மஞ்சிமாமோகன் மீது காதல் கொண்டது எப்படி? – கவுதம் கார்த்திக் வெளிப்படை
தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகர் முத்துராமனின் பேரனும் நடிகர் கார்த்திக்கின் மகனுமான கவுதம்கார்த்திக், 2013 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் கால் பதித்தார்.
அதன்பின் நிறையப் படங்களில் நடித்திருக்கும் அவர் தற்போது, 1947 மற்றும் பத்துதல ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மலையாளத் திரையுலகில், 1997 முதல் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்துவிட்டு 2015 முதல் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர் மஞ்சிமாமோகன்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அதன்பின் பல படங்களில் நடித்திருக்கிறார்.
2019 ஆம் ஆண்டு வெளியான தேவராட்டம் படத்தில் கவுதம்கார்த்திக்கும் மஞ்சிமாமோகனும் சேர்ந்து நடித்திருந்தார்கள்.
இப்போது இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள்.இது இருவீட்டார் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணம்.
நவம்பர் 28 அன்று சென்னையில் அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் கலந்து கொள்ள மிக எளிமையாகத் திருமணம் நடைபெறவிருக்கிறதாம்.
இத்தகவலை இன்று மாலை ஊடகவியலாளர்களிடம் அவர்கள் இருவரும் சேர்ந்தே தெரிவித்தனர்.
அதன்பின், தேவராட்டம் படத்தில் நடித்த போதே காதல் மலர்ந்ததா? என்று கேட்டதற்கு கவுதம்கார்த்திக் கூறியதாவது…
தேவராட்டம் படத்தில் நடித்தபோது நாங்கள் நண்பர்கள் மட்டுமே. அதன்பின் ஓராண்டுக்குப் பிறகு நான் அவரிடம் காதலைச் சொன்னேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு காதலை ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார். அந்த இரண்டு நாட்களும் பயத்துடனே இருந்தேன் என்றார்.
மஞ்சிமா மீது காதல் வரக் காரணம்?
அவர் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவர். உறுதியானவர். நான் மனச்சோர்வு அடையும் நேரங்களில் அவரிடம் பேசுவேன். அப்போது அவர் கொடுக்கும் ஊக்கம் எனக்குப் பெரிய ஆறுதலாக இருக்கும். விளையாட்டுப் பையனாக இருந்த என்னை ஒரு ஆளாக மாற்றியது அவர்தான். அதனால்தான் காலமெல்லாம் அவர் உடன் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். காதலித்தேன்.
உங்கள் வீடுகளில் காதலை ஏற்றுக் கொண்டார்களா?
இருவீட்டாருக்கும் நாங்கள் காதலிப்பதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டனர் என்றார் கவுதம்கார்த்திக்.
திருமணத்திற்குப் பிறகு நடிப்பீர்களா? என்று மஞ்சிமாமோகனிடம் கேட்டபோது?
நிச்சயம் நடிப்பேன் என்றார்.
கவுதம்கார்த்திக் நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்தது எந்தப்படம்?
ரங்கூன், ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் ஆகிய படங்களில் அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றார்.
பிறகு இருவரும் சேர்ந்து, எங்களுடைய திரைப்பயணத்தில் நீங்கள் அனைவரும் ஆதரவாக இருந்தீர்கள். அதேபோல் உங்கள் அனைவரின் ஆதரவும் ஆசியும் எங்களுக்கு இருக்கவேண்டும், திருமணம் முடிந்த பின்பு மீண்டும் உங்களைச் சந்திக்கிறோம் என்றனர்.











