சினிமா செய்திகள்

திரையுலகில் மணிவிழா கொண்டாடும் ஏவிஎம் சரவணன்

தமிழ்த்திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் ஸ்டுடியோஸ். இந்நிறுவனத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும், ஏவிஎம் சரவணன் அமரர் ஏவி மெய்யப்பன் – இராஜேஸ்வரி அம்மையாரின் மகன்.

இவர் 3-12-1939ல் பிறந்தார். தன்னுடைய 18 ஆவது வயதில்
9-4-58 ஆம் ஆண்டு அன்று ஏவிஎம் ஸ்டூடியோவிற்கு பணியாற்ற வந்தார். 9-4-2018 ஆம் நாளோடு 60 ஆண்டுகள் நிறைவடைந்தது.அவர் திரைத்துறையில் மணி விழா காணுகிறார்.

ஏவிஎம் ஸ்டூடியோ நிர்வாகம், படத்தயாரிப்பு, விநியோக உரிமை, திரையரங்குகளில் படங்களை வெளியிடுவது என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றினார்.

‘மாமியார் மெச்சிய மருமகள்’ (1958) முதல் இன்று வரை தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும், 125 படங்கள் தயாரிக்க துணை நின்றார்.

சென்னை மாநகர ஷெரிப்பாகவும் 2 வருடங்கள் பதவி வகித்தார். இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் (FPAI), அகில உலக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவராகவும் (FIAAP) பதவி வகித்துள்ளார்.

தமிழக அரசின் கலைமாமணி விருது, ராஜா சாண்டோ விருது, சத்யபாமா பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

முயற்சி திருவினையாக்கும், மனதில் நிற்கும் மனிதர்கள் (4 பாகங்கள்), ஏவிஎம் 60 சினிமா ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.

இப்படிப் பல அனுபவங்கள் பெற்றுள்ள ஏவிஎம் சரவணன், தினந்தந்தியில் ‘நானும் சினிமாவும்’ என்ற தலைப்பில் தொடர் எழுதினார். அத்தொடரை தொகுத்து தினத்தந்தி பதிப்பகம் ‘நானும் சினிமாவும்’ என்ற நூலை வெளியிட்டுள்ளது.

இந்த நூலை ஏவிஎம் சரவணன் திரைத்துறைக்கு வந்து 60ஆம் ஆண்டில் நடிகர் சிவகுமார் வெளியிட, நல்லி குப்புசாமி செட்டி பெற்றுக் கொண்டார்.

கவிப்பேரரசு வைரமுத்து, வசனகர்த்தா ஆரூர்தாஸ், ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், டைட்டன் ரகு, பத்திரிகையாளர் நடராஜன், டாக்டர் மயிலப்பன், ராஜா வெங்கட்ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் ஏவிஎம் சரவணன் குடும்பத்தார் திருமதி.லட்சுமி சரவணன், நித்யா குகன், உஷா சரவணன், சித்தார்த், ஹரினி சித்தார்த் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

ஏவிஎம் நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களும் பங்கு பெற்றார்கள். விழாவிற்கு வந்திருந்தவர்களை எம்.எஸ்.குகன், அருணா குகன், அபர்ணா குகன், மக்கள்தொடர்பாளர் பெருதுளசி பழனிவேல் ஆகியோர் வரவேற்றார்கள்.

நேற்று வந்தோர் இன்று காணோம் எனும் சூழலில் இருக்கிற தமிழ்த் திரையுலகில் அறுபது ஆண்டுகள் பயணித்துள்ளார் ஏவிஎம் சரவணன் என்பது வியப்பான செய்தி.

Related Posts