும் ஆடுகளம் நரேன் ஆகியோரும் சிறப்பு. அதிலும் ஆடுகளம் நரேனின் ஆட்டம் அதிரடி.
மொட்டை ராஜேந்திரன், நீலிமாராணி, உமாபத்மநாபன் ஆகியோர் தங்கள் பங்கை நன்றாகச் செய்திருக்கின்றனர்.
வில்லனாக வரும் லிஜீஷ் கவனிக்கவைக்கிறார்.
பள்ளுவின் ஒளிப்பதிவு, பாலமுரளிபாலுவின் இசை ஆகியனவும் படத்துக்குத் தேவையான அளவு இருக்கிறது.
ஒருவரிக் கதையை வைத்துக்கொண்டு சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சந்தோஷ்பிஜெயகுமார். அங்கங்கே சீரியல் எஃபெக்ட் வருகிறது. அதைத் தவிர்த்திருக்கலாம்.
இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமலும் வாய்விட்டுச் சிரிக்க வைக்கலாம் என்பதற்கு இப்படம் சிறந்த எடுத்துக்காட்டு.











