ஏ ஆர் எஸ் ஸ்டுடியோவுக்குத் தடை விதித்த ஃபெப்சி – காரணம் என்ன?
சென்னை போரூர் அருகே பெரிய நிலப்பரப்பில் அமைந்துள்ள திரைப்படப் படப்பிடிப்புக்கான அர்ங்கம் ஏஆர்எஸ் கார்டன். பிரபல நடிகைகள் அம்பிகா, ராதா மற்றும் அவர்களின் அம்மா சரஸ்வதி ஆகியோர் பெயர்களில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த ஸ்டுடியோ.
சென்னையில் வாகினி உட்பட பல படப்பிடிப்பு அரங்குகள் மூடப்பட்டுவிட்டன.ஏவிஎம், பிரசாத், ஏஆர்எஸ் ஸ்டுடியோ ஆகியன இன்னும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
தமிழின் பல முக்கிய படங்கள், குறிப்பாக சின்ன பட்ஜெட் படங்களுக்கு மிக முக்கிய இடமாக இருக்கிறது ஏஆர்எஸ்.
1984 ஆம் வருடம் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்டது. ஏராளமான படங்கள் இந்த ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டன. ஆனால் இப்போது படப்பிடிப்புகள் பெரும்பாலும் வெளியூர்களுக்கு மாறிவிட்டன என்பதால் சின்னப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் இங்கு படப்பிடிப்பு நடத்துகின்றன.
இந்நிலையில், இங்கு படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் இங்கு படப்பிடிப்பு நடத்தினால் கலந்துகொள்ளக்கூடாது என்று திரைப்படத் தொழிலாளர்கள் சங்கமான ஃபெப்சியும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் உத்தரவிட்டுள்ளனவாம்.
இதனால் கிட்டத்தட்ட ஒரு மாதம் அங்கு படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதற்கு என்ன காரணம்?
பிலிம்சேம்பர் அமைப்பில் இருக்கும் காட்ரகட்டபிரசாத் எனும் தயாரிப்பாளர், அம்பிகா,ராதா ஆகியோரின் சகோதரர் அர்ஜுனுக்கு சுமார் 25 இலட்சம் கடன் கொடுத்துள்ளார். அதில், சுமார் 19 இலட்சம் திருப்பிக் கொடுக்கப்பட்டுவிட்டதாம். மீதி ஆறு இலட்சம் பணம் சம்பந்தமாகப் பேசுகிற நேரத்தில் தயாரிப்பாளர் வார்த்தை தடித்ததாகவும் அதனால் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.அதனால் அந்த ஆறு இலட்சம் கொடுக்கப்படாமல் இருக்கிறதாம்.
இதனால்,தயாரிப்பாளர் காட்ரகட்டபிரசாத் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவரிடம் ஏஆர்எஸ் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடத்தத் தடைவிதிக்கச் சொல்லி அழுத்தம் கொடுத்திருக்கிறார். அவரும் அதை ஏற்று ஃபெப்சி தலைவரிடம் சொல்லியிருக்கிறார்.
ஃபெப்சி தலைவரும் இதை நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கிறார்.இதனால் அங்கு படப்பிடிப்புகள் நடக்கவில்லையாம்.
இரண்டு தனி நபர்களுக்கான கொடுக்கல் வாங்கல் சிக்கலில் திரைத்துறையின் இரண்டு பெரிய அமைப்புகள் இவ்வாறு செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.












